Published : 12 Dec 2015 11:44 AM
Last Updated : 12 Dec 2015 11:44 AM

பீப் பாடல் பிடிக்காவிட்டால் கேட்காதீர்: சர்ச்சை சிம்பு ஆவேசம்

'பீப்' பாடல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக யாருடைய கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சிம்பு காட்டமாக தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு 'பீப் சாங்' என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வெளியானது. ஆனால், அப்பாடல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கருத்துக்கள் நிலவின.

அப்பாடலில் உள்ள வரிகள் பல கொச்சையாக இருந்ததால், சில இளைஞர்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிம்பு, அனிருத் மீதான கழுவியூற்றல் படலம் நீடித்து வருகிறது.

இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. பலரும் அப்பாடல் சிம்பு எழுதியது தானா, அவருடைய குரல் தானா என்று கேள்வி எழுப்பினார்கள்.

இது குறித்து சிம்புவிடம் கேட்டபோது, "'பீப் பாடல்' வெளியானது பற்றி பலரும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்பாடலை முதலில் நான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. நானும் அனிருத்தும் இணைந்து பல்வேறு தளங்களில் சுமார் 150 பாடல்களை தயார் செய்து வைத்திருக்கிறோம். அதில் இருந்து ஒரு பாடலை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள்.

முதலில் அப்பாடல் ஏதாவது ஒரு படத்திலோ, ஆல்பத்திலோ இடம்பெறவில்லை. அது இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அப்பாடல் குறித்து ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்றும், பலரும் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... அதே இணையத்தில் தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக்களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.

நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு அன்பை பரிமாறுங்கள் என்று ஒரு பாடல் வெளியிட்டேன். அப்போது எனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? யாருடைய கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதேபோல், என்னுடைய பணியைப் பற்றி குறை சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x