Published : 08 May 2018 05:28 PM
Last Updated : 08 May 2018 05:28 PM

தமிழக மாணவர்களுக்கு உதவிய பினராயி விஜயனின் பாதம் தொட்டு வணங்குகிறேன்: சூர்யா நெகிழ்ச்சி

கேரளாவில் நீட் தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களுக்கு உதவிய கேரள மக்கள், கேரள முதல்வர் பினராயி விஜயனின் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில்  சூர்யா பேசும்போது இதனை தெரிவித்தார்.

சூர்யாவுடன் கேரளாவின் பிரபல திரைப்பட நட்சத்திரங்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோரும் உடன் இருந்தனர்.

விழாவில் சூர்யா பேசியதாவது,”கிட்டத்தட்ட 5,000 மாணவர்கள் நீட் தேர்வு எழுத தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பேருந்து, ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் தகவல் மையத்தை இலவசமாக அமைத்து கொடுத்து  தாய்நாடு போல் உணர வைத்த கேரள அரசுக்கு நன்றி. கேரள அரசையும், கேரள முதல்வர் பினராயி விஜயனையும் பாதம் தொட்டு வணங்குகிறேன்” என்று கூறினார்.

முன்னதாக நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் தமிழகத்தின் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு எழுத கேரளாவுக்கு வந்த தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகளையும், அவர்களுக்கு உதவி மையங்களையும் ஏற்படுத்த முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x