Published : 16 Apr 2014 09:05 AM
Last Updated : 16 Apr 2014 09:05 AM

தெனாலிராமன் படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு தடை கோரிய மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

பழந்தமிழர் மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலர் வீரக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தெனாலிராமன் படத்தில், விஜயநகர சாம்ராஜ்யத்தில் பேரரசரான கிருஷ்ணதேவராயர் வேடத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ளார். அவர் கோமாளியைப் போன்று வேடமணிந்து பார்த்தாலே சிரிப்பு வருவது போன்று நடித்துள்ளார்.

பள்ளியில் படிக்கும்போது, கிருஷ்ணதேவராயர் மிகச்சிறந்த அரசர், இஸ்லாமியர்களின் படையெடுப்பில் இருந்து தென்னிந்தியாவைப் பாது காத்தவர், அவர் ஆட்சிக் காலத்தில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள், மிகச் சிறந்த போர் வீரனாகவும், மிகச்சிறந்த நகரமைப்பைக் கொண்ட தலைநகரத்தை நிறுவியவர் என்றும் பாடத்தில் படித்திருக்கிறோம்.

ஆனால், இந்த படத்தில் அவரை கோமாளியாக சித்தரித்துள்ளனர். கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவிகள், 52 குழந்தைகள் என்றும் படத்தில் காண்பிக்கின்றனர்.

பெருமை கொண்ட கிருஷ்ண தேவராயரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக வரலாற்றை திரித்துப் பேரரசரை நகைச்சுவையாகக் காட்டி யுள்ளனர். வருங்கால தலைமுறையினர் பாடப்புத்தகத்தில் கிருஷ்ணதேவராயர் பற்றி படிக்கும்போது அவரை கோமாளியாக நினைக்கத் தோன்றும். எனவே தெனாலிராமன் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எழிலரசு ஆஜராகி, வரலாற்றை திரித்துப் படம் எடுக்க அனுமதிக்கக் கூடாது. மக்கள் மத்தியில் சினிமா பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

அப்போது நீதிபதிகள், வரலாற்றை அப்படியே சினிமாவாக எடுக்க வேண்டும் என எந்த சட்டத்திலும் கூறவில்லை. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் அவரது உண்மையான வரலாறு கூறப்படவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x