Published : 02 Feb 2014 09:53 AM
Last Updated : 02 Feb 2014 09:53 AM

ரம்மி: தி இந்து விமர்சனம்

காதல் என்றாலே அரிவாளைத் தூக் கும் கிராமத்தில் நடக்கும் இரு காதல் கதைகள்தான் ரம்மி. சிவங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி கிராமம்தான் கதைக் களம். கதை நடக்கும் வருஷம் 1987.



கதாநாயகன் சக்தி (இனிக்கோ பிரபாகர்), கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லூரிக்குப் படிக்க வருகிறான். அவனுக்குக் கூடப் படிக்கும் பூலாங் குறிச்சி மீனாட்சியுடன் (காயத்ரி) காதல். சக்தியின் ஹாஸ்டல் அறைத் தோழ னாகவும் வகுப்புத் தோழனாகவும் ஜோசப் (விஜய் சேதுபதி) வருகிறான். இவர்களுடன் கல்லூரித் தோழனாக (பரோட்டா சூரி) அருணாச்சலம்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் வந்து கலகலப்பாக்குகிறார் பரோட்டா சூரி. காயத்ரியை விரும்பும் பக்கத்து ஊரைச் சேர்ந்த சையத் அவளுக்காகவே அதே கல்லூரியில் சேர்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு சக்திக்கும் மோதல் வெடிக்கிறது. ரவுடிகளைக் கூட்டிப் போய் ஹாஸ்டலில் சண்டை போடுகிறான். அதனால் கல்லூரி நிர்வாகம் சையத்தைக் கல்லூரியை விட்டு நீக்குகிறது. சக்தியையும் ஜோசப் பையும் ஹாஸ்டலை விட்டு மட்டும் நீக்குகிறது.

வேறு வழியில்லாமல் அவர்கள் பூலாங்குறிச்சி கிராமத்தில் அருணாச்சலம் உதவியுடன் வீடு எடுத்துத் தங்குகிறார்கள். அங்கு சக்தி, மீனாட்சி காதல் வளர்கிறது. ஜோசப்புக்கும், சொர்ணம் (ஜஸ்வர்யா) என்கிற உள்ளூர்ப் பெண்ணுக்கும் இடையே காதல் உருவாகிறது. இதற்கிடையே தங்கள் ஊர்ப் பெண்களைப் பார்த்தாலேயே துரத்திக் கையை வெட்டும் ஊர்ப் பெரியவருக்கு (ஜோ. மல்லூரி) தன் தம்பி மகளான மீனாட்சியின் காதல் விவகாரம் தெரியவருகிறது. சக்தி தன் சொந்த ஊருக்குச் சென்றிருந்த சமயம் சொர்ணத்திற்குக் கல்யாணம் ஏற்பாடுகள் நடக்க, ஜோசப்பும் அவளும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள்.

சொர்ணம் ஊர்ப் பெரியவரின் மகள் என்பது அப்போதுதான் தெரிய வருகிறது. பெரியவரின் ஆட்கள் ஜோசப்பைக் கொன்று சொர்ணத்தை அழைத்து வருகிறார்கள். பெரியவர் அவளையும் கொல்லத் துணிகிறார். இதையெல்லாம் மீனாட்சி கேட்டுவிடுகிறாள். தனக்கும் சக்திக்கும் இந்த நிலைதான் நடக்கும் எனப் பரிதவிக்கிறாள். ஆனால் அவர்கள் மீனாட்சியைப் பார்த்துவிடுகிறார்கள். அவளைத் துரத்துகிறார்கள். ரம்மி ஆட்டம் தொடங்குகிறது.

மீனாட்சி - சக்தி காதல் சேர்ந்ததா, சொர்ணம் கொலைசெய்யப்பட்டாளா என்பதை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் க.பாலகிருஷ்ணன்.1987இல் நடக்கும் கதையை நம்பகத்தன்மையோடு சொல் லச் சின்னச் சின்ன விஷயங்களில்கூட கவனம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

மாணவர்கள் அறையில் சில்க் ஸ்மிதா வின் படம் ஓட்டியிருப்பது, பஞ்சாயத்து போர்டு டிவியில் ஒலியும் ஒளியும் பார்ப்பது போன்ற காட்சிகள் அந்தக் காலத்தை அப்படியே நினைவுபடுத்துகின்றன. பாடல் காட்சிகளில்கூட அந்தக் காலச் சாயல் தெரிகிறது.

விஜய் சேதுபதி துணைக் கதாபாத்திரமாக வந்து சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். சி. பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் ரசிக்கும்படியாக உள்ளது. ஆனால் சில இடங்களில் காட்சிக்குத் தேவை யில்லாத கோணத்தைப் பயன்படுத்தியிருப்பது உறுத்தலாக உள்ளது. உதாரணம், நால்வரும் உட்கார்ந்து சாப்பிடும் காட்சியில் ரோலிங்காகக் காட்சிப்படுத்தியிருப்பது.

டி. இமானின் இசையில் பாடல் ரசிக்கும்படியாக உள்ளது. பாடல் வரிகள் யுகபாரதியின் தனித்துவத்துடன் இருக்கின்றன.

ரம்மி விளையாட்டைப் போல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சஸ்பென்சுடன் முடித்து, அடுத்த காட்சியில் இடையில் அதை அவிழ்க்கிறார். ஆனால் கிளைமாக்ஸ் உட்பட எல்லாமும் ஊகிக்க முடிந்ததாக இருக்கிறது.

ஒரு காதல் கதையைத் த்ரில்லர் பாணியில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் க.பாலகிருஷ்ணன். முயற்சியைப் பாராட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x