Published : 29 Jul 2016 12:56 PM
Last Updated : 29 Jul 2016 12:56 PM
ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கபாலி' 6 நாட்களில் ரூ.320 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், ரித்விகா, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் 6 நாட்களில் 320 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் தாணு "இன்று காலை சூப்பர் ஸ்டாரை சந்தித்து பழைய கால நினைவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நான் ரஜினி சாரும் படம் பண்ணுவது குறித்து பேசியிருக்கிறோம். சில படங்களின் பேச்சின் போது தெலுங்கு விற்றுவிட்டார்கள் சார், உங்களுக்கு என அங்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது. விட்டுவிட வேண்டாம் என்பேன்.
திடீரென்று ஒரு நாள் அழைத்து, இப்போது நாம ஒரு படம் பண்ணலாம் தாணு என்றார். மூன்று இயக்குநர்களோடு பயணித்தோம். இறுதியில் செளந்தர்யா தான் 'மெட்ராஸ்' ரஞ்சித் எப்படியிருக்கும் என கேட்டார். நல்லாயிருக்கும் என்றேன். கதை நல்லாயிருக்கிறது என்று ரஜினி சார் அனுப்பி வைத்தார். அவரிடம் நான் கதை எதுவும் கேட்கவில்லை, முழுமையாக கதை முடியுங்கள் என்று நம்பிக்கை அளித்து அனுப்பி வைத்தேன்.
45 நாட்கள் கழித்து நானும், ரஜினி சாரும் உட்கார்ந்து 'கபாலி' கதையைக் கேட்டோம். கதைச் சொல்லி முடிந்தவுடன் நான் எழுந்து கை தட்டினேன். அதற்குப் பிறகு நான் இக்கதையில் தலையிடவில்லை. 24 மணி நேரம் உழைக்கக் கூடியவர் ரஜினி சார். சில நாட்கள் காலை 7 மணிக்கு வந்து அடுத்த நாள் காலை 4 மணிக்கு சென்றார். ஏன் சார் இப்படி எனக் கேட்டால் "ரொம்ப சுவாரஸ்யமா பணியாற்றி வருகிறார்கள். போகலாம்" என்று தெரிவித்தார். தலையைக் கோதிக் கொண்டு வரும் காட்சியில் அவருக்கு பயங்கரமான காய்ச்சல், அந்த தருணத்திலும் நடித்து கொடுத்தார். படம் பார்த்துவிட்டு, மிகவும் பெருமையுடன் பேசினார். 'தளபதி'யும், 'நாயகன்'ம் கலந்த கலவை தான் 'கபாலி' என ரஜினி தெரிவித்தார். ரஞ்சித் க்ரேட் என்றார்.
இப்போது தான் முனீர் கண்ணையாவிடம் பேசினேன். சென்னையில் மட்டும் 6 நாளில் ரூ.6 கோடி வசூல் செய்திருப்பதாக சொன்னார். 100 ஆண்டுக்கால திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றார். வெளிநாடுகளில் எல்லாம் வசூல் மழை கொட்டுகிறது. பெரிய நடிகர்கள் எல்லாம் இப்படத்தின் வசூல் குறித்து ட்வீட் செய்திருக்கிறார்கள்.
நிறைவான வசூல் கொட்டி குவித்துக் கொண்டிருக்கும் போது, தேவையில்லாத விமர்சனங்களை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை. எங்களுடைய பயணம் சீரானது. ரஞ்சித்தை அழைத்து மீண்டும் எனக்கு ஒரு படம் பண்ண வேண்டும் என சொல்லியிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT