Published : 23 Mar 2016 05:00 PM
Last Updated : 23 Mar 2016 05:00 PM
'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்தில், நடிகர் அக்ஷய் குமார் பாத்திரத்தின் கெட்டப் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்புகளைத் தாண்டியும் இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது தயாரிப்பு தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இயக்குநர் ஷங்கர் - ரஜினிகாந்த் இணையின் '2.0' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அதிக பொருட்செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தலைநகர் டெல்லியின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பிரம்மாண்டமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.
இதில் நடிகர் அக்ஷய்குமார் வில்லன் பாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் கள்ளத்தனமாக வெளியே வரக்கூடாது என பலத்த பாதுகாப்பு போடப்பட்டும், தற்போது அக்ஷய்குமாரின் படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
படத்தில் ஒரு விஞ்ஞானியாக ரிச்சர்ட் என்ற பாத்திரத்தில் நடிக்கும் அக்ஷய்குமார், தவறாகப் போகும் ஒரு பரிசோதனையின் காரணமாக உருவ சிதைவுக்கு ஆளாகிறார். இந்தப் பாத்திரத்துக்காக அவரது மொத்த உருவமும் ஒப்பனையில் மாற்றப்பட்டுள்ளது” என படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். கூரான வெளியே நீண்டு இருக்கும் பற்கள், குத்தி நிற்கும் முடியாக புருவம், வெள்ளை முடி என அடையாளம் காண முடியாதபடி அக்ஷய்குமாருக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்கள் டெல்லி படப்பிடிப்புக்குப் பிறகு, படக்குழு மொராக்கோ சென்று அங்கு படப்பிடிப்பைத் தொடர்கிறது. டெல்லி படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 30-ஆம் தேதி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT