Published : 26 Jul 2017 05:38 PM
Last Updated : 26 Jul 2017 05:38 PM
நான் செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது என்று சமீபத்திய பேட்டி குறித்த சர்ச்சைக்கு தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட ஊர்களில் விளம்பரப்படுத்தி வருகிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இன்னும் வெளியீட்டு தேதி முடிவாகவில்லை.
ஹைதராபாத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, 'சுச்சி லீக்ஸ்' உள்ளிட்ட விஷயங்களைப் பற்றிக் கேட்டதால், 'முட்டாள்தனமான பேட்டி' என மைக் கழட்டிவிட்டு வெளியேறினார். பிறகு சிறிது நேரத்தில் திரும்பி, படம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தார். தனுஷின் இந்த செயல் சர்ச்சையானது. அவர் அப்படி செய்திருக்கக்கூடாது என்றும் சிலர் கருத்து தெரிவித்தார்கள்.
இந்நிலையில் இச்செயல் குறித்து பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார் தனுஷ். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொதுவாக நான் அமைதியான சுபாவம் உடையவன். ஆனால் என் குணம் சாராத வழியில் நான் அதனைச் செய்துவிட்டேன். என்னுடைய நோக்கம் மிகத் தெளிவானது. நான் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால் அதனை தவிர்ப்பதற்காக நான் செய்தது தேவையற்றது.
உண்மையாகக் கூற வேண்டும் என்றால் நான் இரண்டு வாரங்களாக தூங்கவில்லை. வரவிருக்கும் என்னுடைய புதிய படத்துகான பணியில் பிஸியாக இருக்கிறேன். நான் செய்தது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நான் அந்த பத்திரிகையாளரிடம் அடுத்த கேள்விக்குச் செல்லுங்கள் என்று கேட்டிருக்க வேண்டும்
இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT