Published : 27 Jun 2014 11:30 AM
Last Updated : 27 Jun 2014 11:30 AM

ஜெயம் ரவி வில்லன்! ஹன்சிகா வில்லி!: இயக்குநர் லட்சுமணன் பேட்டி

படத்தில் என்னோட கேரக்டர்தான் ஜெயம் ரவி, என் மனைவியோட கேரக்டர் தான் ஹன்சிகா. அதுக்காக இந்தப் படம் என்னோட வாழ்க்கைக் கதைன்னு நினைக்காதீங்க. அவங்களோட குணாதிசயங்கள் அப்படி இருக்கும்” என்று தன் சொந்த வாழ்க்கையை கொஞ்சமாகத் தொட்டுக்கொண்டு பேச்சைத் தொடங்கினார் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் இயக்குநர் லட்சுமணன். எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர். அப்படியானல் படத்தில் ‘அடல்ஸ் ஒன்லி’ விவகாரங்கள் அதிகமிருக்குமா..? அவரிடமே கேட்டோம்...

படத்தோட தலைப்புல காதல் பொங்கி வழியுது. ஆனால் ‘ரோமியோ ஜூலியட்’ங்கிற தலைப்புக்குக் கீழே ‘தி நியூ வெர்ஷன்’னு ஒரு துணைத் தலைப்பு சேர்த்து இருக்கீங்களே?

நாயகி எப்பவுமே ஒரு பயத்தோடவே வாழ்கிற கேரக்டர். வீட்டைப் பூட்டிட்டு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை இழுத்துப் பார்ப்பாங்க, வெளியூருக்கு போனா மாத்திரை, மருந்து, அயோடெக்ஸ்னு எல்லாமே வெச்சிருப்பாங்க, கோவிலுக்குப் போனா பிச்சை போட சரியான சில்லறை எடுத்துட்டுப் போவாங்க, இந்தமாதிரி எல்லாமே ப்ளான் பண்ணிதான் செய்வாங்க. எல்லாரும் பிறந்தநாள் வரும்போது சந்தோஷமா இருப்பாங்க, ஆனா நம்ம நாயகி எனக்கு ஒரு வயசு அதிகமாகிடுச்சேன்னு அழுவாங்க.

நாயகன் இதுக்கு நேர்மாறான ஆள். ஒரு முறை தோற்றுப் போனா, அடுத்த முறை பார்த்துக்கலாம்னு ஜாலியா எடுத்துக்கிற கேரக்டர். இந்த ரெண்டுபேருக்கும் எப்படிக் காதல் வருது, சண்டைகள் வருதுன்னு ரொம்ப ஜாலியா சொல்லியிருக்கேன். ‘ரோமியோ ஜுலியட்' ஒரு காதல் சகாப்தம். அதோட இன்னொரு பரிமாணம்தான் இந்தப் படம். அதனால்தான் இப்படியொரு துணைத் தலைப்பு வெச்சிருக்கேன். ‘ரோமியோ- ஜுலியட்' உண்மைக் கதையில காதலோட ரெண்டு பேருமே இறந்து போயிடுவாங்க. ஆனால் இந்தப் படத்துல ஹீரோதான் வில்லன், ஹீரோயின்தான் வில்லி . இந்த ரெண்டு பேருக்குள்ள இருக்க காதல்தான் என்னோட ‘ரோமியோ ஜுலியட்'.

ஆக்‌ஷன் கதைகள் பண்ணிட்டு இருந்த ஜெயம் ரவியைத் திரும்பவும் லவ்வர் பாயாக மாத்திட்டீங்க போல?

இந்தப் படத்தோட கதையை எழுதும்போதே ஜெயம் ரவியை மனசுல வைச்சுதான் எழுதினேன். அவர்கிட்ட கதை சொன்னதும் ‘எனக்காகவே எழுதின கதைமாதிரி இருக்கேன்னு ஃபீல் பண்ணிட்டு உடனே ஓகே சொல்லிட்டார். சிம்ரன், ஜோதிகா இவங்களுக்கு அப்புறம் நடிப்புத் திறமை ஹன்சிகாவுக்கு தான் இருக்கு. இந்தப் படத்துல ஹன்சிகா நடிப்பைப் பார்த்துட்டு எல்லாருமே பாராட்டுவாங்க.

எஸ்.ஜே. சூர்யாகிட்டேயிருந்து வந்துருக்கீங்க. அவரோட படம்ன்னா ஒரே சர்ச்சையாத்தானே இருக்கும்?

என்னோட தலைவர் அவ்வளவு சீக்கிரமா சமாதானமாக மாட்டார். ரசிகர்களுக்கு எல்லாத்தையும் அசாதாரணமா கொடுக்கணும்னு நினைப்பார். அவரோட ‘இசை' படம் அசத்தலான கதைக்களம். அவ்ளோ நல்லா வந்திருக்கு. அவர் எடுக்குறதுல ஒரு 30 சதவீதம்தான் நான் எடுக்கிறேன்.

இந்தப் படத்துல முன்னணி கதாநாயகர்கள் சிலர் நட்புக்காக நடிக்கிறது உண்மைதானா?

ஆமாம். இந்தக் கதைப்படி ஹீரோவுக்கு ஜிம் கோச் கேரக்டர். அதாவது சிக்ஸ் பேக் ஸ்பெஷலிஸ்ட். சினிமா ஹீரோக்களுக்கு சிக்ஸ் பேக் வேணும்னா இவர்கிட்ட வந்தா போதும், மத்ததை அவர் பார்த்துக்கு வார். அப்படியொரு கதாபாத்திரம். அவர்கிட்ட சிக்ஸ் பேக் வைக்க ஜிம்க்கு வர்ற கதாபாத்திரத்துக்கு சில ஹீரோக்கள்கிட்ட கேட்டு இருக்கேன். இன்னும் முடிவாகல. ஆர்யா மட்டும் ஒத்துக்கிட்டார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நானும் ஆர்யாவும் நண்பர்கள். ஜிம் மேட்ஸ். ஒரே ஏரியால வசிச்சோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு விளம்பரம்கூட எடுத்துக் கொடுத்திருக்கோம்.

விளம்பரம் வழியாத்தான் சினிமாவுக்கு வந்தீங்களா?

நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை செளகார்பேட்டையிலதான். நடன இயக்குநர் சிவசங்கர் வீட்டிலதான் வளர்ந்தேன். குழந்தைல இருந்தே சினிமா மேல ஆர்வம் அதிகம். நண்டு பிராண்ட் லுங்கீஸ் விளம்பரம் நான் பண்ணினதுதான். இந்த மாதிரி விளம்பரங்கள் பண்ணதால மக்களுக்கு என்ன பிடிக்கும்னு ஜட்ஜ் பண்ண முடியும். எனக்குத் தமிழ்சினிமா மேல நிறைய கோபமும் இருக்கு. எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்கிறாங்க. கதை எழுதுறது தனி, திரைக்கதை உருவாக்கம் தனி, இயக்கம் தனி. படத்துக்குக் வெற்றி கிடைச்சுட்டா இயக்குநரை மட்டும்தான் இங்கே பாராட்டுறாங்க. இது ரொம்ப அநியாயம். ஹிட்டடிச்ச கதைய கருவா மூளையில சுமந்து அதுக்கு உருவம் கொடுத்த, அதுக்கு திரைக்கதைங்கிற முகம் கொடுத்த சினிமா கதாசிரியர்களைப் பத்தி யாருமே கவலைப் படுறதில்ல. இயக்குநர்களையும், கதாசிரியர்களையும் பிரிச்சுப் பார்க்கணும். அவங்களை அங்கீகரிக்கணும். இயக்குநருக்கு இணையா அவங்களுக்கு ஊதியம் கொடுக்கணும். இந்த விஷயம் கண்டிப்பா மாறணும். இல்ல அதை மாத்துற ஆட்கள்ல நானும் ஒருத்தனா இருக்கணும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x