Published : 30 Dec 2013 10:25 AM
Last Updated : 30 Dec 2013 10:25 AM

மூன்றாவது முறை பவன் ‘கல்யாணம்: ஆஸ்திரேலிய நடிகையை மணந்தார்

நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரும், தெலுங்குப் படவுல கின் முன்னணி நாயகர்களில் ஒருவருமான பவன் கல்யாண், ஆஸ்திரேலிய நடிகை அன்னா லெழ்நோவாவை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஹைதராபாத், எர்ரகட்டா இணைப் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக பதிவாளர் பாசித் சித்திகீ உறுதிப்படுத்தினார். கலை இயக்குநர் பி.ஆனந்தம் மற்றும் முகம்மத் அப்துல் ஆரிப், என்.சீனிவாசன் ஆகியோர் இத்திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்திட்டுள்ளனர். பதிவு எண் 50, திருமணம் எண் 43ன் கீழ் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்னா லெழ்நோவா வெளிநாட்டவர் என்பதால் திருமணச் சட்டம், பிரிவு 13-ன் படி சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

1997-ல் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நந்தினியை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். அப்போது அந்த கல்யாணம் இரு குடும்பத்தினருக்கும் விருப்பம் இல்லாத காதல் திருமணமாக கூறப்பட்டது.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக நந்தினியுடன் விவாகரத்து பெற்ற பவன், 2009-ல் தன்னுடன் 'பத்ரி', 'ஜானி' போன்ற படங்களில் நடித்த ரேணு தேசாயை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அகிரா நந்தன் என்ற மகனும், ஆத்யா என்ற மகளும் உள்ளனர். பிறகு ரேணு தேசாயுடன் என்ன கருத்து வேறுபாடோ தெரியவில்லை. அவரிடமிருந்து விலகிய பவன், தற்போது அன்னா லெழ்நோவாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த பதிவுத் திருமணம் நடப்பதற்கு முன்னதாகவே இருவரும் குடும்பம் நடத்தியதாகவும், அதில் குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இதை அவர்கள் பதிவுத் திருமணத்துக்கான வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் யார் இந்த அன்னா லெழ்நோவா என்பதுதான் தெலுங்குப் படவுலகின் மில்லியன் டாலர் கேள்வி. 'தீன்மார்' படத்தில் பவன் கல்யாணுடன் நடித்த டானா மார்க்ஸ் என்ற நடிகைதான் அன்னா லெழ்நோவா என்று ஒருதரப்பினர் கூறிக்கொண்டிருக்க, அந்த நடிகைக்கும், திருமணப் பதிவு பத்திரத்திலுள்ள புகைப்படத்துக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லையே என்று மற்றொரு தரப்பினர் மறுக்கின்றனர்.

தெலுங்குப் படவுலகில் பவன் கல்யாண் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம். அண்ணன் சிரஞ்சீவி டாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கையில், ஃபைட் மாஸ்டர் ஆவதே தனது இலக்கு எனக் கூறிக்கொண்டிருந்த பவன், கராத்தே பயின்று ‘ப்ளாக் பெல்ட்' வாங்கினார். ஆனால் அண்ணனின் வற்புறுத்தலால் 1996-ல் 'அக்கட அம்மாயீ, இக்கட அப்பாயீ' (அங்கே பொண்ணு, இங்கே பையன்) என்ற படத்தின் மூலம் திரை அரங்கேற்றம் செய்தார்.

இந்த அரங்கேற்றத்தின் போதே ஒரு ரகளை. கராத்தே வீரரான பவன், தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சென்னையில் உள்ள ஓர் அரங்கில் தனது கைகளின் மீது ஜீப்பை ஓடவிட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன் பவன், தனது அண்ணன் சிரஞ்சீவியின் பேச்சை கேட்காமல் 'தெலுங்கு தேசம்' கட்சியில் சேரப்போவதாக பரபரப்பு செய்திகள் வெளிவந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x