Published : 21 Jan 2014 10:25 AM
Last Updated : 21 Jan 2014 10:25 AM

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்: ரஜினி, சிரஞ்சீவி உள்பட 80களின் நட்சத்திரங்கள் கலகலப்பு

வேகமாக ஒடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் இளைஞர்கள் தங்களது பழைய நட்பை சமூக வலைத்தளங்கள் மூலமாக நலம் விசாரித்து வருகிறார்கள். வருடத்திற்கு ஒரு தடவையாவது நேரில் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

1980ல் நடித்து வந்த நடிகர், நடிகைகள் அனைவருமே இப்போது வெவ்வேறு பணிகள் பிஸியாக இருந்து வருகிறார்கள். தங்களது பணியைப் பொருட்படுத்தாது வருடத்திற்கு ஒருமுறை கூடி தங்களது நட்பை மேலும் மெருக்கூட்டி வருகிறார்கள்.

5வது வருடமாக இந்தாண்டும் கூடி "எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது" என்று மேலும் ஒருமுறை உரக்க கூறியிருக்கிறார்கள். இவர்களது இணைபிரியாத நட்பு, இப்போதுள்ள நடிகர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தில் இவர்களது சந்திப்பில் நடைபெற்ற சில சுவாரசியமான துளிகள் :

* 5ம் ஆண்டிற்கான ஏற்பாட்டை மோகன்லால் ஏற்றுக் கொண்டார். அவரது ஈஞ்சம்பாக்கம் பண்ணைவீட்டில் சனிக்கிழமை மாலை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

* ரஜினிகாந்த், சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், அர்ஜுன், ரேவதி, ராதிகா, சுஹாசினி, குஷ்பு உள்ளிட்ட 32 நடிகர், நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

* 1980ல் அனைவருக்கும் பரிச்சயமான புகைப்படக்காரர் ஸ்டில்ஸ் ரவி இந்தாண்டு புகைப்படம் எடுக்கும் பொறுப்பை ஏற்று, புகைப்படங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

* ஒவ்வொரு ஆண்டு திட்டமிடலின் போதும், நாங்களும் கலந்து கொள்கிறோம் என்று பலரும் ஆர்வம் காட்டி பங்கேற்று வருகிறார்கள். இதனால் வருடந்தோறும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* முதல் இரண்டு ஆண்டும் லிசி பிரியதர்ஷன், சுஹாசினி ஆகியோர் விழா ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டார்கள். மூன்றாம் ஆண்டு சிரஞ்சீவி, நான்காம் ஆண்டு கன்னட நடிகர் அம்பரிஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்தாண்டு மோகன்லால் பொறுப்பேற்றுக் கொண்டார்.

* விழாவில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் அனைவருமே மோகன்லாலின் விழா ஏற்பாட்டை வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

* நடிகர், நடிகைகள் அனைவருக்கும் அவர்களது உருவப்படத்தை, மோகன்லால் மற்றும் ஸ்ரீதர் இருவருமே இணைந்து வரைந்த ஒவியத்தை தனது கையொப்பமிட்டு கொடுத்து அசத்தியிருக்கிறார் மோகன்லால்.

* அனைவரது முன்னிலையிலும் மோகன்லால் ஒரு மணி நேர மேஜிக் ஷோ ஒன்றை நடத்தி காட்டியிருக்கிறார். மியூசிக் அகாடமியில் கூட நாங்கள் இந்தளவிற்கு மேஜிக் பார்த்ததில்லை என்று வியந்து பேசியிருக்கிறார்கள்.

* ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தீமில் உடைகள் அணிந்து வரவேண்டும். இந்தாண்டு நடிகர், நடிகைகள் அனைவருமே ஹவாய் தீவு தீமில் உடைகள் அணிந்து கலந்து கொண்டார்கள். ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இதே பாணியில் உடைகள் அணிந்து கலந்து கொண்டார்கள்.

* ஒவ்வொரு ஆண்டு கூட்டம் முடிவடையும் போது, அடுத்தாண்டு நான் தான் ஏற்பாடுகள் பண்ணுவேன் என்று கடுமையாக போட்டியிடுவார்கள். அடுத்தாண்டு யார் ஏற்பாடு என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.

* 30 நிமிடம் மியூசிக் கான்சர்ட் நடைபெற்று இருக்கிறது. மோகன்லால், சுஹாசினி, ஜெயராம் உள்ளிட்ட பாடத் தெரிந்த நடிகர், நடிகைகள் அனைவருமே பாடியிருக்கிறார்கள்.

* அனைவருக்குமே என்ன செய்ய வேண்டும் என்று வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதனை அவர்கள் வீட்டில் ரிகர்சல் செய்து, நிகழ்ச்சியில் அனைவரது முன்னிலையிலும் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

* தொலைபேசி வாயிலாக நீண்ட நேரம் அனைவருமே பேசமுடியாத அளவிற்கு பிஸியாக இருப்பதால், கூகுள் குரூப் ஒன்றை தயார் செய்து அதன் மூலம் தொடர்ச்சியாக நட்பில் இருந்து வருகிறார்கள்.

* 'Illusion in dance' பாணியில் நடனநிகழ்ச்சி ஒன்று நடைபெற்று இருக்கிறது. 4 பேர் இணைந்து நடனமாடினால் 8 பேர் நடனமாடுவது போன்று தெரியும். அந்த வகை நடனத்தினை பூர்ணிமா, சுஹாசினி ஆகியோ நடனமாடியது ஹைலைட்டாக இருந்து இருக்கிறது. மாஸ்க் போட்டுக் கொண்டு நடனமாடுவது யார் என்று தெரியாததால் யார் ஆடுவது என்று சஸ்பென்ஸுடன் பார்த்தார்களாம்.

* ஸ்டில்ஸ் ரவி சுமார் 45 நிமிடங்கள் புகைப்படங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அனைவருமே ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நான் தான் இங்கே உட்காருவேன், இந்த முறை நான் என்று போட்டியிட்டு புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.

* இந்நிகழ்ச்சிக்கு பிரபு 9 மணிக்கு தான் வந்திருக்கிறார். 7:45 மணிக்கு எல்லாம் புகைப்படம் எடுப்பது முடிவடைந்து விட்டதால், "அய்யோ.. மிஸ் பண்ணிட்டேனே" என்று மிகவும் வருத்தப்பட்டாராம்.

*இந்நிகழ்ச்சியில் ஷாருக்கான், அனீல்கபூர், ஆமிர்கான் மூவரும் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்களாம். அடுத்தாண்டு நடைபெற இருக்கும் சந்திப்பில் இவர்களும் இணையக் கூடும்

* அடுத்த சந்திப்பில் ஒரு நாள் முழுவதும் பங்கேற்கலாம் என்று யோசனை கூறியிருக்கிறார் ரஜினி. யோகா, மெடிடேஷன் போன்ற விஷயங்களை சேர்க்கலாம் என்று ஆலோசனையும் கூறியிருக்கிறார்.

* ‘ஆர்டிஸ்ட் வில்லேஜ்’ ஒன்றை ஈ.சி.ஆர் சாலையில் உருவாக்கி அங்கே 80களின் நடிகர், நடிகைகள் பொழுதுபோக்கும் இடமாக்க திட்டம் ஒன்றை போட்டிருக்கிறார்கள். இதற்கான இடம் தருவதாக நடிகை ஷோபனா சொன்னாராம். அந்த இடத்தில் கட்டிட வேலைகளை தான் முன் நின்று கட்டித்தருவதாக உத்தரவாதம் தந்திருக்கிறார், நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர் ராஜ்குமார்.

* அமிதாப் பச்சன் தலைமையில் அடுத்த ஆண்டு மும்பையில் இரண்டு நாட்கள் கொண்டாட்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த கொண்டாட்டத்தில் அமிதாப், கமல், ஆமிர்கான், மோகன்லால் போன்ற முக்கிய நடிகர்களின் ‘வொர்க்‌ஷாப்’ நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்காக டினா அம்பானி தன்னுடைய ஆடிட்டோரியத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறாராம்.

* ஒவ்வொரு வருடமும் தவறாமல் கலந்து கொள்ளும் சரத்குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது விமானம் தாமதமானதால் கலந்து கொள்ளவில்லை. கார்த்திக் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவில்லை என்று வருத்தியிருக்கிறார்கள்.

* கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்று விட்டதால், கமல் இம்முறை வரவில்லை. அடுத்தாண்டு கண்டிப்பாக வருவேன் என்று உறுதியளித்து இருக்கிறார்.

* ஆடல், பாடல், மேஜிக் என களைகட்டிய நிகழ்ச்சிகளில் குவிஸ் போட்டியும் இடம்பெற்றிருக்கிறது.

* ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் கையொப்பம் இட்ட புகைப்படம் இருக்கிறது. 4 ஆண்டுகளாக கலந்து கொண்ட அனைவருமே கையொப்பமிட்ட புகைப்படத்தை பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள்.

* அடுத்தாண்டிற்கான தேதியையும், இடத்தையும் முடிவு செய்துவிட்டார்கள். ஆனால், யார் எங்கே என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x