Published : 27 May 2015 08:14 AM
Last Updated : 27 May 2015 08:14 AM

மீண்டும் வெடித்தது லிங்கா விவகாரம்: விநியோகஸ்தர்கள் - தயாரிப்பாளர் சங்கம் மோதல்!

'லிங்கா' விவகாரம் தொடர்பாக மீண்டும் அப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது.

டிசம்பர் 12, 2014 அன்று ரஜினி நடிப்பில் வெளியானது 'லிங்கா'. அத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக போராட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என விநியோகஸ்தர்கள் இறங்கினர். இதனைத் தொடர்ந்து மொத்த நஷ்டமான 33 கோடிக்கு தயாரிப்பாளர் சங்கம், ரஜினி தரப்பில் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டார்கள்.

அப்பேச்சுவார்த்தையில் இறுதியில் 12.5 கோடி ரஜினிகாந்த் தரப்பில் தாணு மற்றும் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கொடுத்ததாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார். அப்பணத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் பிரித்துக் கொடுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

ஆனால், 'லிங்கா' பிரச்சினையில் முன்னின்று செயல்பட்ட சிங்காரவேலன் மற்றும் சில விநியோகஸ்தர்களுக்கு மட்டும் 5.9 கோடியை பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை இன்னும் கொடுக்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இன்னும் எட்டப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, "திருச்சி ஏரியா -1.39 கோடி, நெல்லை ஏரியா - 80 லட்சம், செங்கல்பட்டு - 2.30 கோடி, மதுரை ஏரியா - 1.40 கோடி என மொத்தம் 5 கோடியே 89 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டது. எஞ்சிய தொகை 6 கோடியே 61 லட்சம் இன்றுவரை கொடுக்கப்படவில்லை.

பணத்தை தாணுவிடம் கேட்டால், ''திருப்பூர் சுப்பிரமணியனிடம் இருக்கிறது'' என்கிறார். ஒரு கட்டத்தில், ''பணமெல்லாம் இல்லை'' என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.

சங்கம் தலையிட்டு பேசி முடிக்கப்பட்ட இவ்விஷயத்தில் நாங்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டதாக கருதுகிறோம். ரஜினியின் தூதராக செயல்பட்ட திருப்பூர் சுப்பிரமணியம் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். உண்மையிலேயே திருப்பூர் சுப்பிரமணியம் ரஜினியின் தூதுவர்தானா?

இனியும் பொறுமை காக்கும் நிலையில் இல்லை. ரஜினி சார்பில் கொடுக்கப்பட்ட 12.50 கோடி முழுமையாக சம்பந்தப்பட்ட 'லிங்கா ' பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களிடம் இடைத்தரகர் தலையீடு இன்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

'லிங்கா' பட வெளியீட்டின்போது விநியோகஸ்தர்கள் பாக்கி தொகைக்கு ஈடாக கொடுத்த காசோலை சம்பந்தமாக வேந்தர் மூவீஸ் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது.

12.50 கோடிக்கு ஒப்புக்கொண்டபோது விநியோகஸ்தர்கள் மீது வேந்தர் மூவீஸ், தியேட்டர்காரர்கள் எப்பிரச்சினையும் கிளப்பமாட்டார்கள் என கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.

MG (மினிமம் கியாரண்டி) அடிப்படையில் திரையிட்ட தியேட்டர்காரர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கு கொடுத்த வாக்குறுதிப்படி கால்ஷீட் தரவேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே MG அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இழப்பீடு கிடைக்கும்.

எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசித்து முடிவெடுக்க 'லிங்கா' படத்தை MG அடிப்படையில் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் கூட்டுக் கூட்டம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக முடிவெடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரஜினியின் கால்ஷீட் இல்லையென்றால் 15 கோடி பணம்: சிங்காரவேலன்

'லிங்கா' விவகாரம் தொடர்பாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் பேசிய போது, "இப்பிரச்சினையில் ரஜினி தலையீட்டு உடனே இழப்பீடு தொகையை பெற்றுத் தரவேண்டும். திரையரங்க உரிமையாளர்களிடம் இருந்து எங்களுக்கு நெருக்கடி முற்றுகிறது. இல்லையென்றால் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு குறுகிய கால தயாரிப்பாக ரஜினி ஒரு படம் பண்ண வேண்டும். அவ்வாறு பண்ணவில்லை என்றால் இன்னும் 15 கோடி பணம் கொடுத்து இப்பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.

தயாரிப்பாளர் இன்னும் 6.5 கோடி தரவேண்டும்: திருப்பூர் சுப்பிரமணியம்

விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டிய திருப்பூர் சுப்பிரமணியத்திடம் பேசிய போது, "முதலில் தயாரிப்பாளர் 6 கோடி தான் கொடுத்தார். அதனை பிரித்துக் கொடுத்துவிட்டோம். தற்போது தயாரிப்பாளரின் மகளின் திருமணத்திற்கு பிறகு மேலும் 6.5 கோடி தருவதாக கூறியிருக்கிறார். அந்தப் பணம் வந்தவுடன் பிரித்து கொடுத்து விடுவோம். இது தான் நடக்கிறது. இதை விட்டு விட்டு நான் பேசியதை எல்லாம் பதிவு செய்து வெளியிடுகிறார்கள். இதே போல நான் வெளியிட்டால் சிங்காரவேலனின் என்ன செய்வார் என சொல்லுங்கள். சிறுபிள்ளை விளையாட்டு போல போய்க் கொண்டிருக்கிறது. மேலும், சிங்காரவேலன் தாணுவிடம் இருந்து 35 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு சென்றார் அல்லவா, அந்த பணத்தை பிரித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கொடுக்கவே இல்லை. அந்த பணம் முதலில் எங்கே என கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்.

விளம்பரப் பிரியர் சிங்காரவேலன்: தயாரிப்பாளர் தாணு காட்டம்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவிடம் பேசிய போது, "உங்களிடம் புகைப்பட ஆதாரம் கொடுத்துவிட்டேன். அப்படத்தில் பணம் வாங்கிவிட்டு அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்த பத்திரத்துடன் இருக்கிறார். பணம் வாங்கிவிட்டு இன்னும் ஏன் இவ்வளவு கொதிப்படைகிறார். ஏனென்றால் விளம்பரப் ப்ரியராக இருக்கிறார். அது தான் உண்மை. பணம் பெறதாவர்கள் அந்த ஏரியாவின் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து வந்தால் கண்டிப்பாக பணம் கொடுக்க இருக்கிறோம். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. தனித்தனியாக வந்து எங்களுக்கு பணம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். விநியோகத்தில் அனுபவம் இல்லாதவர்களால் தமிழ் சினிமா சீரழிந்து வருகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டுவோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x