Last Updated : 14 Apr, 2017 09:40 AM

 

Published : 14 Apr 2017 09:40 AM
Last Updated : 14 Apr 2017 09:40 AM

புதிய பகுதி: சினிமாலஜி 01 - வேலு நாயக்கரின் தமிழ்ப் பற்று!

(முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!)


சினிமாலஜி - இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இம்முறை சினிமா வகுப்பு எடுக்கச் சிறப்பு அழைப்பாளராக வருகிறார் இயக்குநர் மணிரத்னம்.

கல்லூரிக்குள் பரபரப்பாக நுழைந்த பார்த்தாவை மடக்கிய விரைவுரையாளர் மேகநாதன், “அப்படி என்ன அவசரம்?” என்றார். “இன்னிக்கு சினிமாலஜில மணி சார்” என்றபடியே பறந்தான் பார்த்தா. கடைசி இருக்கைக்குச் சென்றவன், செல்பேசியை எடுத்து, “மணி சாருடன் இன்று” என்று ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல் இட்டு அமர்ந்தான். வகுப்பறையில் நிசப்தம். மணி ரத்னம் உள்ளே நுழையவும் மாணவர்கள் எழுந்து நிற்க முற்படவும் மிகச் சரியாக இருந்தது. எல்லோரையும் உட்காரும்படி சைகையில் சொன்னார்.

“வணக்கம். உங்களை மீட் பண்றதுல சந்தோஷம்” என்று சன்னமாகப் பேசினார்.

“இந்த செஷனை ஒரு டிக்ஸஷன் மாதிரி வச்சிப்போம்” என்றுதும் 33 வினாடிகள் அமைதி நிலவியது.

ராஜேஷ் முதல் கேள்வி தொடுத்தான்.

“ஒரு சினிமாவோட நோக்கம் 'மெசேஜ்' சொல்றதா? மணி சார் படம்னாலே ஒரு மெசேஜ் இருக்கும்னு சொல்றது உண்டே?” “நோ நோ...” எனச் சற்றே பதற்றம் அடைந்தவர், “ப்ரீச் பண்றதுக்கு படம் எடுக்கக் கூடாது. அதை நான் பண்ணினதே இல்லை. என்னை பாதிச்ச விஷயங்களை எடுத்துக்குறேன். அது மூலமா எனக்கு ஏற்பட்ட எமோஷன்ஸை சினிமாவா மக்கள்கிட்ட ஷேர் பண்றேன். இது வந்து, நம் உணர்வுகளைப் பல வடிவங்களில் ஒண்ணு சேர்த்து பகிர்ந்துக்குற கலைதான் சினிமா. ஒரு கதையை எடுத்துக்கிட்டு, அதுல உருவாக்குற கதாபாத்திரங்கள் மூலமாக நாம விரும்புறதை சொல்றதுதான் நல்ல சினிமாவா இருக்கும்னு நம்புறேன்.”

அப்போது குறுக்கிட்ட கவிதா, “ரோஜா படத்துல தீவிரவாதம் வேண்டாம்னு மெசேஜ் சொன்ன மாதிரி இருந்துச்சு. பம்பாய்ல மதவாதம் கூடாதுன்னு பாடம் நடத்தின மாதிரியும் இருந்துச்சு. ஆய்த எழுத்து இளைஞர்கள் அரசியலுக்கு வரணும்னு சொன்ன மாதிரி இருந்துச்சு. ஆனா, இப்பல்லாம் அப்படித் தோணவே இல்லை சார். உதாரணமா, 'ஓ காதல் கண்மணி'யில எது சரி, எது தப்புன்னு சொல்லாம பார்வையாளர்களே தீர்மானிச்சுக்கிற மாதிரி இருந்துச்சு!”

கவிதாவை உற்று நோக்குகிறார்.

“ஓ காதல் கண்மணியில் இளம் தலைமுறை தாட் ப்ராசஸையும், மூத்த தலைமுறை டிரெடிஷனையும் காட்டினேன். ரெண்டு தரப்பையும் சொல்றது மூலமா எது பெட்டர்னு பாக்கறவங்க முடிவு பண்ணட்டும்ன்றதுதான் மோட்டிவ். இளைஞர்கள் மனநிலையை ரிஃப்ளெக்ட் பண்றதுலதான் முழு கவனமும் இருந்துச்சு” என்று மணிரத்னம் சொல்லி முடிப்பதற்குள் மூர்த்தி கேட்டான்:

“உங்க கிட்ட வேற லெவல்ல படங்கள் எதிர்பார்த்துட்டு இருக்கோம். ஆனா, இன்னமும் காதலை விட்டுட்டு வெளியே வர மாட்டேன்னா எப்படி சார்?”

சட்டென எழுந்தான் ரகு. “ஏன் கூடாது? முப்பது வருஷமா மூணு தலைமுறை இளைஞர்களோட பல்ஸை கரெக்ட்டா பிடிச்சி வெச்சிக்குறது சும்மா இல்லை. எங்க அப்பா மெளன ராகம் பார்த்துட்டு ரொமான்டிக்கா திரிஞ்சாரு; என் அண்ணன் அலைபாயுதே ரேஞ்சுல கல்யாணம் பண்ணிகிட்டான். இதோ நான் ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடைன்னு என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். தமிழ் சினிமாவுல வேற யாரால முடிஞ்சிருக்கு?” என்று பொங்கினான்.

“கடல் வெறும் காதல் படம் இல்லை. அது, நம்ம சமூகத்துல இருக்குற கடவுள்களுக்கும் சாத்தான்களுக்கும் இடையிலான போர். அதுல நிறைய குறியீடுகள் இருக்கு... இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதா?” என்றான் பிரேம்.

“கூல். இதுல ஜஸ்டிஃபை பண்ண எதுவுமே இல்லை. ஒரு சுதந்திரமான படைப்பாளியா சினிமா எடுக்குறேன். அதைப் பார்க்குற மக்கள் வெவ்வேறு விதமா எப்படி வேணுன்னாலும் அணுகட்டும்” என்று சூட்டைத் தணித்தார் மணிரத்னம். விவாதப் பொருளை மாற்ற முற்பட்ட கவிதா, “நம்ம சினிமாவுல பெண்களுக்கு உரிய முக்கியத்துவமே கொடுக்குறது இல்லை. உங்கள் படங்களில் சரியான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுறதைப் பார்க்க முடியுது. ஒரு படம் எடுக்கும்போது, அதுல ஜெண்டர் பேலன்ஸ் எப்படி எல்லாம் இருக்கணும்?” என்று கேட்டாள்.

“சிம்பிள். மக்கள்தொகையில் பாதிப் பேரு பெண்கள்தான். நாயகன் கதாபாத்திரத்துல கிளாரிட்டி இருக்கணும்னா, நாயகி கதாபாத்திரத்துலயும் தெளிவு இருக்கணும். நான் பார்க்குற பெண்கள்ல பலரோட இன்ஸ்பிரேஷன்ஸ்ல கதாபாத்திரங்களை உருவாக்குறேன். சினிமா ரியலிஸ்டிக்கா வர்றதுக்கு இப்படித்தான் பண்ணணும்னு தோணுது. பாலச்சந்தர் என்னைவிட பெண்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருப்பாரு.”

அப்போது, காரியத்திலேயே கண்ணாக இருக்கும் ஜிப்ஸி கேட்டான்: “ஒரு திரைப் படைப்பாளிக்கு என்னென்ன தகுதிகள் வேணும்? அதை எப்படி வளர்த்துக்கணும்?”

சீரியஸ் மோடுக்குத் திரும்பிய மணிரத்னம் விரிவாகவும் நிதானமாகவும் பேசினார்.

“சினிமா படைப்பாளிக்கு எந்த குவாலிஃபிகேஷனும் தேவை இல்லை. ஆனா, ஃபிலிம் ஷுட் பி குவாலிஃபைடு. நீங்க என்ன பண்ணீங்க, ஒரு படத்தை எப்படிப் பண்றீங்கன்றது முக்கியமில்லை. ஒரு படத்தை எடுத்து முடிச்சுட்டுப் பார்க்கும்போது அதுல ஒரு முழுமை இருக்கணும். அதான் முக்கியம். உங்களை ரொம்ப பாதிச்ச விஷயத்தை கதையா டெவலப் பண்ணலாம். அதைத் திரைக்கதையா மாத்தணும். உயிர் கொடுக்கணும். அதான் சினிமா. இது பெரிய டீம் ஒர்க்தான். அதுக்கு வேவ்லெங்த் செட் ஆகக்கூடிய டீம் அமையணும்.

இங்க சினிமா எடுக்குறது தொழில்தான். நாம கமர்ஷியல் படம்தான் பண்றோம். அதுக்குள்ள கலைத்தன்மை புகுத்த முயற்சி பண்ணனும். ஒவ்வொரு காட்சிகளையும் ரியலிஸ்டிக்கா கொண்டுவரணும். சினிமா மேல காதல் வரணும். நாம யாரைப் பத்தி கதை சொல்லப் போறோமே அவங்களோட வாழ்க்கையை கவனிக்கணும். சொல்லப்போனா ரிஃப்ளக்‌ஷன்ஸ் ஆஃப் எவ்ரிதிங்தான் சினிமா. சினிமாவுல எதைப் பண்ணனும், எதைப் பண்ணக் கூடாதுன்ற தெளிவு வேணும்…”

மணி ரத்னம் தன் அனுபவத்தை அடுக்கிக்கொண்டிருக்க, அதுவரை “மணி சார் க்ளாஸை என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். ஃபீலிங் பிளஸ்டு” என்று தான் இட்ட நிலைத்தகவலுக்கு விருப்பமிட்டவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த பார்த்தா எழுந்து நின்றபோது சக மாணவர்களுக்கு ஆர்வம் தொற்றியது.

“உங்களோட முக்கியமான படம் நாயகன். அதுல உங்களோட தமிழ்ப் பற்றை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது சார்!” மணிரத்னம் அமைதியாக இருந்தார். பார்த்தாவே தொடர்ந்தான்.

“சின்ன வயசுல இருந்து தாத்தா ஆகுற வரைக்கும் வேலு நாயக்கர் மும்பைல இருந்தாலும், அவருக்கு ஒரு வார்த்தைகூட இந்தி கத்துக்கலைன்ற விஷயம்தான் தமிழ்ப் பற்றைக் காட்டுச்சு.”

மெல்லிதாகச் சிரித்தார் மணிரத்னம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x