Published : 30 Sep 2014 08:43 AM
Last Updated : 30 Sep 2014 08:43 AM

திரை விமர்சனம்: மெட்ராஸ்

வடசென்னையில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெரிய சுவர். அதில் விளம்பரம் எழுத இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியும், அதனால் நடக்கும் கொலைகளும்தான் ‘மெட்ராஸ்’ படத்தின் மையம். இதனூடாக வடசென்னை மக்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறார் ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பா. ரஞ்சித்.

காளி (கார்த்தி), அன்பு (கலையரசன்) இருவரும் நண்பர்கள். காளி படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அன்பு கட்சி ஒன்றில் சிறு பொறுப்பில் இருக்கிறான். அந்தப் பகுதியின் செயலாளர் மாரியின் நம்பிக்கையைப் பெற்றவன் அவன். விளம்பரம் எழுதும் சுவரை வைத்து அப்பகுதி மக்களிடம் வன்முறையை தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறான் மாரி. இரு கோஷ்டிக்கும் இடையில் அடிக்கடி சச்சரவுகள் வெடிக்கின்றன.

இதற்கிடையில், நாயகன் காளியின் வாழ்க்கை, அன்பான அம்மா, அப்பா, பாட்டி, நண்பர்கள் என உற்சாகமாகப் போகிறது. அவனுக்குப் பார்க்கும் பெண்களை எல்லாம் அம்மா தட்டிக் கழிக்க, நண்பர்கள் ஆலோசனையின் பேரில் காதலிக்க முடிவெடுக்கிறான். அப்போது அவன் கண்ணில்படுகிறார் கலையரசி (புதுமுக நாயகி கேத்ரின் தெரஸா). இவர்கள் இருவருக்கும் இடையே உருவாகும் காதல் அழகு!

தேர்தல் வருகிறது. சுவரைக் கைப்பற்றும் போட்டி தீவிரமடைகிறது. சுவருக்கான போட்டி என்பது அடிப்படையில் அதிகாரத்தைக் கைப் பற்றும் போட்டி. இந்தப் போட்டியில் கொலைகள் நடக்கின்றன. துரோகங்கள் அரங்கேறுகின்றன.

வடசென்னையையே கதாபாத்திரமாக ஆக்கி அங்குள்ள வாழ்க்கையின் மகிழ்ச்சி யையும் துக்கங்களையும் நன்கு பதிவு செய் துள்ளது இந்த படம். சுவரை மையமாக வைத்து ரஞ்சித்தின் குரல், கதை சொல்லத் தொடங்கும்போதே திரைக்கதையின் மீது ஈர்ப்பு உண்டாகிறது. அதற்கு அடுத்த காட்சிகளில் காதல், அரட்டை எனப் போகிறது. ஆனாலும் ரசிக்க வைக்கிறது. அன்பு இறந்த பிறகு திரைக்கதையில் தொய்வு. அதன் பிறகு நடப்பது எல்லாம் ஊகிக்கக்கூடியவைதான்.

யதார்த்தமான களம், யதார்த்தமான கதை. இருந்தாலும் படம் பின் பாதியில் ஹீரோயிஸக் கதையாக மாறுகிறது. பலரைக் கொன்று போடும் ஹீரோ, கடைசியில் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவதெல்லாம் ஓவர். அன்புவின் பின்னணி குறித்த சித்தரிப்பில் தெளிவு இல்லை.

இடைவேளை வரை திரைக்கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. சண்டைக் காட்சிகள் படத்துக்குப் பலம்!

அன்புக்கும் அவன் மனைவிக்குமான அன்யோன்யம் அற்புதம்! ஒண்டுக்குடித்தன வீட்டில் பல இடையூறுகளுக்கு இடையில் நடக்கும் தாம்பத்யத்தையும் காளி அன்பு இடையிலான நட்பையும் மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார் ரஞ்சித். யாருக்கும் தெரியாமல் வடசென்னையில் ஒரு வீட்டுக்குள் நுழைந்து படம்பிடித்ததுபோல இருக்கிறது.

வடசென்னை இளைஞனாக கார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார். அரட்டை, காதல், துயரம், ரவுத்திரம் எனப் பலவித உணர்ச்சிகளையும் பொருத்தமான உடல் மொழியுடன் நன்கு வெளிப்படுத்துகிறார்.

கேத்ரின் இயல்பாக நடிக்கிறார். அழகாக இருக்கிறார். ஆனால் அவரது நிறமும், பேச்சும் பின்னணிக்குப் பொருந்தாமல் இருக்கின்றன. வடசென்னைக்குப் பதில் சவுகார்பேட்டை பெண்ணாகக் காண்பித்திருக்கலாம்.

வடசென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பல்வேறு கோணங்களில் முரளி காட்சிப்படுத்தியுள்ளார். சென்னை என்றால் வானுயர் கட்டிடங்களைக் காட்டிப் பழகிய சினிமாவுக்கு வெளியே அசலான வடசென்னையைப் படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. வடசென்னையின் தற்போதைய மாற்றங்களும் பதிவாகத் தவறவில்லை.

பெரும்பாலான நடிகர்கள் புதியவர்கள். சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. மெட்டு, குரல் தேர்வில் வடசென்னையின் மணம் கமழ்கிறது. கானா பாலா பாடும் மரணப் பாடல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. ஆனால் வசன உச்சரிப்பு, திரைக்கதை எனச் சில விஷயங்களில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.

கதையாகக் கருதும்போது பலமாகத் தெரியும் ‘மெட்ராஸ்’, முழுப் படமாகப் பார்க்கும்போது அந்த அளவுக்கு வலிமையாக வெளிப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x