Last Updated : 23 Feb, 2014 10:30 AM

 

Published : 23 Feb 2014 10:30 AM
Last Updated : 23 Feb 2014 10:30 AM

மருத்துவமனையில் நடிகர் அம்பரீஷ்: ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்

பிரபல நடிகரும் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் (62) திடீர் உடல்நலக்குறைவு காரணமாக‌ பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலை பேசி மூலம் குடும்பத்தினரிடம் விசாரித்தார்.

கடந்த‌ வெள்ளிக் கிழமை இரவு அம்பரீஷுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவருடைய குடும்பத்தார் பெங்களூர் மில்லர்ஸ் சாலையில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார்.

இதுதொடர்பாக `விக்ரம்' மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சதீஷ் கூறுகையில், "அம்பரீஷ் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தேறி வருகிறார். அவருடைய கல்லீரலில் சிறிதளவு அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை விரைவில் நீக்க இருக்கிறோம். இதன் பிறகு அவர் விரைவில் குணமடைவார்" என்றார்.

அம்பரீஷுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தகவல் வேகமாக பரவியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 'விக்ரம்' மருத்துவமனை பகுதியில் குவிந்தனர். உடனடியாக மில்லர்ஸ் சாலை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நடிகையும், மண்டியா தொகுதி எம்.பி.யுமான ரம்யா டெல்லியிலிருந்து நேராக மருத்துவ மனைக்கு வந்து அம்பரீஷிடம் நலம் விசாரித்தார். சிவராஜ்குமார், தர்ஷன், சுதீப் உள்ளிட்ட கன்னட நடிகர்களும் மருத்துவமனைக்கு வந்தனர்.

அதேபோல சனிக்கிழமை அதிகாலை கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அம்பரீஷை சந்தித்து நலம் விசாரித்தார். நடிகர் ரஜினி காந்த் அம்பரீஷ் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x