Published : 11 Feb 2017 03:06 PM
Last Updated : 11 Feb 2017 03:06 PM

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை முடக்கியது எப்படி? - சி 3 படக்குழு விளக்கம்

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை முடக்கியது எப்படி என்று 'சி3' படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ள படம் 'சி 3'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், பிப்ரவரி 9-ம் தேதி காலை 11 மணிக்கு 'ஃபேஸ்புக் லைவ்'வாக 'சி 3' வெளியிடப்படும் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, 'எமன்' இசை வெளியீட்டு விழாவில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை கடுமையாக சாடினார்.

பிப்ரவரி 9-ம் தேதி தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் 'சி 3' படமும் வெளியானது. ஆனால், அந்த இணையம் முழுமையாக முடக்கப்பட்டது. பல்வேறு வகைகளில் படம் வெளியான போது, படக்குழு துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தியது.

'சி 3' படக்குழுவிலிருந்து இந்தப் பணியைச் செய்து வந்த தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவனிடம் பேசிய போது, "தயாரிப்பாளர் அனுமதியின்றி எந்த ஒரு இணையதளமும் 'சி 3' படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இணையத்தில் படம் வெளியாகும் போது, இணையம் இருந்தால் மட்டுமே படத்தைக் காண முடியும். ISP(Internet Service Provider)-யிடம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையங்களின் பெயர்களைக் கொடுத்துவிட்டோம். இந்தியாவுக்குள் அனைத்து இணையங்களையும் நிறுத்தச் சொல்லிவிட்டோம்.

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தை நடத்துபவர்களும், வெவ்வேறு IP மூலமாக புதுப்புது இணையமாக வந்து கொண்டே இருக்கிறார்கள். அதனால் தான் முதல் நாள் தவிர்த்து இரண்டாம் நாள் பல்வேறு இணையங்களில் படம் வெளியாக காரணமாக இருந்தது. தமிழ் ராக்கர்ஸ் இணையம் மட்டுமே அனைவருக்கும் படங்களைக் கொடுக்கிறது.

நாங்கள் தான் இப்படத்தின் சொந்தக்காரர்கள். 'சி3' படத்தை வெளியிட உதவுவது, திருட்டுத்தனமாக திரையிடுவது, டிவிடியாக வெளியிடுவது உள்ளிட்ட அனைத்துமே தவறு. படத்தை இணையத்தில் பார்ப்பதும் தவறு என மக்களுக்குத் தெரியவில்லை. சமூக வலைதளத்தில் இருப்பவர்கள் தமிழ் ராக்கர்ஸைப் பற்றி பேசி அவனை நாயகனாக்கி விட்டார்கள். 'படம் எப்போது வெளியாகும்' என பலரும் அவருக்கு குறுந்தகவல் செய்கிறார்கள்.

தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட மக்களுக்கு இல்லை. வீட்டில் உள்ள கணினிக்கு ஒரு IP முகவரி இருக்கும். அதில் படம் பார்த்தால் கூட தவறு தான். அதையும் எங்களால் ப்ளாக் செய்ய உரிமை உள்ளது.

ஃபேஸ்புக்கில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களின் தொலைபேசி எண்ணை அழைத்து "அது எவ்வள்வு தவறு" என்று விரிவாக எடுத்துரைக்கிறேன். அவர்களுக்கு அது தவறு என்பதே தெரியவில்லை. முதலில் பார்ப்பதே தவறு, இன்னொருவரை பார்க்கத் தூண்டுவது மிகப் பெரிய தவறு.

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் பாப் அப்விளம்பரங்கள் உள்ளன. அதன் மூலமாக வருமானம் ஈட்டுகிறார்கள். இதுவே பல பேருக்கு தெரியவில்லை. அவர்களுடைய வருமானத்தை அழித்துவிட்டாலே இது மாதிரியான இணையங்களை ஒழித்துவிட முடியும்.

தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படத்தை உருவாக்குகிறோம். முதல் நாளே திரையரங்கில் படம் வெளியாகிவிட்டால் அதனால் வரும் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு என்பதை மக்கள் உணர வேண்டும்" என்று மிகவும் கோபத்துடன் தெரிவித்தார் அபினேஷ் இளங்கோவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x