Published : 27 Aug 2017 06:38 PM
Last Updated : 27 Aug 2017 06:38 PM
ஆரவ்வின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக மீண்டும் குறும்படம் ஒன்றை வெளியிடவுள்ளார் கமல். இதனால் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி புத்துணர்ச்சி பெரும் சூழல் உருவாகியுள்ளது.
ஓவியா, ஷக்தி, காயத்ரி ஆகியோர் வெளியானதிலிருந்தே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தன்னுடைய சுவாரஸ்யத்தை இழந்து வருகிறது. பிந்து மாதவி, சுஜா வாரூணி, ஹரிஷ், காஜல் ஆகியோர் புதிதாக 'பிக் பாஸ்' வீட்டிற்குள் அனுப்பப்பட்டாலும் மக்களிடையே யாருமே எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை.
கடந்த வாரம் 'பிக் பாஸ்' போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட 'கொலையாளி' பணி மட்டுமே கொஞ்சம் மக்களிடையே சுவாரஸ்யத்தை உண்டாக்கியது. ஆனால், பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை.
வாரத்தின் இறுதி நாட்களில் கமல், 'பிக் பாஸ்' போட்டியாளர்களோடு பேசி வருகிறார். இதில் நேற்றைய (ஆகஸ்ட் 26) நிகழ்வில் போட்டியாளர்களுடன் கமல் பெரிதாகப் பேசவில்லை. அவர்களுக்கென்று ஒரு நீதிமன்றத்தை உருவாக்கி, அவர்களைப் பேசவிட்டு தான் நீதிபதியாக அமர்ந்து கொண்டார். இந்த வாரம் 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து ரைசா வெளியேறுவார் என்று தெரிகிறது
மேலும், சினேகனுக்கு, ஆரவ்விற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்த சண்டையில், ஆரவ் சினேகனிடன் தான் மன்னிப்புக் கேட்டதாக தெரிவிக்கிறார். ஆனால், கமலோ கேட்கவில்லை என்று தெரிவிக்கிறார். இது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில், ஆரவ்விற்கு ஒரு குறும்படம் காட்டுவதாக கமல் தெரிவித்துள்ளார்.
ஓவியா - ஜூலி இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், குறும்படமொன்றை வெளியிட்டு ஓவியாவின் பக்கம் தான் நியாயம் என்று கமல் நிரூபித்தார். அந்த வகையில் மீண்டும் குறும்பட யுத்தியை கையில் எடுத்திருப்பதால் மீண்டும் சுவராஸ்யமாகி இருக்கிறது 'பிக் பாஸ் நிகழ்ச்சி'. இந்த நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 27) ஒளிபரப்பாக இருக்கிறது.
மேலும், இன்று 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்த்தி, ஜூலி, சக்தி, பரணி ஆகியோர் கமலுடன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கலந்துரையாடவுள்ளார்கள். மேலும், இன்னொருவரும் கலந்து கொண்டுள்ளார். இன்னும் வேறு யாராவது இருக்கீங்களா என்று கேட்க, 'ஓவியா' என்று பார்வையாளர்கள் கத்துவது போன்று இன்றைய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஓவியா கலந்து கொண்டாரா, என்ன பேசினார், ஆரவ்வின் குற்றச்சாட்டு என்னவானது, ரைசா வெளியேற்றப்படுவாரா உள்ளிட்ட சுவாரஸ்யங்களுடன் இந்த வாரம் முடியப் போகிறது. வரும் வாரத்திலிருந்து இந்த சுவாரஸ்யம் தொடருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT