Last Updated : 07 May, 2014 12:41 PM

 

Published : 07 May 2014 12:41 PM
Last Updated : 07 May 2014 12:41 PM

வைரமுத்து பாடலைப் பாடிய இளையராஜாவின் மகள்

'அனேகன்' படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடிக் கொடுத்திருக்கிறார்.

'மாற்றான்' படத்தினைத் தொடர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்காக கே.வி.ஆனந்த் இயக்கிவரும் படம் 'அனேகன்'. தனுஷ் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் இது. அதுமட்டுமன்றி இதுவரை தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் இது.

தனுஷுடன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அமிரா நாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்காக வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மற்றவர் இசையில், அதிலும் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றை பவதாரிணி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆத்தாடி…ஆத்தாடி…’ எனத் தொடங்கும் அந்த பாடலை பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குநர் கே.வி.ஆனந்த் கூற, அதற்கு சம்மதித்த ஹாரிஸ் ஜெயராஜ், பவதாரிணியிடம் தகவல் தெரிவிக்க, அவரும் உடனே வந்து பாடிக் கொடுத்திருக்கிறார்.

பாண்டிச்சேரி, சென்னை, ஹைதராபாத், தெற்காசிய நாடுகளில் நடைபெற்று 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்த மாதத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது. விரைவில் இசை வெளியீடு நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x