Published : 22 Jun 2014 10:11 AM
Last Updated : 22 Jun 2014 10:11 AM

திரை விமர்சனம் : வடகறி

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் வழக்கம் போல எந்த சம்பந்தமும் கிடையாது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சதீஷ் (ஜெய்), மெடிக்கல் ரெப் பாக வேலை செய்துவருகிறான். அவ னது செல்போன் அரதப் பழசு. அது அவன் வாழ்க்கையில் பல பிரச்சினை களை உண்டாக்குகிறது. புதிய செல் போன் வாங்க முடியாத சூழலில், அந்த செல்போன் மேலும் பல அவமானங்களை அவனுக்குக் கொடுக்கிறது. இவன் கண்டதும் காதல் கொள்ளும் நவீனாவின் (ஸ்வாதி) கடைக்கண் பார்வை பட வேண்டுமென்றால் கையில் லேட்டஸ்ட் மாடல் போன் இருக்க வேண்டும் என வடகறி (எஃப்.எம். பாலாஜி) என்ற பட்டப் பெயர் கொண்ட நண்பன் உசுப்பிவிட, சதீஷ் ஒரு போனைத் திருடுகிறான். அது ஒரு ஐபோன்.

சதீஷின் அண்ணன் (அருள்தாஸ்) ஆட்டோ டிரைவர். எம்.ஜி.ஆர். பக்தர். வறுமையிலும் நேர்மையைக் கறாராகப் பின்பற்றிவரும் அவரைப் பார்த்து சதீஷின் மனசாட்சி விழித்துக்கொள்கிறது. மன உளைச்சல் தாங்காமல், ஐபோனை அதன் சொந்தக்காரரிடம் திருப்பிக் கொடுக்க நினைக்கிறான். ஆனால் அந்த முயற்சி சதீஷைப் பெரிய பிரச்சினை யில் சிக்கவைக்கிறது. சட்ட விரோதக் கும்பலின் பிடியில் சிக்கிக்கொள்கிறான். ஐபோனுக்காக அல்லாமல் அவனுக் காகவே அவனைக் காதலிக்க நவீனா முன் வந்தாலும் இந்தச் சிக்கலால் அவளைச் சந்திக்க முடியாமல் தவிக்கிறான்.

அது என்ன பிரச்சினை, அதிலிருந்து சதீஷ் எப்படி மீண்டான், காதல் என்ன ஆயிற்று என்பதுதான் மிச்ச சொச்சக் கதை.

சாதாரண மனிதர்களின் வாழ்க்கை யில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் குறுக்கீடு நிகழும்போது ஏற்படும் விபரீதங் களைப் பல படங்கள் சொல்லியிருக் கின்றன. சாதாரண மனிதனை அவதார மாகவும் மாற்றியிருக்கின்றன. இந்தப் படத்தில் அதுபோன்ற மிகையான அம்சம் இல்லை. சாமானிய மனிதனின் நெருக்கடி கூடியவரையிலும் யதார்த்தமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

செல்போனால் வரும் பிரச்சினைகள், காதல் அவஸ்தைகள் ஆகியவற்றின் உதவியுடன் கலகலப்பாகச் செல்லும் படம் சிக்கலுக்குள் புகுந்த பிறகு வேகம் எடுக்கிறது. அவ்வப்போது வேக மாகவும், சில சமயங்களில் எரிச் சலூட்டும் விதத்திலும் படம் நகர்கிறது. இந்த சீரற்ற தன்மைதான் படத்தின் பிரச் சினையே. செல்போன் ஒரு முக்கிய காமெடி கதாபாத்திரம். அதைவைத்து நடக்கும் கலாட்டாக்களில் சில ரசிக்கும் படி இருக்கின்றன. ஆனால் அதை வைத்தே கதையை அளவுக்கதிகமாக இழுத்திருப்பது ரசிக்கும்படி இல்லை. அலறும் ரிங் டோனையும் மறுமுனை யில் பேசுபவரின் குரல் பக்கத்தில் இருப் பவர்களுக்கும் கேட்கும் என்பதையும் வைத்து எத்தனை காட்சிகளைத்தான் பார்ப்பது?

காதலையும் செல்போனோடு முடிச் சுப் போட்டுச் சித்தரித்திருப்பது நல்ல உத்தி. காதல் கண்னாமூச்சி ஆடிக்கொண் டிருக்கும் படங்களில் காதல் கைகூடி விட்ட பிறகு படம் சீரியஸான பாதைக் குத் திரும்பும். இந்தப் படத்திலும் அப்படித்தான் நடக்கிறது.

காதலை வைத்து இரு பெண்களுக்குள் நடக்கும் உரசலை ஒரு கட்டம்வரை ரசிக்க முடிகிறது. ஆனால் அதில் ஒருத்தி தற்கொலை செய்துகொள்ளுமளவுக்குப் போகும்போது ரசிக்க முடியவில்லை. தற்கொலையைத் தூண்டும் ஒரு அம்சம் அதற்கான வலுவுடன் சித்தரிக் கப்படாததால் ஏற்படும் விபத்து இது. சில காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. காதலனிடம் போனில் கோபித்துக்கொள்ளும் பெண், தன் தோழி வருவதைப் பார்த்துவிட்டுச் சட்டென்று கொஞ்சலாகப் பேச ஆரம்பிப்பது, பாலாஜி தன்னைக் கடத்தியவர்களுடன் பேசி நட்புக்கொள்வது ஆகியவை உதார ணங்கள்.

இரண்டாம் பாதியில் ஸ்வாதிக்கு வேலையே இல்லை என்றாலும் அவ ரைத் திரைக்கதைக்குள் கொண்டு வருவதற்கான காரணத்தை இயக்குநர் ஓரளவு நியாயப்படுத்தியிருக்கிறார். உச்சக்காட்சியில் வரும் திருப்பம் செயற் கையாகவே இருக்கிறது.

சன்னி லியோன் பாடல் குறித்த முஸ்தீபுகளை அந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம் நியாயப் படுத்துகிறது. படத்தின் மற்ற பாடல்களைப் போலவே இதுவும் திரைக்கதையுடன் ஒட்டவில்லை. செல்போனை வைத்து எடுக்கப்பட்டுள்ள பாடல் காட்சிப் படுத்தப்பட்டுள்ள விதம் அருமை. ஆனால் இதுவும் திரைக்கதையின் வேகத் தைக் குறைக்கவே செய்கிறது. இந்தப் பாடலை டைட்டில் பாடலாக அமைத் திருந்தால் படத்துக்கான மன நிலையை உருவாக்குவதில் அது பங் காற்றியிருக்கும்.

ஜெய்யின் நடிப்பில் முன்னேற்றம் தெரி கிறது. ஸ்வாதிக்கு நடிக்க அதிக வாய்ப் பில்லாவிட்டாலும் நுட்பமான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கவர்கிறார். ஆர்.ஜே. பாலாஜி அவ்வப் போது கிச்சுகிச்சு மூட்டுகிறார். ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். எப்போது நடிக்க ஆரம்பிப்பார் என்று தெரிய வில்லை.

ஜெய்யின் அண்ணனாக அருள்தாஸ். கச்சிதமான தேர்வு. அவர் மனைவியாக கஸ்தூரி, தன் கணவனின் ‘பிழைக்கத் தெரியாத’ நேர்மையைக் கண்டு கொதிக்கும் காட்சியில் பிரகாசிக்கிறார்.

திரைக்கதையைக் கூடியவரை யில் விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தியி ருப்பதற்காக இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான சரவண ராஜனைப் பாராட்டலாம். இடையில் வரும் தொய்வு களை நீக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டிய படம், திரைக்கதையின் வேகத்தடைகளாலும் தர்க்க ரீதியான ஓட்டைகளாலும் தடுமாறு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x