Published : 30 Mar 2017 11:19 AM
Last Updated : 30 Mar 2017 11:19 AM
'பாகுபலி 2' இறுதி சண்டைக்காட்சிக்காக பிரபாஸ், ராணாவோடு 3000 துணை நடிகர்கள், 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2'க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'-ல் விடை தெரியவிருக்கிறது.
மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் ஏப்ரல் 28-ல் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியளவில் 'பாகுபலி' படத்தின் இறுதி சண்டைக்காட்சி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதைப் போலவே 'பாகுபலி தி கன்க்ளூஷன்' இறுதி சண்டைக்காட்சியும் பேசப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
'தி ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ்' படத்தின் சண்டை வடிவமைப்பாளரான ஜான் க்ரிஃபித், 'பாகுபலி தி கன்க்ளூஷன்' பட சண்டைக்காட்சியை வடிவமைத்துள்ளார். அவரோடு லீ விட்டேகர் உள்ளிட்டவர்கள் உடனிருந்து மேற்பார்வையிட்டுள்ளனர். இச்சண்டைக்காட்சிக்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான போர் காட்சிக்கான அரங்கம் அமைத்து அதில் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
பிரபாஸ், ராணா உள்ளிட்ட படக்குழுவோடு சுமார் 3000 துணை நடிகர்கள் போர் வீரர்களாக இதில் இடம்பெற்று இருக்கிறார்கள். இதனை காட்சிப்படுத்தும் முன்பு சுமார் நான்கு மாதங்கள் படக்குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இச்சண்டைக்காட்சியை மட்டும் 65 நாட்கள் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இதற்காக பிரத்யேகமாக போர் உபகரணங்களை வடிவமைத்துள்ளார் கலை இயக்குநர் சாபுசிரில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT