Last Updated : 03 Feb, 2014 11:44 AM

 

Published : 03 Feb 2014 11:44 AM
Last Updated : 03 Feb 2014 11:44 AM

வைரமுத்துவோடு கூட்டணியிடும் யுவன்!

'இடம் பொருள் ஏவல்' படத்திற்காக முதன் முறையாக வைரமுத்து வரிகளுக்கு இசையமைக்க இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

லிங்குசாமி தயாரிப்பில் இயக்குநர் சீனு ராமசாமி, 'இடம் பொருள் ஏவல்' என்ற தலைப்பில் படமொன்றை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்திற்காக முதன் முறையாக வைரமுத்து பாடல் வரிகளுக்கு இசையமைக்க இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. முதன் முறையாக இக்கூட்டணியை உருவாக்கியிருக்கிறார் சீனு ராமசாமி.

யுவன் இசையில் பாடல்கள் எழுதுவது குறித்து வைரமுத்து, "ஒரு சில ஆண்டுகளுக்கு முன் யுவன் என்னிடம் ‘எனக்கு பாட்டு எழுத முடியாதா அங்கிள்’ என்று கேட்டார். எனக்கும் ஆசைதான். யுவனின் புதுப்புது ஒலியோடு, என்னுடைய முது மொழியும் சேர்ந்தால் புது இசை வருமே என்ற ஆவல் எனக்கும் இருந்தது.

ஆனால், அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். அதனால், அந்த சந்தர்ப்பத்தை அப்போது தட்டிக் கழித்தேன்.

இன்று , யுவன் அசைக்க முடியாத உயரத்திற்குச் சென்று விட்டார். இப்போது நேரம் எங்களுக்காக கனிந்ததாக நினைத்தேன். ‘இடம் பொருள் ஏவல்’ மூன்றும் ஒரு சேர கூடி வந்தது போலவே நினைத்து இந்த படத்தில் இணைந்துவிட்டேன்,” என்றார்.

வைரமுத்து வரிகளுக்கு இசையமைத்தது குறித்து யுவன், "பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்திற்கே அவரை பாட்டு எழுத கேட்டேன். எனக்கு நெருக்கமானவங்களே ஏதாவது பிரச்சனை வந்துடப் போகுதுன்னு விசாரிக்கிறாங்க. சினிமா, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுமே தனித்தனியா நான் பாக்கறது இல்லை.

என் அம்மாகிட்ட இருந்து நான் கத்துக்கிட்டது அன்பு செலுத்தறது மட்டும்தான். எதையும் அன்பால வெளிப்படுத்தினால் பிரச்சினை இருக்காது. அதைத்தான் நான் இப்போ செய்யறேன், ” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x