Published : 29 Apr 2016 12:50 PM
Last Updated : 29 Apr 2016 12:50 PM

லைக்கா ரூ.1 கோடி நிதி.. கமல் காலில் விழுந்த விஷால்..- சபாஷ் நாயுடு படப்பூஜை நெகிழ்ச்சிகள்

ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

இப்படத்திற்கு தலைப்பு 'சபாஷ் நாயுடு' என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார்.

வாடகை கொடுத்த கமல்

நடிகர் சங்க இடம் எந்தவித கடனும் இன்றி மறுபடியும் நிர்வாகிகளுக்கு வந்தவுடன் நடந்த முதல் விழா 'சபாஷ் நாயுடு' படப்பூஜையாகும். இதற்காக நடிகர் சங்கத்திற்கு 2.5 லட்சம் கொடுத்தார் கமல்.

மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் ரூ.1 கோடியை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக அளித்தார். சுபாஷ்கரன் கொடுத்த காசோலையை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார் கமல். அப்போது "இப்பணம் கிடைப்பதற்கு காரணம் கமல் சார் தான்" என்று கமல்ஹாசன் காலில் விழுந்து வணங்கினார் விஷால்.

கமலை வாழ்த்திய இளையராஜா

படத் துவக்க விழாவில் பேசிய இளையராஜா, "கட்டிடத்தை எழுப்ப வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்த நடிகர் சங்கத்தினருக்கு இங்கு ஒரு கட்டிடத்ததையே எழுப்பி விழா நடத்தி வரும் என் அன்பு சகோதரர் கமல் அவர்கள் நீடூடி வாழ வேண்டும். சபாஷ் நாயுடு" என்று பேசினார்.

மேலும், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்த போது கமலிடம் 'சபாஷ் நாயுடு' எப்படியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார் இளையராஜா. அத்தலைப்பு கமலுக்கு பிடித்துவிடவே அதையே தலைப்பாக வைத்துவிட்டார் கமல்.

ஒரே படத்தில் 2 மகள்கள்

'சபாஷ் நாயுடு' படத்தின் கமலின் 2 மகள்களும் பணியாற்ற இருக்கிறார்கள். கமல் - ரம்யா கிருஷ்ணன் இருவருக்கும் பிறந்த மகளாக ஸ்ருதிஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் உதவி இயக்குநராக அக்‌ஷரா ஹாசன் பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் 85% அமெரிக்காவில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

விழாவில் பேசிய ஸ்ருதிஹாசன் "எனக்கு வாழ்க்கை, கலை, சினிமா கொடுத்தவர் அப்பா. அவரோடு நடிப்பதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.

கட்டிடம் கட்டி முடித்த உணர்வு: நாசர்

'சபாஷ் நாயுடு' படத் துவக்க விழாவில் பேசிய நாசர் "கமல் அவர்கள் என்னிடம் படத்தின் தலைப்பு அறிமுக விழா பண்ண முடிவு பன்ணிருக்கிறோம். அதற்கு நடிகர் சங்கத்தின் இடம் தேவைப்படுகிறது, உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.

தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். இது நீங்கள் விளையாடிய இடம், நடனம் கற்றுக்கொண்ட இடம், நடிகர்களுக்கான ஒரு இடம் என்று கூறினேன். நாங்கள் கட்டிடம் கட்ட தான் வந்தோம். ஆனால் அதற்கு முன் இந்த விழா இங்கே நடைப்பெற்றது. ஏதோ கட்டிடம் கட்டி முடித்த உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் துவக்கமே பிரமாண்டமாய் இருப்பதில் மகிழ்ச்சி" என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x