Last Updated : 29 Nov, 2013 12:00 AM

 

Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM

ப்ளட் சிம்பிள்: வன்முறைகளின் குறியீடு

காமமும் வன்மமும்தான் உலகின் ஆகச் சிறந்த படைப்புகளின் ஆதாரமாக இருக்கின்றன. ஹாலிவுட் படங்களில் 1940-1950 ஆண்டுகள் இவ்வகையான வன்மமும் திகிலும் கொண்ட படங்களின் காலகட்டம். இவ்வகைப் படங்களை பிரெஞ்சு திரை விமர்சகர் நினோ ஃப்ராங்க் ‘noir படங்கள்’ என்றார். காமத்தால் உருவாகும் வன்முறைகளைச் சொல்பவை noir films. 1984இல் வெளிவந்த படம் Blood Simple, noir படங்களின் இரண்டாவது காலகட்டத்திய படம். No Country for Old Men, The Man Who Wasn't There போன்ற படங்களை இயக்கிய கோயன் சகோதரர்களின் (Coen Brothers) முதல் படம்.

பாரின் உரிமையாளர் ஜூலியன் மார்டி, அவனுடைய மனைவி அஃபே, அவளது காதலன் ரே இம்மூன்று பேருக்கும் இடையிலான உறவு காமமும் வன்மமும் நிறைந்தது. இந்தக் கதாபாத்திரங்களுக்கு இடையிலான வன்மத்தின் வெளிப்படலாக ஒரு பாத்திரம் வருகிறது. அது தனியார் துப்பறியும் நிபுணர் விஸ்ஸார்.

ரேவும் அஃபேவும் மார்டியிடமிருந்து விலகிச் செல்கின்றனர். மார்டியின் பாரில் வேலை பார்ப்பவன் ரே. ரேவும் தன் மனைவி அஃபேயும் தன்னை ஏமாற்றிவிட்டதாக மார்டி மன அழுத்தத்திற்கு ஆளாகிறான். அஃபே மீது நம்பிக்கை வைக்காதே என ரேயிடம் நட்பாகச் சொல்லிப் பார்க்கிறான். ஆனால் அது இருவருக்கும் இடையில் சண்டையில் போய் முடிகிறது. மார்டிக்கு வன்மம் அதிகமாகி அவர்கள் இருவரையும் கொல்லத் திட்டமிடுகிறான். அதற்காக அவன் துப்பறியும் நிபுணர் விஸ்ஸாரை நாடுகிறான்.

விஸ்ஸார் கதையின் பாத்திரமாக அல்லாமல் ஒரு வன்மத்தின் குறியீடாக வருகிறான். அவனே மார்டி உருவாக்கி வைத்திருக்கும் வன்மமாகிறான்.

ரேவின் வீட்டில் வைத்து இருவரையும் கொல்லத் திட்டமிடப்படுகிறது. விஸ்ஸார் உள்ளே நுழைந்து முதலில் அஃபேயின் கைப்பையிலிருக்கும் துப்பாக்கியைத் திருடுகிறான். ரேவும் அஃபேயும் தூங்கிக்கொண்டிருக்கும் காட்சியைப் படுக்கையறை ஜன்னல் வழியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறான். புகைப்படங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் அவர்களின் உடல்களை மார்டியிடம் இறந்த சடலங்கள் எனக் காண்பிக்கிறான் விஸ்ஸார். மார்டி பேசியபடி பணத்தைக் கொடுத்தவுடன், மார்டியை அஃபேயின் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். கவனமாக அந்தத் துப்பாக்கியை அங்கேயே விட்டுச் செல்கிறான். இந்தக் கொலையை அஃபே செய்ததாக பாவனைகளை உருவாக்குகிறான்.

பிறகு தனியாக பாருக்கு வரும் ரே மார்டி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். அருகில் அஃபேயின் துப்பாக்கி இருக்கிறது. அஃபேயின் குற்றத்தை மறைப்பதற்காக அந்த உடலை அப்புறப்படுத்துகிறான். இதற்கிடையில் விஸ்ஸார் தான் எடுத்த புகைப்படங்களில் ஒன்றை மார்டியின் பாரில் விட்டுவிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. அவன் சிகரட் லைட்டரையும் தவறவிட்டிருப்பான்.

ரே அஃபேயிடம் வந்து அவற்றையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டேன் என்கிறான். அஃபேக்கு ரே சொல்வது கொஞ்சமும் விளங்கவில்லை. இந்த உரையாடலுக்கு இடையில் விஸ்ஸாரின் தொலைபேசி அழைப்பு வருகிறது. அது மார்டியுடைய அழைப்பு என்கிறாள் அஃபே. இந்தக் கட்டத்தில் அஃபே பொய் சொல்வதாக ரே சந்தேகிக்கிறான்.

ரேயின் நடவடிக்கையால் குழப்பமடையும் அஃபே பாருக்குச் சென்று பார்க்கிறாள். அங்கு ஏற்கனவே தன் ஆதாரங்களை அழிப்பதற்கு வந்திருந்த விஸ்ஸார் மாரிடியின் பீரோக்களை உடைத்திருக்கிறான். இதை வைத்து ரே பணத்திற்குக்காக மார்டியைக் கொலைசெய்திருப்பதாக அஃபே நம்புகிறாள். அவள் ரேவை சந்தேகிக்கிறாள்.

அஃபேயின் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் நுழைந்து மின்விளக்கை ஏற்றுகிறாள். அங்கே திரையிடப்படாத பெரிய ஜன்னலின் அருகில் இருக்கும் ரே நம்மை யாரோ கவனிப்பதாக எச்சரித்து விளக்கை அணைக்கச் சொல்கிறான். ரே மீதான இவளின் சந்தேகம் விழித்துக்கொள்கிறது.

இறுதிக் காட்சியில் கதவுக்குப் பின்னால் நிற்கும் ஒரு உருவத்தைச் சுட்டுக் கொல்கிறாள் அஃபே. அப்போது “மார்டி உனக்கு நான் பயப்பட மாட்டேன்” என்கிறாள். கதவுக்கு அந்தப் பக்கம் சுடப்பட்டுக் கிடக்கும் விஸ்ஸாரின் சிரிப்புச் சத்தம் பலமாக ஒலிக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் துடித்துக்கொண்டிருக்கின்றன. குற்றப் பின்னணியும் விறுவிறுப்பும் கொண்ட திரைப்படமானாலும் இறுதிக் காட்சி ஒரு பிரம்மாண்டமான அங்கதத் தொனியுடன் முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x