Last Updated : 09 May, 2014 12:34 PM

 

Published : 09 May 2014 12:34 PM
Last Updated : 09 May 2014 12:34 PM

மொழி பிரிக்காத உணர்வு - 10: நேற்றோடு நீ சொன்ன வார்த்தை...

என்ன இருக்கிறது, ரோஜாவை எப்படி அழைத்தாலும் அது ரோஜாதான்” என்ற ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற வாசகம் திரைப்படங்களுக்குப் பொருந்துவதில்லை. ஒரு படத்தின் தலைப்பும் அப்படத்தின் சில பாடல் வரிகளும் அதை வெற்றிப் படமாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றை அன்றாடப் பயன்பாட்டுக்குரியதாகவும் ஆக்குகின்றன.

“பெயரில் நாம் காண இருக்கும் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளின் படங்களும் அவற்றின் தலைப்பு, பாடல் வரிகள் மூலம் மக்களிடம் ஒரே உணர்வையும் தாக்கத்தையும் மட்டுமின்றி, அதை அன்றாட மொழியின் ஒரு பகுதியாகவும் ஆக்கியிருப்பது சுவையான ஒரு விஷயம்.

ஹம் கிஸ்ஸி ஸே கம் நஹீன் (நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல) என்ற இந்தி படத் தலைப்பும், ‘கியா ஹுவா தேரா வாதா’ (என்னவாயிற்று உன் சத்தியம்) என்ற அதன் பாடல் வரிகளும் உருவாக்கிய அதே சலசலப்பை, ‘இளமை உஞ்சலாடுகிறது’ என்ற தமிழ்ப் படத் தலைப்பும், ‘என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு’ என்ற அதன் பாடல் வரிகளும் ரசிகர்களிடம் ஏற்படுத்தின.

கியா ஹூவா தேரா வாதா

ஓ கசம் ஓ இராதா

புலேகா துமே ஜிஸ் தின்

ஓ தின் ஜிந்தகி கீ ஆக்ரிதின் ஹோஹா

கியா ஹுவா தேரா வாதா

ஓ கசம் ஓ இராதா

என்று தொடங்கும் அந்தப் பாடலின் பொருள்:

என்னவாயிற்று உன் சத்தியம்?

அந்த உறுதிமொழி, அந்த எண்ணம்

என்று உன்னை மறப்பேனோ அந்நாள்

வாழ்க்கையின் இறுதி நாளாகவே இருக்கும்

(என்ற) உன் சத்தியம் என்னவாயிற்று?

அந்த உறுதிமொழி, அந்த எண்ணம்...

எனக்கு நினைவிருக்கிறது நீ கூறியது

உன்னிடமிருந்து எப்பொழுதும் பிரிய மாட்டேன்

(என்ற) உன் சத்தியம் என்னவாயிற்று

அந்த உறுதிமொழி, அந்த எண்ணம்

உள்ளன்போடு கண் கலந்தேன்

எப்படி அது நீங்கிவிடும்

உன் அருகேயே ஒவ்வொரு மாலையும் கழிந்தது

ஏமாற்றுக்காரியே இதுகூட நினைவில்லையா?

உன் சத்தியம் என்னவாயிற்று?

என்னை விட உயர்ந்தவன் என்று சொல்லும்

அவன் எந்த விதத்தில் என்னை விட உசத்தி

என்பதைச் சொல்லு.

அவன் காதலுக்காக எத்தனை துயரை எதிர்கொண்டான்?

அல்லது காதலை (எவ்வளவிற்கு) விற்றான்?

செல்வத்திற்கான மயக்கம் இப்படிக்கூட இருக்குமா?

அல்லது உனக்கு எதுவும் நினைவில்லையா?

என்னவாயிற்று உன் சத்தியம்?

அந்த உறுதிமொழி, அந்த எண்ணம்...

இயக்குநர் நசீர் உசேனின் மிகப் பெரிய வெற்றிப் படமாக 1977-ல் வெளிவந்த இந்தப் படத்தில் இணைந்து நடித்த ஜோடி ரிஷிகபூர், காஜல் கிரண். காதலியின் துரோகத்தைச் சோகமான மனநிலையில் மேடையில் பாடுபவர் தாரிக்.

இதே சூழலில் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் கமல் மேடையில் துள்ளலுடன் ஆடிப் பாடுவதுபோல் காட்சி.

‘இந்தி வாலி’ என்று சொல்லத்தகுந்த மஜ்ரூர் சுல்தான் பூரியின் எளிய வரிகளுடன் கூடிய இப்பாடலின் எளிமையுடனும் உணர்வுடனும் தமிழ்ப் பாடலைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். தாபத்தையும் கோபத்தையும் தன் பிரத்யேகமான குரலில் வெளிப்படுத்தும் முகமது ரஃபி இந்திப் பாடலையும் அதேபோன்ற தன்மைகள் கொண்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தமிழ்ப் பாடலையும் பாடியிருந்தார்கள். இந்திப் பாடலுக்கு இசை ஆர்.டி. பர்மன். தமிழுக்கு இளையராஜா.

பர்மன் பாடலில் , கீத் அண்ட் ஹன், அப்பா முதலான மெட்டுக்களின் தாக்கம் இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. இளையராஜவின் இசையில் பீட்டில்ஸ் சாயல் உள்ளதென்று இசை வல்லுநர்கள் கூறினார்கள்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்துப் பெரும் வெற்றி அடைந்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் பாடல்:

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!

மார்பு துடிக்குதுடி, பார்த்த இடமெல்லாம்

உன்னைப் போல் பாவை தெரியுதடி!

என்னடி மீனாட்சி, சொன்னது என்னாச்சு?

நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு,

உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்

அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்

நெஞ்சம் துடித்திடும் ராணி,

நீயோ அடுத்தவன் தோழி

என்னை மறந்து போவதும் நியாயமோ

இந்தக் காதல் நாடகத்தின் பாதை மாறியது

காலம் செய்துவிட்ட கோலமோ

ஒரு மனம் உருகுது ஒரு மனம் விலகுது... ஹேய்

(என்னடி)

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை

அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை

கண்ணன் தனிமையிலே... பாட

ராதை தன் வழியே ஓட

இந்தப் பிரிவைத் தாங்குமோ என் மனம்?

ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போன்றதடி

நாளும் மாறுகின்ற உன் மனம்.

எனக்கின்று புரிந்தது

எவளென்று தெரிந்தது...ஹேய்

(என்னடி)

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா!

மார்பு துடிக்குதடி..

இதிலுள்ள முதல் மூன்று வரிகள் பாரதியாருடையவை. ‘குறிப்பிடம் தவறுதல்’ என்னும் தலைப்பில் பிரிவின் துயரைச் சொல்லும் பாடல். காதலியை எதிரிலேயே வைத்துக்கொண்டு பாடும் பிரிவாற்றாமைப் பாடலுக்குப் பொருத்தமான ஆலாபனையாக இந்த வரிகள் அமைந்துவிட்டன.

வயதானவர்கள் காதல் சேட்டைகளில் ஈடுபடும்பொழுது இந்தப் படத்தின் தலைப்பும், இளைஞர்கள் காதலியால் புறக்கணிக்கப்படும்பொழுது பாடல் வரிகளும் பயன்படுத்தப்படுவதும் சுவையான நகைமுரண்தான்.

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x