Published : 24 Aug 2017 03:46 PM
Last Updated : 24 Aug 2017 03:46 PM
திரையரங்குகளில் 'விவேகம்' படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று(ஆகஸ்ட் 24) வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சியிலிருந்தே தமிழக திரையரங்குகளில் அஜித் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழகத்தில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் விற்கப்பட்ட டிக்கெட்கள் மட்டுமே சரியான விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அனைத்துமே இணையம் வெளியாக விற்கப்பட்டதால், டிக்கெட் விலை, ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை அனைத்துமே டிக்கெட்களில் அச்சிடப்பட்டு இருந்தது.
இதர திரையரங்குகள் அனைத்திலுமே டிக்கெட் விற்பனை அதிக விலைக்கு விற்றிருப்பது தெரியவந்துள்ளது. ரசிகர்கள் காட்சி என்று ஒவ்வொரு டிக்கெட்டுமே ரூ. 300ல் தொடங்கி ரூ.2000 ரூபாய் வரை விற்றிருக்கிறார்கள். இதில் எவ்வளவு டிக்கெட் விலை, ஜிஎஸ்டி வரி எவ்வளவு என எந்தவொரு தகவலுமே டிக்கெட்களில் அதிகாரப்பூர்வமாக அச்சிடப்படவில்லை.
சமீபத்தில் திரையரங்கில் டிக்கெட் விலை நிர்ணயம் தொடர்பாக நடைபெற ஆலோசனை கூட்டத்தில், தற்போதுள்ள டிக்கெட் விலை + ஜிஎஸ்டி வரி என்று தமிழக அரசு தெரிவித்தது. இதனை திரையரங்கு உரிமையாளர்கள் யாருமே பெரிதுப்படுத்தவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
பல்வேறு திரையரங்குகளில் கொடுக்கப்பட்ட டிக்கெட்களில் வெறும் சீட் எண் மட்டுமே இருந்ததே தவிர, டிக்கெட் விலை என்ன என்பதே குறிப்பிடவில்லை. இது மிகப்பெரிய குற்றம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சில இடங்களில் ரசிகர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கருத்து மோதல்கள் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT