Last Updated : 08 Sep, 2017 09:27 AM

 

Published : 08 Sep 2017 09:27 AM
Last Updated : 08 Sep 2017 09:27 AM

சினிமாஸ்கோப் 44: அவள் அப்படித்தான்

மிழ் சினிமாவில் ஆண் பெண் உறவு பற்றிய வெளிப்படையான படமொன்றை உருவாக்கியவர் ருத்ரய்யா. ஒரே படத்தின் மூலம் உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைக்கப்பட்ட இயக்குநரும் அவர்தான். அவருக்கு அளவுக்கதிக புகழ் கிடைத்துவிட்டது என்று கூறுவோர் உண்டு. அந்த அளவுக்குத் தகுதி கொண்ட படமல்ல ‘அவள் அப்படித்தான்’ என்பது தீவிரமான மனப்போக்கு கொண்ட சிலரது எண்ணம். ஆனாலும், ஒரு பொதுவான ரசிகனின் ரசனையில் அவருடைய ‘அவள் அப்படித்தான்’ எதிர்பாராத குறுக்கீடுகளை நிகழ்த்தியது.

மரபுகளை உடைத்தாள் மஞ்சு

1978-ல் அந்தப் படம் வெளியான பின்னர் தமிழ் சினிமாவின் மரபு வேலிகள் திசையறியாது தவித்தன. அதுவரையான பெண் கதாபாத்திரங்களை எல்லாம் அது மிகச் சிறியதாக மாற்றிவிட்டு விஸ்வரூபம் எடுத்திருந்தது. கே.ராஜேஷ்வர், வண்ணநிலவன் ஆகியோருடன் இணைந்து இதன் திரைக்கதையை எழுதியிருந்தார் ருத்ரய்யா. அவர்கள் படைத்த மஞ்சு கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் நவீனப் பாத்திரங்களுக்கு முன்னோடியாகவே விளங்கியது. அதுவரை அப்படியொரு துணிச்சலான கதாபாத்திரம் எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இடம்பெற்றிருந்ததா என்பது சந்தேகமே.

இன்றுவரை அந்தப் படம் பேசப்படுவதற்கு முக்கியமான காரணம் மஞ்சுவாக நடித்திருந்த ஸ்ரீபிரியாதான்; அல்லது ஸ்ரீபிரியா ஏற்றிருந்த மஞ்சு கதாபாத்திரம்தான். ஒரு நடிகையாகத் தனது படைப்புத்திறனின் உச்சத்தை மஞ்சு கதாபாத்திரம் வழியே அவர் வெளிப்படுத்தியிருந்தார். பெண் விடுதலை, பெண்களின் நிலைமை போன்ற பல விஷயங்களைப் பேசும் இந்தப் படத்தின் வழியே சமூகத்தின் போலித்தனத்தையும் அம்பலப்படுத்தினார் ருத்ரய்யா. ‘அவள் அப்படித்தான்’, மஞ்சுவை மட்டுமல்ல, மஞ்சு போன்ற எவரையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைச் செய்தி. இதே செய்தியை வெவ்வேறு இயக்குநர்கள் வெவ்வேறு படங்கள் வழியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

பேரன்பும் பெருங்கோபமும்

1979-ல் வெளியான மேற்கு ஜெர்மனி நாட்டுத் திரைப்படம் ‘தி மேரேஜ் ஆஃப் மரியா ப்ரௌன்’. ரெயினர் வெர்னர் ஃபாஸ்பைண்டர் இயக்கத்தில் வெளியானது இந்தப் படம். இதன் நாயகியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவள் என்ன நினைக்கிறாள், யாரை விரும்புகிறாள் என்பது எல்லாம் அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இரண்டாம் உலகப் போரின்போது அவளுக்குத் திருமணம் ஆனது. திருமணம் செய்துகொண்ட அவளுடன் அவளுடைய கணவன் அரை நாளும் ஒரு ராத்திரியும் மட்டுமே வாழ்ந்துவிட்டு போருக்குச் சென்றுவிடுகிறான்.

போருக்குச் சென்ற அவனை அவள் தேடிக்கொண்டே இருக்கிறாள். அவன் ஒரு நாளில் திரும்பிவந்துவிடுகிறான். அந்த நாளில் அவள், அந்த மரியா, தனக்குப் பிடித்த காதலனுடன் படுக்கையில் இருக்கிறாள். அவளுடைய வயிற்றில் காதலனின் கரு மிதந்துகொண்டிருக்கிறது. காதலனுக்கும் கணவனுக்கும் மோதல் வருகிறது. அவள் காதலனை அடித்துக்கொன்றுவிடுகிறாள். கணவன் பழியேற்றுச் சிறைக்குச் செல்கிறான்.

இப்போது கணவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவளுக்கு வருகிறது. ஒரு தொழிலதிபரின் காரியதரிசியாகப் பணியில் சேரும் மரியா, அவரது அன்புப்பிடியில் சிக்கிக்கொள்கிறாள். அவர் அவளை மணந்துகொள்ள விரும்புகிறார். அவளைப் பொறுத்தவரை அவள் கணவனுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுத்திருக்கிறாள். ஆகவே, மனம்விட்டு தொழிலதிபர் கேட்டும் மணம்புரிய மறுத்துவிடுகிறாள். சிறையிலிருக்கும் கணவனை வெளியே கொண்டுவரப் பாடுபடுகிறாள்.

இந்தக் கதையைப் படித்ததும் உங்களுக்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுமைப்பெண் திரைப்படம் நினைவுக்கு வரலாம். அதிலும் ரேவதி தன் கணவன் பாண்டியனைச் சிறையிலிருந்து விடுவிக்கப் படாத பாடு படுவார். வெளியே வரும் கணவன் தனது நடத்தையைச் சந்தேகப்படும்போது, புயலாகப் பொங்கி எழுந்து படிதாண்டுவாள்.

சிறையிலிருக்கும் மரியாவின் கணவரைத் தொழிலதிபர் சென்று பார்க்கிறார். மரியாவின் கணவனுக்கும் இந்த உறவு தெரியவருகிறது. சிறையிலிருந்து வெளியே வரும் அவன். மரியாவைவிட்டுப் பிரிந்துசெல்கிறான். சில ஆண்டுகள் கழித்து இருவரும் இணைகிறார்கள். அவள் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறாள். இதற்கிடையில் தொழிலதிபர், அவரது சொத்தை மரியாவுக்கும் அவளுடைய கணவனுக்கும் எழுதிவைத்துவிட்டு இறந்துவிடுகிறார்.

அவள் மீண்டும் கணவனுடன் சேர்ந்த அன்று இந்தத் தகவல் அவளுக்குக் கிடைக்கிறது. கேஸ் ஸ்டவ்வில் சிகரெட் பற்றவைக்கும் அவள் கேஸ் ஸ்டவ்வை அடைக்க மறக்கிறாள். சிலிண்டர் வெடித்து இருவரும் இறக்கிறார்கள். ஸ்டவ் தானாக வெடித்ததா அவள் வெடிக்கவைத்தாளா குழப்பம் வருகிறதா என்று அதுதான் மரியா. மரியா போன்றவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

பின்தொடரும் பெண்மையின் நிழல்

மஞ்சு, மரியா போன்றவர்களைத்தான் ஞாபகப்படுத்துகிறார் ஆல்தியா ஜான்சனும். இது ராமின் இயக்கத்தில் வெளியான ‘தரமணி’ 2017. ஆண்களால் ஒரு காலமும் பெண்களைப் புரிந்துகொள்ள முடியாது. பெண்கள் மனமுவந்து தரும் இடத்தில் ஆண்கள் சில காலம் தங்கிக்கொள்ளலாம். அவ்வளவுதான். அந்த இடத்தையும் ஆண்கள் தங்கள் மந்த புத்தியால் அழித்துக்கொள்கிறார்கள். ஆல்தியா ஜான்சன், சௌமியா, வீனஸ் போன்ற பெண்களது வாழ்வு ஆண்களால் அலைக்கழிக்கப்படுகிறது.

இங்கு பிரபுக்களும் அங்கித்களும் வேலைக்காதவர்கள். ஜேக்கப்களும் ஆல்தியாக்களைப் புண்படுத்துகிறார்கள். பர்ணபாஸ்களுக்கு என்ன உரிமை இருக்கிறது வீனஸ்களைத் தண்டிக்க? இப்படியான கேள்விகளை எல்லாம் உள்ளடக்கிய தரமணி உலகமயமாக்கலின் காலத்தின் பெண்களின் துயரங்களைப் புதுமையான திரைமொழியில் பேசியது. இயற்கையை அழித்த உங்கள் வாழ்வில் இதுபோன்ற துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும் அது எச்சரிக்கிறது. அதன் மொழி சற்றுக் கடுமையானது. ஆனால், அது சொன்ன சேதி புரிந்துகொள்ளப்பட வேண்டியது. புரிந்துகொள்வது அவரவர் பாடு.

கனவுக்கும் நனவுக்குமான இடைவெளி

இவையெல்லாம் ஆண்கள் பார்வையில் வெளிப்பட்ட படங்கள். இந்த ஆண்டு வெளியான இந்திப் படமான ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ ஒரு பெண்ணின் பார்வையில் பெண்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்த திரைப்படம். இதை இயக்கியவர் ஆலங்கிரிதா ஸ்ரீவாஸ்தவா. பெண்களின் கனவுக்கும் நனவுக்குமான இடைவெளிகளை இப்படத்தின் வாயிலாகப் படமாக்கியிருக்கிறார். ஜீன்ஸ் அணிந்து சுதந்திர வானில் பறக்கும் ஆசை கொண்ட இஸ்லாமியப் பெண் ஒருவர், அனுதினமும் புர்கா தைப்பதிலேயே தனது பருவத்தைக் கழிக்க நேர்கிறது. விரும்பிய காதலனைக் கரம்பற்ற முடியாமல் தாய் செய்துவைத்த திருமணத்துக்கு ஆளாகும் பெண் ஒருவர், தனது சமூக மரபுக்கெதிரான தன் எதிர்ப்பைக் காட்டுகிறார்.

திருமண நிச்சயதார்த்தன்றே தன் காதலனுடன் உறவுகொள்கிறார். மற்றொரு மணமான இஸ்லாமியப் பெண்ணோ பணியிடத்தில் திறம்படச் செயலாற்றுகிறாள்; படுக்கையிலோ அவளை உறவுகொள்வதற்கான இயந்திரம் போல் பயன்படுத்துகிறான் கணவன். 50 வயதைக் கடந்த மற்றொரு பெண் தனது பெயரைக் கூட மறக்கும் அளவுக்குப் புற உலகினரால் நடத்தப்படுகிறார். தனக்கு நீச்சல் கற்றுத்தரும் இளைஞனிடம் மேற்கொள்ளும் தொலைபேசி உரையாடல் வழியே புதியதொரு உலகத்தைத் தரிசிக்கிறார்.

அவர்கள் நால்வரையும் அவர்களைக் குற்றப்படுத்த எந்தத் தகுதியுமற்ற ஆண்கள் அற்பக் காரணங்களுக்காகக் குற்றப்படுத்துகிறார்கள். பெண்களின் எந்தக் கனவையும் புரிந்துகொள்ளாத ஆண்கள், இதற்கெல்லாம் தகுதியற்றவர்கள் என்கிறார் இயக்குநர்.

இந்த எல்லாப் படங்களிலுமே பெண்கள் புகைபிடிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள், ஆண்களுடன் உறவு கொள்கிறார்கள். அவர்களின் வழியில் எல்லாம் ஆண்கள் எதிர்ப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனாலும் பெண்கள் கனவு காணும் ஆத்மார்த்த உறவை அளிக்க வகையற்ற கையறுநிலையிலேயே ஆண்கள் இருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை ஆண்கள் உணர்ந்துகொள்வதாகவே அத்தனை படங்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் புரிந்துகொள்கிறார்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x