Published : 02 Oct 2015 08:56 AM
Last Updated : 02 Oct 2015 08:56 AM

5 ஆண்டுகளாக விஜய் வரி ஏய்ப்பு: வருமானவரித் துறை

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரிச் சோதனையில் ரூ.25 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்தது தெரியவந்துள்ளது.

நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் சமந்தா, நயன்தாரா ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக முழுமையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரிச் சோதனையில் ரூ.25 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்தது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சோதனையின்போது ரூ.2 கோடி ரொக்கப் பணமும், ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, 'புலி' படத் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினரின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர்.

சென்னை, மதுரை, நாகர்கோவில், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட 32 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 25 இடங்களில் சோதனை நடந்தது. வருமானவரித் துறை அதிகாரிகள் 300-க்கும் மேற்பட்டோர் 32 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனை குறித்து 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு வருமானவரித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உட்பட 10 பேரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டோம். பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்போதைக்கு யார் யார் வீட்டில் எவ்வளவு பணம், நகை பறிமுதல் செய்தோம் என்ற தகவலை அளிக்க முடியாது. ஆனால், ஒட்டுமொத்தமாக ரூ.2 கோடி ரொக்கப் பணமும், ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்த சோதனை மூலம் நாங்கள் முக்கியமாக கண்டுபிடித்தது என்னவென்றால், இவர்கள் அனைவருமே வருமான வரி செலுத்தி வந்துள்ளனர். இருந்தாலும் அதை முழுமையாக செலுத்தாமல், ஒரு பகுதி மட்டும் செலுத்திவிட்டு வரி ஏய்ப்பு செய்திருக்கின்றனர். சோதனைக்குள்ளான தயாரிப்பாளர்கள், பினான்ஸியர்கள் கடந்த 6 ஆண்டுகளாக இவ்வாறு வரி ஏய்ப்பு செய்துள்ளனர். அதேபோல் நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் சமந்தா, நயன்தாரா கடந்த 5 ஆண்டுகளாக பாதியளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x