Published : 22 Jan 2014 11:18 AM
Last Updated : 22 Jan 2014 11:18 AM

நடிகர் எஸ்.எஸ்.ஆர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவின் பழம்பெரும் கதாநாயகர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலம் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

‘பைத்தியக்காரன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் தவிர்க்க முடியாத நாயகனாக திகழ்ந்தவர். இவர் நடிப்பில் வெளியான ‘முதலாளி’ ‘பூம்புகார்’, ‘மறக்க முடியுமா’ திரைப்படங்கள் நூறு நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. ஒரு சிறந்த நடிகர் என்பதையும் கடந்து இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்று பல்வேறு முகங்களைக் கொண்ட இவருக்கு வயது 86. இவர் கடந்த சில நாட்களாக சுவாசக்கோளாறு மற்றும் சளித்தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.எஸ்.ஆரின் உடல்நிலை குறித்து ராதாரவி கூறியதாவது:

எஸ்.எஸ்.ஆரின் உடல்நிலையில் தற்போது கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி அருகில் இருந்து அவரைக் கவனித்து வருகிறார். எஸ்.எஸ்.ஆர் சினிமாவில் உச்சரிக்கும் வசனங்களை கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும். சாப்பாடே தேவையில்லை. அப்படி ஒரு குரல் வளம் கொண்டவர், நான் நேரில் சென்று நலம் விசாரித்தபோது பேசுவதற்குத்தான் கொஞ்சம் சிரமமாக உள்ளது என்றார். கம்பீர உச்சரிப்பு வளம் மிக்கவரிடம் இருந்து அப்படி ஒரு வார்த்தையை கேட்கவே கஷ்டமாக இருந்தது. எஸ்.எஸ்.ஆர் நடிகர் சங்கத்தலைவராக இருந்தவர். அவர் விரைவில் குணம் பெற இயற்கையை வேண்டுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x