Last Updated : 06 Dec, 2013 12:00 AM

 

Published : 06 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Dec 2013 12:00 AM

நாடகக் கலைக்கு ஒரு நந்தா விளக்கு

“எல்லாம் அவன் தலையெழுத்து போலாகட்டும்!” என்றார் ஸஹஸ்ரநாமத்தின் அப்பா. அப்போது சிறுவன் ஸஹஸ்ரநாமத்துக்கு வயது பத்து இருக்கும். மதுரை பாலஷண்முகானந்த சபா மேனேஜர் காமேஸ்வர அய்யரிடம், ஸஹஸ்ரநாமத்தின் அப்பா கோபமாகச் சொன்ன வார்த்தை இது!!

ஏனென்றால் பையன் வீட்டை விட்டு ஓடிப் போய் அப்பாவின் பொய்க் கையெழுத்தைப் போட்டு. “சம்மதம் “ என்று கடிதத்தைக் கொடுத்து நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டான். காமேஸ்வர அய்யர் இதைக் கண்டுபிடித்து அவன் அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்து பையன் எதிரில் நிற்க வைத்தார்.

“இப்படிப்பட்ட பையனை நாங்கள் நாடகத்துலே சேர்த்துக்கொள்ளலாமா? என்று கேட்டதற்கு ஸகஸ்ரநாமத்தின் அப்பாதான் மேற்கண்டவாறு மகனை ஆசீர்வதித்தார்.

ஸஹஸ்ரநாமம் 29-11-1913இல் பிறந்தவர். சின்ன வயதிலேயே தாய் முகம் அறியாதவர். வறிய பெரிய குடும்பம். வீட்டுக் கஷ்டத்தினால் சித்தப்பாவின் பலகாரக் கடையில் வேலை செய்ய அனுப்பப்பட்டிருக்கிறார். தற்செயலாக உள்ளூரில் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்தபோது குடும்ப நெருக்கடியிலிருந்து தப்பித்துப் போய்ச் சுதந்திரமாக ஆடிப்பாடி நடிக்கும் வாழ்க்கையில் விடுதலையும் சந்தோஷமும் கிடைக்குமென்று அவனுக்குள் ஆசை முளைத்துவிட்டது. சேர்ந்துவிட்டான்.

எஸ்.வி. ஸஹஸ்ரநாமம் நாடகக் கலையில் தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகளின் வழியில் வந்தவர். ஆரம்பக் காலம்தொட்டே டி.கே.எஸ் சகோதரர்கள் என்.எஸ். கிருஷ்ணன் இவர்களுடன் ஒன்றாக வளர்ந்து பல வருஷங்கள் நாடகக் குழுவில் பல பாத்திரங்களிலும் பல துறைகளிலும் பங்கேற்றுப் பழுத்த அனுபவம் பெற்றவர். இவர்களுக்கிடையில் நெருங்கிய பாசமும் நட்பும் ஆயுள் முழுவதும் தொடர்ந்திருக்கிறது.

பாய்ஸ் கம்பெனிகள் அரசாங்க கெடுபிடிகளுக்குப் பயப்படாமல் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எதிரொலிக்கும் நாடகங்களை நிகழ்த்தி மக்களை விடுதலைப் போராட்டத்துக்கு ஆவேசப்படுத்தின. வெ. சாமிநாத சர்மா எழுதிய பாணபுரத்து வீரன் என்ற ஆங்கிலத் தழுவல் நாவல், விடுதலை எழுச்சியைப் பூடகமாகத் தூண்டும் விதமாக இருந்தது. பாரதியார் பாடல்களையும் சேர்த்து நாடகமாக உரையாடல்களை எழுதியவர் பாஸ்கரதாஸ் அவர்கள்.

தூக்குக் கயிறு

அதில் ஸஹஸ்ரநாமம், வாலீஸன் என்ற பாத்திரத்தில் நடித்தார். “சுதந்திரத்துக்காகப் பாடுபடுவது குற்றமென்றால் அந்தக் குற்றத்தைச் செய்து கொண்டுதான் இருப்பேன்...” என்று ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்தவுடன் அரச உத்தரவின் பேரில் அவன் தூக்கிலிடப்படுவான். இந்த நாடக அரங்கேற்றத்துக்குச் சில வாரங்கள்முன் தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டார்கள். அரசன் தூக்கிலிட உத்தரவிட்டதும், மக்கள் “வாழ்க சுகதேவ் வாழ்க பகத்சிங் “ என்று முழங்குவார்கள்.

அந்தக் காட்சியில் பலகை மேல் இவரை நிறுத்தி வைத்து மேலிருந்து தொங்கும் தூக்குக் கயிற்றை இவர் கழுத்தில் மாட்டி அவர் நிற்கிற பலகையை நகர்த்திவிடுவார்கள். ஆனால் உண்மையில் அவர் கழுத்து இறுகாமலிருக்க இன்னொரு கறுப்புக் கயிறு பின்னால் வளையத்துடன் தொங்கும்.... வளையத்தை ஸஹஸ்ரநாமத்தின் பின்புறம் மறைவாக இடுப்பு பெல்ட்டில் தூக்குப் போடுவதற்குச் சில கணங்களுக்கு முன் மாட்டிவிட வேண்டும் . இந்த வேலை அங்கே காவலாளியாக நடிக்கிற டி.என். சிவதாணு செய்ய வேண்டியது. ஒரு நாள் சிவதாணு இந்த வேலையைச் செய்யத் தவறிவிட்டார். ஸஹஸ்ரநாமம் உண்மையிலேயே தூக்கில் தொங்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். முகம் ரத்தச் சிவப்பாகிக் கால்கள் உதற ஆரம்பித்துவிட்டன. அநேகமாக இறந்துவிட்டார். நல்ல வேளையாக ஓரத்தில் இருந்தவர்கள் சமயத்தில் இதை உணர்ந்து ஓடிப் போய் அவரைக் கீழே இறக்கி முடிச்சைத் தளர்த்தியிருக்கிறார்கள்.

1945 வரை ஸஹஸ்ரநாமம் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வேறு சிறு தொழில்களிலும் ஜீவனத்தை நடத்தியிருக்கிறார். உயிருள்ள பாம்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டு பயத்தில் உதறாமல் ஜதி சுத்தமாக ஆடத் துணிந்ததால் அவருக்கு அநேகமாக சிவன் வேடமே திரைப்படங்களில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்போது திருமணமாகித் தந்தையாகவும் ஆகிவிட்டார்.

நாடகக் குழு

அவருடைய இந்த மொத்த அனுபவமும் 46க்குப் பின் ஒரு நல்ல நாடகக் குழுவை ஏற்று நடத்துவதற்கான திறமையையும் துணிவையும் கொடுத்திருக்கிறது.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை சென்று மீண்டு வரும்வரை என்.எஸ்.கே. நாடக சபையின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும், சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் வெற்றிகரமாக நாடகங்கள் நடத்தியிருக்கிறார்.

அவரே எழுதித் தயாரித்த ‘பைத்தியக்காரன்?’ என்ற நாடகம் பால்ய விதவைகளின் கொடுமைகளையும் சமூகத்தின் நிராகரிப்புகளையும் கருவாகக் கொண்டது. பாரதியின் தோழர் வ.ரா. இந்த நாடகத்தைப் பலமுறை பார்க்க வந்திருக்கிறார். அதே போல் கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தமும் ஸஹஸ்ரநாமத்தின் நாடகங்கள் சமூக மறுமலர்ச்சிக்குச் சக்தியுள்ள ஊடகமாகப் பயன்படுவதைக் கண்டு மெச்சி, ‘பாரதி கலைஞர் ஸஹஸ்ரநாமம்’ என்ற பட்டத்தை வழங்கியிருக்கிறார்.

1950க்குப் பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகள் இருந்த போதும் ஸஹஸ்ரநாமம், சேவா ஸ்டேஜ் என்கிற குழுவை ஆரம்பித்துத் தமிழ் நாடகங்களுக்குத் தற்காலத் தன்மையை ஏற்றியிருக்கிறார். மேடை அரங்க நிர்மாணம், ஒளி அமைப்புகள் இவற்றிலெல்லாம் கலாபூர்வமான நூதன மாற்றத்தைப் பொருட்செலவைப் பார்க்காமல் நிறுவிக் காட்டியது சேவா ஸ்டேஜ் நாடக மன்றம்தான். நாடகத்தில் பின்பாட்டு உத்தியை அறிமுகப்படுத்தியதும் ஸஹஸ்ரநாமத்தின் முயற்சிதான். சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து அனுபவமும் புகழும் பெற்றதால் திரை நட்சத்திரங்களானவர்கள் பலர். இவர்களில் ஆர். முத்துராமன், தேவிகா, எஸ்.என். லட்சுமி முதலியவர்களைக் குறிப்பிடலாம்.

சேவா ஸ்டேஜில் சிவாஜி

நல்ல ஆங்கில நாடகங்களைத் தமிழாக்கித் தந்த என்.வி. ராஜாமணியும் நவீன இலக்கிய ஆசிரியர்களான பி.எஸ். ராமையா, தி. ஜானகிராமன் கு. அழகிரிசாமி போன்றவர்களும் நல்ல நாடகங்கள் பலவற்றை சேவா ஸ்டேஜுக்காக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் தொழில்முறை நாடகத் தயாரிப்புகளில் நவீன இலக்கிய ஆசிரியர்கள் நாடகங்கள் எழுத முன்வந்தது முக்கியமான இரண்டு கலைப் பிரிவுகளின் சங்கமத்தை ஏற்படுத்தியது. பராசக்தி படத்தில் நட்சத்திரமாகிவிட்ட பின்னும் ஸஹஸ்ரநாமத்தின் மேலுள்ள மரியாதையால் சிவாஜி கணேசன் சில ஆண்டுகள் சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

நல்ல முகவெட்டும் கட்டு உடலும் குரலும் இருந்தும் ஏனோ ஆரம்பத்திலிருந்தே ஸஹஸ்ரநாமம் கதாநாயகனாக வேஷம்போடாமல் முக்கியமான உப பாத்திரங்களிலேயே நடித்துப் புகழ் பெற்றிருக்கிறார். அவருடைய திரைப்படப் பாத்திரங்களும் அப்படியே தொடர்ந்தன. காதல் டூயட் பாடும் வேஷங்களில் அவர் சோபிக்கவில்லை. ஆழமான உணர்ச்சிகளுடன் யதார்த்தமாகப் பாத்திரத்தின் தன்மையறிந்து நடிக்கும் குணச்சித்திரப் பாத்திரங்களில் தனித் தன்மையுடன் மிளிர்ந்தார். வழக்கமான பாணிகளிலிருந்து வித்தியாசமான வில்லன் வேடங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஏ.வி.எம்.மின் வாழ்க்கை, பராசக்தி, நல்லதம்பி, பைத்தியக்காரன், உரிமைக் குரல், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், படித்தால் மட்டும் போதுமா?, மறக்க முடியுமா? முதலிய படங்களை மறக்க முடியாது.

திரைப்படங்களை அவர் வருவாய்க்கு மட்டுமே ஆதாரமாக நினைத்தார். நாடகக் கலையின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் கருத்தாக இருந்தாரே ஒழிய அதன் மூலம் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள நினைத்ததில்லை. 1959இல் இயல் இசை நாடக மன்றத்தின் ஆதரவு மூலம் சேவா ஸ்டேஜ் தயாரித்த கவிதை நாடகங்கள் மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதமும் குயில் பாட்டும். அவை தமிழ் நாடகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பான கொடைகள் எனக் கூறலாம்.

அறுபத்தி இரண்டில் நிகழ்ந்த சீனப் போர் சமயத்தில் தேச எல்லைப் பாதுகாப்பு நிதிக்காக நன்கொடை நாடகங்கள் நடத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் தனக்கு சினிமா நாடகத் துறையில் சன்மானங்களாக அளிக்கப்பட்ட கணிசமான

தங்கம் வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் அத்தனையையும் காமராஜரிடம் சமர்ப்பித்திருக்கிறார்.

ஸஹஸ்ரநாமம் தனது 74வது வயதில் காலமானார். தமிழ் நாடகக் கலைக்காக ஆயுள், உழைப்பு, பொருள் அத்தனையும் அர்ப்பணித்த அவர் பெற்றது மத்திய அரசின் சங்கீத நாடக அகாடெமி பரிசு ஒன்றுதான்.

(கட்டுரை ஆசிரியர், தமிழின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஸஹஸ்ரநாமத்தின் சகோதரி மகன்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x