Published : 25 Oct 2014 08:54 AM
Last Updated : 25 Oct 2014 08:54 AM

திரை விமர்சனம்: பூஜை

ஹரி படம் என்றாலே சுமோக்கள் பறக்கும். அரிவாள்கள் சீறும். புள்ளிவிவரங்கள் கதறும். வில் லனும் நாயகனும் புஜபலத்தோடு அறிவையும் வெளிப்படுத்துவார் கள். தொண்டை வறளும் அள வுக்கு சவால் விடுவார்கள். இதற்கெல்லாம் இடையில் மென்மையான ஒரு காதல் கதையும் குடும்ப சென்டிமெண்டும் இளைப்பாறுதல் தரும். மேலோட்டமான சில பல மாறு தல்களுடன் ‘பூஜை’யிலும் இவை எல்லாமே உள்ளன. விறுவிறுப்பான திரைக்கதையோடு யூடியூப், கூகுள் மேப் ஆகிய விஷயங்களையும் கலந்து இவை ‘அப்டேட்’ ஆகி உள்ளன.

கதைக் களம் கோவை. வாசு (விஷால்) சந்தையில் வட்டிக்குக் கடன் தந்து பிழைத்துவருபவன். திவ்யா அதே ஊரில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஒரே பெண். இவர்களுக்குள் நடக்கும் சந்திப்பு சில பல சந்திப்புகளுக்கும் திருப்பங்களுக்கும் பிறகு காதலாக மாறுகிறது. சினிமா தியேட்டரில் குண்டர்களிடமிருந்து ஒரு போலீஸ் அதிகாரியை (சத்யராஜ்) வாசு தற்செயலாகக் காப்பாற்றுகிறான். இதனால் கூலிக்குக் கொலை செய்யும் அன்னதாண்டவத்தின் (முகேஷ் திவாரி) பகையைச் சம்பாதித்துக்கொள்கிறான்.

வாசு உண்மையில் கோவை யின் முக்கிய தொழிலதிபர் குடும்பத்தின் மூத்த வாரிசு. தவறான பழி சுமத்தப்பட்டதால் அவன் வீட்டிலிருந்து வெளியேறி ஒதுங்கி வாழ்கிறான். வாசுவின் குடும்பம் என்று தெரியாமல் இந்தக் குடும்பத்தோடு மோதுகிறான்.

குடும்பத்தின் மானத்தைக் காக்க வாசு களம் இறங்குகிறான். வாசுவின் மீது கொலை வெறியுடன் இருக்கும் வில்லன் அவனைக் குடும்பத்தோடு தீர்த்துக்கட்ட முயல்கிறான். ஊர்த் திருவிழாவில் பூஜை நடக்கும்போது தன் வேலையைக் காட்ட நினைக்கிறான். பூஜை அன்று நடந்தது என்ன, மோதலில் வெல்வது யார் என்பதுதான் பூஜையின் கதை.

பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் வீட்டை விட்டுப் பிரிந்தால் வட்டிக் கடைதான் நடத்துவானா? ஸ்ருதியைப் போன்ற ஒரு பெண், சந்தையில் வட்டிக்கு விடுபவனிடம் வந்து கடன் கேட்பாளா? பையன் மீது பழி சுமத்தப்பட்டதும் என்னதான் நடந்தது என்று யாருமே கேட்க மாட்டார்களா? நாயகன் எப்படி ஒண்டி ஆளாக ஒரு படையையே வீழ்த்துகிறான்? சண்டையிலும் அடி வாங்கும் ஆட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதே.

ஒதுக்கி வைத்த மகனைத் திடீரென்று அழைத்து “உன் சித்தப்பாவை அடிச்சவன் கையை முறிச்சிட்டு வா” என்று அம்மா உத்தரவிடுகிறார். “அவன் கையை உடைச்சதுக்கு பதிலா அவன் தலையை வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிருக்கலாமே” என்று அத்தை கதறுகிறார். இதெல்லாம் திரைக்கதைக்கு வேகம் கூட்டி யிருக்கலாம். ஆனால், வன்முறை யைத் தூண்டுபவர்களாகப் பெண் களைச் சித்தரிக்கும் காட்சிகளாக அமைந்திருக்கின்றன.

இதையெல்லாம் மீறியும் ஹரி மசாலா வேலை செய்கிறது. லாஜிக் இருக்கிறதோ இல்லையோ, விறுவிறுப்பான ஓட்டம் இருக்கிறது.

சண்டைக் காட்சிகளில் விஷா லின் உழைப்பு தெரிகிறது. அம்மா மீது பாசத்தைக் காட்டும் காட்சி களில் நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார். குடும்பத்தில் அவ மானத்துக்கு ஆளாகும்போதும் காதலில் தோல்வி ஏற்படும்போதும் அமைதியான நடிப்பால் கவர்கிறார்.

கவர்ச்சி, நடிப்பு இரண்டிலுமே முந்துகிறார் ஸ்ருதி ஹாசன். பேச்சுத் தமிழ் அவரிடம் படாத பாடு படுகிறது.

சூரி, பிளாக் பாண்டி, இமான் அண்ணாச்சி நகைச்சுவைக் கூட்டணியில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. ஆனால் அடிப் பதும் அடிவாங்குவதும்தான் காமெடி என்ற நைந்துபோன ஃபார்முலாவுக்கு இங்கும் உயிரூட்டியிருக் கிறார்கள். வாழைப்பழக் காட் சிக்குத் திரையரங்கம் குலுங்கு கிறது. சவடால் விட்டு அடி வாங்கிய பிறகு, ஒன்றுமே நடக்காதது போல் பேசும் காட்சிகளில் சூரியின் நடிப்பு சுறுசுறுப்பு.

சத்யராஜ், ராதிகா, ஜெயப் பிரகாஷ் ஆகிய திறமைசாலிகளை ஹரி வீணடித்திருக்கிறார்.

யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், மனதில் தங்கும் அளவுக்கு இல்லை. பின்னணி இசை பொருத்தம்.

ஒளிப்பதிவாளர் ப்ரியன், ஏரியல் வியூ ஷாட்கள் மூலம் படத்துக்கு வித்தியாசம் கூட்டியிருக்கிறார். டாப் ஆங்கிள் காட்சிகளில் கூகுள் மேப்பைச் சரியாக இணைத்துத் தந்திருப்பதும் புதுமை. கலை இயக்குநரின் பணியும் துறுத்திக்கொண்டு தெரியாத வண்ணம் வலிமை சேர்த்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஆண்ட்ரியா நடனம் ஆடுவதில் ஆரம்பித்து கிளைமேக்ஸ் பாட்னாவில் முடிவது வரை படம் முழுக்க ஹரி கிளிஷேகள் நிறையவே இருக்கிறது. பரபரப்பு ஃபார்முலாவில் புதிய பாதையில் பயணிக்கலாமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x