Published : 08 May 2018 08:37 PM
Last Updated : 08 May 2018 08:37 PM

ஆபாச புகைப்பட விவகாரம்: நிவேதா பெத்துராஜ் கடும் சாடல்

ஆபாச புகைப்பட விவகாரம் தொடர்பாக, விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நிவேதா பெத்துராஜ் கடுமையாக சாடியிருக்கிறார்.

ஜெயம் ரவியுடன் ‘டிக்:டிக்:டிக்’, வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’, விஜய் ஆண்டனியுடன் ‘திமிரு பிடிச்சவன்’ மற்றும் எழில் இயக்கத்தில் ‘ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். சமீபமாக வேறு ஒரு நடிகையின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு, இது நிவேதா பெத்துராஜ் தான் என்று சமூகவலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது.

இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் கூறியிருப்பதாவது:

''கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகைப்படங்களை வெளியிட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவனக்குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை.

என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இதன் தொடர்பாக நான் சட்ட ஆலோசனை செய்து தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்.

ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன்.ஆயினும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது. இந்த கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு, என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை''.

இவ்வாறு நிவேதா பெத்துராஜ் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x