Last Updated : 17 Jan, 2017 01:37 PM

 

Published : 17 Jan 2017 01:37 PM
Last Updated : 17 Jan 2017 01:37 PM

என்றைக்கும் ஜல்லிக்கட்டை ஆதரிப்பேன், பீட்டாவுக்கு ஆதரவு இல்லை: நடிகர் விஷால்

தான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானவன் என்றும், சமூக வலைதளங்களில் வரும் புரளிகளை நம்பவேண்டாம் என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் சங்கம் சார்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு அஞ்சலி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால், தனது ஜல்லிக்கட்டு ஆதரவு நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.

அவர் பேசியதாவது:

"கிட்டத்தட்ட ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து சமூக வலைதளங்களில் விஷால் ஜல்லிகட்டுக்கு எதிராக பேசினார், பீட்டாவை ஆதரிக்கிறார் என்று கூறிவருகிறார்கள். பீட்டா (PETA) என்றால் என்ன? அதன் முழு விரிவாக்கமே தற்போது தான் எனக்குத் தெரியவந்தது. பீட்டாவை நான் ஆதரிக்கவில்லை, பீட்டாவுக்கு நான் விளம்பரத் தூதரும் இல்லை. இதைப் போன்று புரளியை பரப்புவது தவறான ஒன்றாகும்.

நான் ஒரு கருத்து சொல்வதென்றால் மைக் பிடித்தோ , பிரஸ் ரிலீஸ் மூலமாகவோ அல்லது என்னுடைய சமூக வலைதளத்தின் மூலமாகவோ நேரடியாக நான் கூறியிருப்பேன். ஜல்லிகட்டை நான் ஆதரிக்கிறேன். ஜல்லிக்கட்டு அடுத்த வருடம் முறையாக நடக்க நானும் களத்தில் இறங்கி போராடுவேன்.

விஷால் பீட்டாவை ஆதரிக்கிறார் என்றால் அதை அவர் நேரடியாக கூறினால் தான் அது உண்மையான ஒரு செய்தியாகும். சமூக தளங்களில் உள்ள யாரோ ஒருவர் கூறும் தவறான செய்தி உண்மையாகாது.

இங்கே இளைஞர்கள் போராடுவது கண்டிப்பாக மத்தியில் உள்ள அரசுக்கு கேட்டிருக்கும். கண்டிப்பாக அடுத்த வருடம் ஜல்லிக்கட்டு முறையாக நடக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்கும். நடிகர் சங்கத்துக்கும் பீட்டாவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இதை நான் நடிகர் சங்க பொது செயலாளராக கூறிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார் நடிகர் விஷால்.