Last Updated : 11 Jan, 2017 07:57 PM

 

Published : 11 Jan 2017 07:57 PM
Last Updated : 11 Jan 2017 07:57 PM

இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்கள்: அஜித்57 படக்குழு அதிர்ச்சி

இணையத்தில் வெளியான படப்பிடிப்புதள புகைப்படங்களால் 'அஜித் 57' படக்குழு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

'வீரம்', 'வேதாளம்' படக் கூட்டணியான அஜித் - சிவா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விவேக் ஒபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. பெரும்பகுதி காட்சிகளை பல்கேரியாவில் படமாக்கிவிட்டு திரும்பியுள்ளது படக்குழு.

இந்நிலையில், பல்கேரியாவில் உள்ள படப்பிடிப்பு தளப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.

ஏனென்றால், அப்புகைப்படங்கள் மூலமாக இப்படம் தீவிரவாதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என தகவல் பரவிவருகிறது. மேலும், அப்புகைப்படங்களும் வைரலாக சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால், அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகும். பல்கேரியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட போது, இவ்வாறு வெளியாகியிருப்பதால் எப்படி வெளியானது என படக்குழு விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏப்ரல் வெளியீடாக இருந்த இப்படம், தற்போது ஜுன் வெளியீடாக மாற்றி அமைத்துள்ளது படக்குழு.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பெயர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கயுள்ளது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x