Last Updated : 09 Jun, 2014 03:01 PM

 

Published : 09 Jun 2014 03:01 PM
Last Updated : 09 Jun 2014 03:01 PM

ஸ்ரீதேவியை காக்கும் வீரனாக விஜய்?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீதேவி ராணியாகவும், அவரைக் காக்கும் வீரனாக விஜய்யும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'கத்தி' படத்தில் நடித்து வரும் விஜய், அப்படத்தினைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி இருக்கின்றன.

தொடக்க நிலையில் இருக்கும் இப்படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீதேவி, 'நான் ஈ' வில்லன் சுதீப் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் ஸ்ரீதேவி ராணியாக நடிக்க இருக்கிறாராம். அவரை காப்பாற்றும் போர் வீரனாக விஜய்யும், விஜய்க்கு குருவாக சுதீப்பும் நடிக்க இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், நட்ராஜ் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x