Published : 21 Aug 2016 09:33 AM
Last Updated : 21 Aug 2016 09:33 AM

திரை விமர்சனம்: தர்மதுரை

இயக்குநர் சீனு ராமசாமி ‘நீர்ப் பறவை’ திரைப்படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் படம் ‘தர்மதுரை’. மருத்துவர்கள் கிராமங் களுக்குப் பணியாற்ற செல்லத் தயங்கக் கூடாது என்பதை குடும்ப ‘நாடக’ பின்னணியில் சொல்ல முற்பட்டிருக்கிறது இந்தப் படம்.

மருத்துவரான தர்மதுரை (விஜய் சேதுபதி) தொழிலைக் கவனிக்காமல் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிக் குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுத்துவருகிறார். நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி என ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்தை அவர்களுடைய அம்மா பாண்டி யம்மா (ராதிகா) ஒற்றுமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறார். தங்களுடைய தொழிலுக்கு இடைஞ்சலாக இருப்பதால், தர்மதுரையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அண்ணன், தம்பிகள் நினைக்கிறார்கள்.

அம்மாவின் உதவியோடு அவர்களிடமிருந்து தப்பிக்கும் தர்மதுரையின் பையில் அவரது சகோதரர்கள் சீட்டுத் தொழிலில் வசூலித்த பெரும் பணம் இருக்கிறது. இது தர்மதுரைக்குத் தெரியாது. வீட்டை வெறுத்து வெளியேறும் அவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் தன்னோடு படித்த சுபாஷினி (தமன்னா), ஸ்டெல்லா (சிருஷ்டி டாங்கே) ஆகியோரைத் தேடிப் புறப்படுகிறார். இவரிடம் சிக்கிக்கொண்ட பணத்தை மீட்பதற்காக அண்ணன் தம்பிகள் வலைவீசித் தேடுகின்றனர். கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

அழுத்தமான பாத்திரங்கள், இயல்பான காட்சியமைப்பு, மனதைத் தொடும் தருணங் கள், அழகு ததும்பும் காட்சிகள், ஆக்கபூர்வ மான செய்தி என சீனு ராமசாமியின் படங்களில் இருக்கும் அம்சங்கள் எல்லாம் இந்தப் படத்திலும் இருக்கின்றன. இன்றைய மருத்துவர்களின் போக்கு, கிராமப்புறங்களில் மருத்துவர்களின் தேவை ஆகியவற்றின் மீது கவனம் குவிக்க முயற்சிசெய்திருப்பது பாராட்டத்தக்கது. கல்லூரிக் காட்சிகளில் காதல் எட்டிப் பார்த்தாலும் அது வழக்கமான திசையில் பயணிக்காமல் இருப்பது ஆறுதல். தமன்னாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே யான அன்பைக் காட்சிப்படுத்திய விதம் அழகு.

திரைக்கதை பல திசைகளில் பல நோக் கங்களுடன் பயணிப்பது படத்தைப் பலவீன மாக்குகிறது. குடும்ப டிராமா, மருத்துவத் துறை யின் நிலை, வரதட்சிணை, குடும்ப வன்முறை, சகோதர வன்மம் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது. எந்தக் குவிமையமும் இல்லாத தால், காட்சிகள் வலுவில்லாமல் திரையில் விரிகின்றன. குறிப்பான நோக்கமற்ற திரைக் கதைப் பயணம் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது கதாநாயகிகளின் மரணங்கள், நாயகனை விடுத்து வேறொருவரை மணக்கும் நாயகியின் கணவன் மோசமானவனாக அமைதல் என கோலிவுட்டின் வழக்கமான சடங்குகள் அனைத்தும் உள்ளன. இரண்டு ஃபிளாஷ்பேக் காட்சிகள் எப்போது முடியுமோ என்ற அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்லூரிக் காட்சிகளில் சுவாரஸ்யமான, புதுமையான அம்சம் எதுவும் இல்லை.

விஜய் சேதுபதியிடம் தன் காதலைச் சொல்லும் சிருஷ்டி டாங்கே அதன் பிறகு ஏன் அதுபற்றிப் பேசுவதே இல்லை? தமன்னா தன் உணர்வுகளை வெளிப்படுத்த ஏன் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை? கல்லூரியில் அவ்வளவு நெருக்கமாகப் பழகுபவர்கள் அதன் பிறகு ஏன் எந்தத் தொடர்பும் இல்லாமல், துப்பறிந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்?

பல கதாபாத்திரங்கள் யதார்த்தத்துக்குப் புறம்பாக, மிதமிஞ்சிய நல்லவர்களாக இருப்பது திகட்டுகிறது. படத்தின் நீளம் பொறுமையைக் கடுமையாகச் சோதிக்கிறது.

ராதிகா, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ஆகிய மூவரின் நடிப்பும் மனதில் நிற்கிறது. குறிப் பாக, பாண்டியம்மா கதாபாத்திரத்தில் ராதிகா அநாயாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக் கிறார். விஜய் சேதுபதியை இதேபோன்ற காட்சிகளில் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் என்றாலும் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வஞ்சனை இன்றி வழங்கியிருக்கிறார்.

‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்ச நேரம் திரையில் வந்தாலும் அழுத்தமான நடிப்பைத் தருகிறார். சற்றே கனமான வேடத்தை தமன்னா நன்கு கையாள்கிறார். சிருஷ்டி டாங்கேவுக்கு நடிப்பதற்குப் பெரிய வாய்ப்பு இல்லை. துணைக் கதாபாத்திரங்களில் வரும் எம்.எஸ்.பாஸ்கர், ராஜேஷ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட எந்த நடிகரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

எம். சுகுமாரின் கேமரா, யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஆகியவை படத்துக்குப் பெரிய பலம். ‘மக்கா கலங்குதப்பா’ பாடல் தனித்து நிற்கிறது. வைரமுத்துவின் வரிகள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. சுகுமாரின் கேமரா தேனி, கோடைக்கானல் ஆகிய இடங்களின் அழகை அள்ளித் தருகிறது.

திரைக்கதையின் நோக்கத்திலும், படத் தொகுப்பிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந் தால் ‘தர்மதுரை’ மருத்துவ துறை பற்றிப் பேசிய முக்கியமான திரைப்படமாக இருந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x