Published : 05 Oct 2015 01:02 PM
Last Updated : 05 Oct 2015 01:02 PM

புலியை வேட்டையாடியதா சமூக வலைதள விமர்சனங்கள்?

ஒரு படத்தின் வசூலில், இணையதளத்தில் பிரபலமான விமர்சகர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் அடிக்கடிச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களில் குறும்பதிவுகள் இடுபவர்கள் ஒருபுறமிருக்க, தொடர்ச்சியாக திரைப்பட விமர்சனங்களை வெளியிட்டு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பிரபல இணையதள விமர்சகர்களாகத் திகழ்கின்றனர்.

'அஞ்சான்' படம் வெளிவந்தபோது, அப்படத்தின் வசூலுக்கு, இத்தகைய இணையதள விமர்சகர்களால்தான் பாதிப்பு ஏற்பட்டது. பலரும் படம் பார்க்காமல் விமர்சனம் செய்கிறார்கள் என்றெல்லாம் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, 'அஞ்சான்' நிலைமையே 'புலி'க்கும் வந்திருக்கிறது என்கிறார்கள். அப்படம் வெளியான அன்று காலை 10 மணிக்கு காட்சி ஆரம்பமானது. இடைவெளி வரும் முன்னரே 'மொக்கை படம்' என்று கருத்து தெரிவித்ததாக கூறுகிறார்கள். முதல் மூன்று நாட்கள் வசூல் என்பது விஜய் படத்துக்கு மிகவும் பெரியது என்பதால், இம்மாதிரியான கருத்துக்களால் பாதிக்கப்படுவதாகவும் ஆதங்கப்படுகிறார்கள் படக்குழுவினர்.

விமர்சனங்களால் வசூல் பாதிப்பா?

இணையதள விமர்சனங்களின் தாக்கம் குறித்து யூடியூபில் வீடியோ வடிவில் விமர்சனம் பதிவேற்றுபவர்கள், ஃபேஸ்புக்கில் முழுமையான விமர்சனம் எழுதுவோர் என சமூக வலைதளங்களில் பிரபல விமர்சகர்கள் சிலரிடம் பேசினேன். அவர்களில் பலரும், தங்களது பெயர்களை வெளியிட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துதான் தங்கள் கருத்தைச் சொன்னார்கள்.

"சார்.. எங்களுக்கு என்று சிறப்புக் காட்சி எல்லாம் திரையிடப்படுவதில்லை. நாங்கள் மக்களோடு மக்களாக 120 ரூபாய் செலவழித்து படம் பார்க்கிறோம். அப்படி பார்க்கும்போது, எங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.

நல்ல படமாக இருக்கும் பட்சத்தில், அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க "கண்டிப்பாக திரையரங்கில் போய் பாருங்கள். நல்ல படம்" என்று கூறுகிறோம்.

'தனி ஒருவன்' என்ற ஒரு திரைப்படம், காலையில் நாங்கள் டிக்கெட் புக் பண்ணும்போது மாலை காட்சிக்கு கூட டிக்கெட்கள் இருந்தன. சரியாக புக் ஆகவில்லை. இடைவெளியில் அற்புதமான படம் என்று கூறினோம். படம் முடிந்தவுடன் "One of the best movie of this year" என்றோம். அனைத்து விமர்சகர்களுமே நல்லாயிருக்கு என்றவுடன், டிக்கெட் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தன. இரண்டாம் நாள் நல்ல வசூல் பெற்று வெற்றியும் பெற்றது. இதற்கு காரணம் சமூக வலைத்தள விமர்சகர்கள்தான் என்றால் ஏற்றுக் கொள்வார்களா?

பத்திரிகையாளர்கள் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கும் போய் விமர்சனம் அடித்து, இணையதளம் அல்லது அலுவலகம் சென்று பதிவேற்ற வேண்டும். நாங்கள் அப்படியில்லை. படம் நல்லாயிருக்கா, நல்லாயில்லையா உடனே கூறிவிடுவோம்.

எங்களை இவ்வளவு குறைச் சொல்கிறார்கள் அல்லவா, ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம். நாங்கள் சூப்பர் படம் என்று கூறிய 'குற்றம் கடிதல்', 'கிருமி' ஆகிய படங்களின் வசூல் நிலவரம் என்ன? நாங்கள் எவ்வளவுதான் நல்ல படம் என்றாலும், மக்கள் மிகவும் தெளிவு சார். எங்களை குறை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். முதலில் நல்ல படம் எடுக்கச் சொல்லுங்கள். அப்புறமாக குறை சொல்ல சொல்லுங்கள்" என்றார்கள் ஆதங்கமாக.

"இன்னொரு விஷயமும் இருக்கிறது. படம் நல்லாயில்லை என்று போட்டுவிட்டால் நாங்கள் படும் அவஸ்தை இருக்கிறதே. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. தயாரிப்பு தரப்பில் இருந்து போன் பண்ணுவார்கள். ரசிகர்கள் போன் பண்ணி எங்களது குடும்பத்தினர் பற்றி அசிங்க அசிங்கமாக திட்டுவார்கள். இதை எல்லாம் வாங்க வேண்டும். இவற்றை மீறி தான் விமர்சனம் பண்ணி வருகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்" என்றார்கள் கோபமாக.

சமூக வலைத்தள விமர்சனங்களால் தவறில்லை

இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது, "என் பெயரை வெளியிட்டுவிடாதீர்கள். பிறகு சமூக வலைதள விமர்சகர்களுக்கு கொடி பிடிக்கிறான் என்பார்கள். உண்மையில், சமூக வலைதள விமர்சனம் தான் டிக்கெட் புக்கிங்கில் மாற்றம் தெரியப்படுத்தும். என்னைப் பொறுத்தவரை அது வரவேற்கத்தக்கது தான். என்னுடைய படங்களுக்கு சமூக வலைத்தளத்தில் என்ன சொல்கிறார்கள் என்றுதான் முதலில் பார்ப்பேன்.

அஜித் - விஜய் ரசிகர்கள் இணையத்தில் போடும் சண்டையால்தான் 'புலி' படத்தின் விமர்சனத்துக்கு முதலில் பிரச்சினை. நல்லாயில்லை என்ற கருத்து வெளிவந்த அடுத்த நிமிஷம் அஜித் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அதோட புகைப்படம் எல்லாம் கூட இணையத்தில் வந்ததை நான் பார்த்தேன். இப்படியிருக்கும் போது சமூக வலைதள விமர்சகர்கள் உள்ளிட்டவர்களை குறைச் சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை. எவ்வளவு பெரிய பட்ஜெட் படம் என்றாலும் தயாரிக்கலாம், அதற்கு படத்தில் விஷயம் வேண்டும்" என்றார்

என்ன சொல்கிறது 'புலி' படக்குழு?

'புலி' படக்குழுவினரிடம் விசாரித்தபோது, "இணையத்தில் வந்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், படத்தின் வசூல் இதுவரைக்கும் குறையவில்லை. ஸ்பெஷல் காட்சிகள் போன்றவை இருந்திருந்தால் இன்னும் வசூல் கூடியிருக்கும். வார விடுமுறை முடிந்த நிலையில் இனிதான் தான் மக்களிடையே படம் எப்படி வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது தெரியவரும்" என்றனர்.

இதனிடையே, அஜித், விஜய் ரசிகர்களிடையே ட்விட்டர், ஃபேஸ்புக்கில் நடந்து வரும் 'யுத்த' சேதாரங்களையொட்டி, வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோ ஒன்று இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ: