Last Updated : 05 Jul, 2018 02:47 PM

 

Published : 05 Jul 2018 02:47 PM
Last Updated : 05 Jul 2018 02:47 PM

சி(ரி)த்ராலயா 25: திருவல்லிக்கேணி எனும் திருத்தலம்

திரையுலகில் அடையாளம் கிடைக்கும் முன்பு, பத்திரிகையாளர், எழுத்தாளர், நடிகர், சோவின் தந்தை, ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயரின் ஆதரவில் திறந்தவெளி நாடகங்களை கோபு நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், ஸ்ரீதருடன் சினிமாவில் வெற்றியை ருசித்த பிறகு சபா நாடகங்களுக்குச் செல்வதோடு சரி. அது 1965-ம் வருடம். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டுவிட்டது. போர் வீரர்களுக்கு நிதி திரட்ட நினைத்த தமிழக அரசு, சிவாஜி கணேசனை அணுகியது.

சிவாஜி உடனே ஸ்ரீதர் – கோபு இருவரையும் அழைத்தார். ‘சிவாஜி - ஸ்ரீதர் அளிக்கும் நட்சத்திர விழா’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் விழா ஏற்பாடானது. என்னதான் நட்சத்திரங்கள் மேடையில் வந்து முகம் காட்டி வசனம் பேசி பாட்டுப் பாடினாலும் இரண்டு மணி நேரமாவது நிகழ்ச்சி இருந்தால்தானே டிக்கெட் விற்கும்!

மொட்டை மாடியில் பிறந்த நாடகம்

கோபுவை அருகில் அழைத்துத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டார் ‘நடிகர் திலகம்’ சிவாஜி. “ஆச்சாரி! நான், ஜெமினி, சாவித்ரி, சந்தியா, ஜெயலலிதா, வி.கே. ராமசாமி. ஏ.வி.எம் ராஜன், காஞ்சனா, சௌகார் ஜானகி, தங்கவேலு, நாகேஷ், மனோரமா, சந்திரகாந்தான்னு நிறையப் பேர் மேடை ஏறி நம்ம வீரர்களுக்காக நடிக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம். எங்க எல்லாருக்கும் பொருந்துற மாதிரி செம ஜாலியான கதையோட ஒரு மணி நேரம் நாடகம் வேணும், நட்சத்திர விழாவுல, அதுதான் ஹைலைட்டா இருக்கணும். நீ செய்வே, ஆச்சாரி!” என்று முதுகை வருடிக் கொடுத்தார். எவ்வளவு பெரிய நடிகர், தன் மகன்களைப் போல நம்மை இப்படிக் கொஞ்சுகிறாரே என்று சிலிர்த்து எழுந்தார் கோபு.

திருவல்லிக்கேணி மாமனார் வீட்டு மொட்டை மாடியில், பீச் காற்று சாமரம் வீச, நாடகத்தை எழுதத் தொடங்கினார். பெரிய பெரிய நடிகர்கள் நடிக்கப்போகும் நாடகம் என்பதால், தன்னுடைய நகைச் சுவைத் திறமை என்னும் சாற்றைப் பிழிந்து ஒரு நாடகத்தை எழுதினர். ஒவ்வொரு நடிகரின் மேனரிஸத்தையும் நினைவில் கொண்டு வந்து அவரைப் போலவே மிமிக்கிரியில் பேசிப் பார்த்து வசனத்தை எழுதுவார்.

06chrcj_DUO

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், “பாரேன்... அந்த அங்கிளுக்கு ஏதோ ஆகிப்போச்சு. தானே பேசிக்கிறார்” என்று அவர் காதுபடவே கிண்டல் அடித்துச் சிரிப்பார்களாம்.

மனைவி தந்த யோசனை

கதைப்படி ஒரு தந்தை, அவருக்கு நான்கு பெண்கள். தந்தை உட்கார்ந்த சோபாவை விட்டு எழுந்திருக்க மாட்டார். மூத்த பெண்ணுக்கு ஆண்களைக் கண்டாலே பிடிக்காது. மூன்றாவது பெண் இசைப் பைத்தியம். நான்காவது பெண் சினிமா பைத்தியம். இந்தப் பெண்களுக்கு வரன் பார்க்கும் வேலையை, இரண்டாவது பெண்ணின் காதலனிடம் ஒப்படைத்து விடுகிறார் தந்தை. அந்தக் காதலன்தான் நாடகத்தின் கதாநாயகன். பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் வேளையில் அந்தக் கதாநாயகன் படும் சிரமங்களைத்தான் நகைச்சுவையாக எழுதியிருந்தார் கோபு.

ஆண்களை வெறுக்கும் முதல் பெண்ணின் மனத்தை மாற்ற மிகவும் சிரமப்படுவார் கதாநாயகன். அவள் மன மாற்றத்தை அழுத்தமாகச் சித்தரிக்க கோபு ஒரு சம்பவத்தைத் தேடியபோது, மொட்டை மாடிக்குக் கையில் காபியுடன் வந்த அவர் மனைவியிடம் யோசனை கேட்டார். எழுத்தாளரான, அவர் மனைவி கமலா, “எவ்வளவு கடினமான இதயம் கொண்ட பெண்மணிக்கும் மனத்தில் பச்சாதாப உணர்வு இருக்கும். அதை வைத்து கதாநாயகன் அவள் மனத்தை மாற்ற வேண்டும்” என்று யோசனை கூறினார்.

அதன்படி ஒரு சம்பவத்தை அமைத்தார் கோபு. ஒரு மணி நேர நகைச்சுவை நாடகம் தயார். மூன்று மணி நேரத்தில் எழுதப்பட்ட நாடகத்துக்கு, ‘கலாட்டா கல்யாணம்’ என்று தலைப்பு வைத்தார், கோபு. சித்ராலயா அலுவலக மாடியில் அமர்ந்து கோபுவை நாடகத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்ட சிவாஜி, விழுந்து விழுந்து சிரித்து “ நீ என்னோட செல்லம்டா” என்று கட்டிப் பிடித்துக்கொண்டார்.

டிரில் வாங்கிய சிவாஜி

‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தை சிவாஜியே இயக்கினார். மைக் முன்பாக எப்படி வந்து நிற்க வேண்டும். மேடையில் நடிகரின் அசைவுகள், உடல்மொழி, வசன உச்சரிப்பு என்ன என எல்லாவற்றையும் கிளிப்பிள்ளைகளுக்குக் கூறுவதுபோல் சொல்லிக்கொடுத்தார். நாடக அனுபவமே இல்லாத காஞ்சனா போன்ற நடிகைகளை நன்றாக டிரில் வாங்கினார், சிவாஜி. நாகேஷ், ஜெயலலிதா, சந்தியா, சௌகார் ஜானகி, கே ஆர் விஜயா, மணிமாலா, மனோரமா முதலானோர் நன்றாகப் பயிற்சி எடுத்து, நாடகத்தில் நடித்தனர். ‘கலாட்டா கல்யாணம்’ ஒவ்வோர் ஊரிலும் சக்கைப் போடு போட்டது.

சிவாஜியின் அச்சாரம்

ஒரு நாள் நாடகம் முடிந்தவுடன், சிவாஜி கோபுவிடம் வந்தார். “ ஆச்சாரி! இந்த கதை சினிமாவுக்கு செம்மையாக இருக்கும். அவசரப்பட்டு யாருக்காவது கொடுத்துடாதே. என் நிறுவனமே இதைப் படமா தயாரிக்கும். ஒரு பய ஒரு செகண்ட் கண் அசர முடியாது… என்னமா எழுதியிருக்கே!” என்றபடி கதையை ‘பிளாக்’ செய்து வைத்துவிட்டுப் போய்விட்டார்.

திருவல்லிக்கேணியை விட்டு..

“ஆன்மிகரீதியாக மட்டுமல்ல; எனது கற்பனைக்கும் பெரிய ஊற்றாக இருந்த திருத்தலம் திருவல்லிக்கேணி. அங்கே வாழ்ந்த மனிதர்கள், கள்ளம் கபடமற்ற வாழ்க்கை, உழைப்புக்கு அஞ்சாத மீனவர்கள், ஏழை, நடுத்தர வர்க்கம், மேட்டுக்குடியினர், ‘திருமேனி பாங்கா’ என்று பேசும் வைணவர்கள், ‘நெஞ்சுல இருக்குற மஞ்சா சோத்தை எடுத்துருவேன்’ என்று அச்சுறுத்தும் ரவுடிகள், மனிதக் கூட்டத்துக்கு இணையாக மக்கள் வளர்க்கும் மாடுகள் என்று 60-களின் அசலான சென்னையின் வாழ்க்கையை அங்கே பார்க்கலாம்.

06chrcj_Triplicane house ‘சித்ராலயா’ கோபுவின் திருவல்லிக்கேணி வீடு right

பின்னாளில் அது ‘பேச்சலர் பாரடைஸ்’ ஆனது, வேலை தேடி சென்னையில் வந்து குவிந்த நான்கு மாநில இளைஞர்களால். எனது 35 வருட திருவல்லிக்கேணி வாழ்க்கையைப் பொற்காலம் என்பேன்.” எனும் கோபு, திருவல்லிக்கேணியை விட்டு 1992-ல் வெளியேறினார். ஆனால் மாடுகள் இன்றும் அங்கேதான் இருக்கின்றன. அவரது திருவல்லிக்கேணி வீட்டில் படப்பிடிப்பு கூட நடத்தப்பட்டிருக்கிறது. சோ, நாகேஷ், காஞ்சனா, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, நிர்மலா தொடங்கி, ஊர்வசி, பாண்டியராஜன்வரை அனைவரும் அந்த வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

பார்த்தசாரதி கோயில், மெரினா பீச் தவிர, திருவல்லிக்கேணியில் கோபுவுக்கு மிகவும் பிடித்த இடம், பார்த்தசாரதி சபா. அவரது மாமனார் வீட்டின் எதிரேயே இந்த சபா கட்டிடம் இயங்கியது. இந்த சபாவில்தான் கோபுவின் நாடக வாழ்க்கை மறுபிறவி எடுத்தது. ‘மாயா பஜார்’, ‘வீட்டுக்கு வீடு’, ‘காசேதான் கடவுளடா’, போன்ற கோபுவின் நாடகங்கள் இங்கேதான் அரங்கேறின. அவை பிற்காலத்தில் திரைப்படங்களாக உருவெடுத்தன. அவற்றுக்கெல்லாம் அச்சாரமாக ‘கலாட்டா கல்யாணம்’ அமைந்தது.

திரைவடிவில் ‘கலாட்டா கல்யாணம்’

நட்சத்திர இரவுக்காக கோபு எழுதிய ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தைப் படமாக்க கோபுவை ஒப்பந்தம் செய்தார் சிவாஜி. முதலில் அந்த படத்தை இயக்க பி.மாதவனை அணுகலாம் என்றார். ஆனால் கோபு, “ எனது நகைச்சுவை வசனங்களைச் சிந்தாமல், சிதறாமல் அப்படியே ரசிகர்களிடம் சேர்ப்பிக்கக்கூடியவர், சி. வி. ராஜேந்திரன்” என்று கூற, “புதிய பையனாக இருக்கிறானே” என்று சிவாஜி தயங்கினார்.

ஆனால், கோபு கொடுத்த அழுத்தத்தால் சி. வி. ராஜேந்திரனை இயக்குநராக ஒப்பந்தம் செய்தார். பின்னர் அவர் படத்தை இயக்கும் வேகத்தையும் ஆளுமையையும் கண்டு, அவரையே தனது ஆஸ்தான இயக்குநராக அறிவித்துவிட்டார். அந்த அளவுக்கு ‘கலாட்டா கல்யாணம்’ திரைப்படமாக ரசிகர்களை எப்படிக் கவர்ந்தது?

(சிரிப்பு தொடரும்)
படங்கள் உதவி: ஞானம்
தொடர்புக்கு: tanthehindu@gmail.com

“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் பேட்டி 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x