Last Updated : 21 Mar, 2014 12:54 PM

 

Published : 21 Mar 2014 12:54 PM
Last Updated : 21 Mar 2014 12:54 PM

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட்!

1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட்.

திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டி நம்மிடையே சலசலப்பை உண்டுபண்ணியவர். இன்று க்யூப், யுஎஃப்எக்ஸ் எனத் தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் ஆரம்பத்தில் திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான்.

வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவை மண்ணில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டியவர் இவர்.22 வயதில் சினிமாவை நேசிக்கத் தொடங்கிய சாமிக்கண்ணு தனது இறுதி காலம் வரை சினிமாவிற்காகவே வாழ்ந்தவர்.

ஆண்டுகள் பல கடந்தாலும் இவர் தொடங்கிய வெரைட்டி ஹால் திரையரங்கம் டிலைட் என்ற பெயரில் இப்போதும் கம்பீரமாக சாமிக்கண்ணுவின் நினைவுகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது. இந்த வரலாற்றை நமது திரையுலகம் மறந்துவிட்ட நிலையில் ’ஒன்பது குழி சம்பத்’ திரைப்படக் குழு சாமிக்கண்ணு பிறந்த தினமான ஏப்ரல் 18 ஆம் நாளை திரையரங்கு தினமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

''இப்படி ஒருவர் இருந்ததே பலருக்கும் தெரியாத நிலையில், உங்களுக்கு எப்படி இப்படியொரு ஐடியா வந்தது?'' என்று படத்தின் க்ரியேட்டிவ் தயாரிப்பாளர் திருநாவுக்கரசிடம் கேட்டதற்கு:

”கேரள மண்ணில் சினிமாவுக்கான முதல் விதையைத் தூவிய டேனியல் தமிழகத்தைச் சேர்ந்தவர். அந்த மாநில மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். மலையாள முதல் சினிமாவின் அவருடைய பங்களிப்பையும் வாழ்க்கையையும் அவர் ஞாபகமாக திரைப்படம் எடுத்து கொண்டாடுகிறார்கள்.

இன்றைக்கு தமிழ் சினிமாவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய அங்கமாக, தீர்மானிக்கும் இடத்தில் திரையரங்குகள் இருக்கிறது. அதற்கு காரணமான சாமிக்கண்ணு வின்சென்ட்டை கொண்டாடாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? அதை நாமே முன்னெடுத்துச் செய்வோம் சின்னதாகத் தொடங்கினோம் திரையுலகைச் சார்ந்த நண்பர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது அவரது பிறந்த நாளான ஏப்ரல் 18 அன்று பெரிய அளவில் விழா எடுத்து கொண்டாட இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x