Published : 13 Jun 2014 12:01 PM
Last Updated : 13 Jun 2014 12:01 PM

திரை முற்றம்: இதுதான் காதல் என்பதா?

தெலுங்குத் திரையுலகில் முதலிடத்தில் இருந்தார் தமன்னா. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்ததன் வழியாக அவரை இரண்டாவது இடத்துக்குத் தள்ளினார் சமந்தா. இந்தநேரத்தில் தமன்னாவுக்குக் கைகொடுத்தது பாலிவுட். பிரபல விளம்பர மாடலாக இருந்த தமன்னாவைக் கடந்த 2005-ல் வெளியான ‘சந்த்ஷா ரோஷன் ஷெஹ்ரா’ படத்தின் மூலம் திரைக்கு அறிமுகப்படுத்தியதே பாலிவுட்தான். ஆனால் அறிமுகப்படம் கவனிக்கப்படாமல் போனதில் தென்னிந்தியாவை நம்பிப் புறப்பட்டு வந்தவரை தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். கடந்த 9 ஆண்டுகளில் 30 தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். தெலுங்குத் திரையில் தமன்னாவை யாரும் அசைக்க முடியாது என்ற நேரத்தில், சமந்தாவோடு ஸ்ருதிஹாசனும் மல்லுக்கு நிற்க, தமன்னாவைக் கொஞ்சம் சீனியர் ஹீரோயின் போலப் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் பாலிவுட்டுக்கு இந்தத் தகுதிதானே முக்கியமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் ஜோடியாக ‘ஹிம்மத்வாலா’ என்ற, 80களில் வெளியான இந்திப் படத்தின் ரீமேக்கில் ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைத்தார் சஜித் கான். ஆனால் அந்தப் படம் தோல்வி அடைந்த நிலையில், சஜித் கான் தமன்னாவைப் பார்த்து “ நாம இதுக்கு முன்னால எங்கேயாவது மீட் பண்ணியிருக்கமா?” என்று கேட்பதுதானே திரையுலகில் வழக்கம்? ஆனால் சஜித் கான் மீண்டும் தமன்னாவுக்கு இரண்டாவது பெரிய வாய்ப்பைக் கொடுத்துவிட்டார். இவரது இயக்கத்தில் வரும் வெள்ளியன்று (ஜூன் 20) பாலிவுட்டில் வெளியாகும் ‘ஹம்சகல்ஸ்’ படத்தில் சயீப் அலிகான் ஜோடியாக மீண்டும் தமன்னாவையே நடிக்க வைத்திருக்கிறார் சஜித் கான்.

இந்தப் படத்தில் பிபாஷா பாசு, இஷா என்று மேலும் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் தமன்னாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தி ருக்கிறார் என்று பாலிவுட்டில் பரபர புகைச்சல். சஜித் கானும், தமன்னாவும் நெருக்கமாகப் பழகுகிறார்கள் எனப் பாலிவுட் ஊடகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகின்றன. மேலும் நீச்சலுடை அணிந்து நடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமன்னா திட்டவட்டமாகப் பலமுறை பேட்டியளித்திருந்தார். ஆனால், ‘ஹம்சகல்ஸ்’ படத்தில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நீச்சலுடையில் முதல்முறையாக நடித்திருக்கிறார் தமன்னா. முடிவை ஏன் மாற்றிக்கொண்டீர்கள்? சஜித்தைக் காதலிப்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று தமன்னாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு..” நீச்சலுடை அணியும் முடிவை சஜி எனது முடிவுக்கே விட்டுவிட்டார். அவர் என்னை வற்புறுத்தவில்லை. எனக்கும் சஜித் கானுக்கும் இடையே இருப்பது பாசம் மட்டும்தான். அவர் என்னுடைய சகோதரர் மாதிரி” என்று கூறியிருக்கிறார். ஆனால் தமன்னாவின் இந்தப் பதிலை நம்பாமல் சஜித் கானின் அடுத்த பட அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார்கள். காரணம் சஜித்தின் அடுத்த படத்திலும் தமன்னாதான் முதன்மைக் கதாநாயகி என்று அங்கே சூடாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x