Published : 04 Jan 2017 10:44 AM
Last Updated : 04 Jan 2017 10:44 AM

சினிமா எடுத்துப் பார் 90: கால்ஷீட் என்றால் என்ன தெரியுமா?

ஏவி.எம்.சரவணன் சார், ‘உலகம் பிறந் தது எனக்காக’ படத்தோட வேலை களை ஜனவரியில தொடங்குறோம். ஏப்ரல்ல ரிலீஸ் பண்ணணும்!’ என்றார். அதற்கு சத்யராஜ், ‘நிறைய படங்கள் இருக்கு சார். ஏப்ரல்ல ரிலீஸ் செய்றது கொஞ்சம் கஷ்டம்?’ என்று தயங்கினார். அதற்கு சரவணன் சார், ‘நீங்களும், முத்துராமனும் பேசி ஒரு முடிவு எடுங்க? ’ என்றார்.

சத்யராஜ் என்னிடம் வந்து, ‘சரவணன் சார் சொல்றமாதிரி படத்தை ரிலீஸ் பண்ணணும்னா, நான் கொடுக்குற தேதிகள்ல பகல் நேரத்தோட இரவுலயும் ஷூட் பண்ணாத்தான் சரியா வரும்’ என்றார். அதற்கு நான், ‘உங்களுக்கு நைட் ஷூட் ஓ.கே என்றால் எங்கள் யூனிட்டும் ரெடி’ என்றேன்.

கால்ஷீட்.. கால்ஷீட் என்று சினிமா வில் பேசுகிறோமே? அது என்ன தெரி யுமா? படப்பிடிப்பு காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந் தால், அது ஒரு கால்ஷீட். அதேமாதிரி, மதியம் 2 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடந்தால் அது ஒரு கால்ஷீட். இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை நடந்தால் அது ஒரு கால்ஷீட். அதுவே, காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தால், அது ஒன்றரை கால்ஷீட்.

சத்யராஜ் பகல் ஷூட்டிங் போக, இரவு நேர கால்ஷீட்டிலும் நடிக்க ஒப்புக்கொண்டதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடத்தி, பிறகு இரவுநேர படப்பிடிப்பு தொடங்கி அதிகாலை 2 மணிக்கு முடிப்போம். ஆக மொத்தம் இரண்டரை கால்ஷீட். அப்படி வேலை செய்து படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தோம்.

படப்பிடிப்பில் இரவு 11 மணி ஆனதும் சாண்ட்விச்சும், டீயும் வரும். அப்படி வந் தால் அன்றைய படப்பிடிப்பை நள்ளிரவு 12 மணிக்கு முடிக்கப்போவதில்லை; அதிகாலை 2 மணி வரை தொடரப் போகிறது என்று அர்த்தம். இரண்டு, மூன்று நாட்கள் சாண்ட்விச், டீ கொடுத்த போது அமைதியாக இருந்த சத்யராஜ் 4-வது நாள் இரவு 11 மணிக்கு சாண்ட் விச், டீ வந்ததைப் பார்த்து , ‘என்னது.. இன்னைக்கும் அதிகாலை 2 மணி வரை படப்பிடிப்பா? ’ என்றார். அதற்கு நான், ‘இரவு ஷூட்டிங் ஐடியாவையே நீங்கதானே கொடுத்தீங்க. ஏப்ரல்ல படத்தை ரிலீஸ் செய்யணும்னா இன்னும் பல நாட்கள் சாண்ட்விச், டீ சாப்பிட்டா கணும்’ என்றேன் சிரித்துக்கொண்டே. அவரும் முக மலர்ச்சியோடு அதை ஏற் றுக்கொண்டு படப்பிடிப்பில் முழு ஒத் துழைப்பு கொடுத்து நடித்தார். உழைக்க அஞ்சாத கடும் உழைப்பாளி, சத்யராஜ்!

இரட்டை வேடம் ஏற்ற சத்யராஜுக்கு கவுதமி, ரூபிணி என 2 பேர் ஜோடி. ஆர்.டி.பர்மன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘அடடா வயசுப் புள்ள அடியெடுத்தா ஜல்..ஜல்’ என்ற பாடல் நல்ல தாளக்கட்டோடு அமைந்தது. பாட்டுக்கு சத்யராஜ், கவுதமி இருவரும் நடனம் ஆடினார்கள். நல்ல தாளத்துக்கு நல்ல நடனம் அமைந்து விட்டால் பாட்டு இன்னும் சிறப்பாகிவிடும். நடனம் சிறப்பாக வரவேண்டும் என்று எங்கள் நடன இயக்குநர் புலியூர் சரோஜா, அவர்கள் இருவரையும் பிழிந்து எடுத்துவிட்டார். வாகினி ஸ்டுடியோ வில் கலை இயக்குநர் சலம் அமைத்த செட்டில் நடனம் பிரம்மாண்டமாக அமைந்தது. டி.எஸ்.விநாயகத்தின் ஒளி வண்ணம் அந்தப் பாட்டை பிரகாசமாக்கியது.

தமிழ்த் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை உலகில் தங்களுக்கென்று தனி இடத்தை உரு வாக்கி வைத்திருந்த ‘இரட்டையர்’ கவுண்டமணி, செந்தில். ‘உலகம் பிறந்தது எனக்காக’ படத்தின் படப்பிடிப்பு நடந்த போது, அவர்கள் இருவருமே உச்சத்தில் இருந்தார்கள். ஒருவரை மற்றவர் ஏமாற்று வதும், நக்கல் அடித்துக் கொள்வதும், அடி வாங்குவதும் என்று அவர்களின் நகைச்சுவைக்கு இன்றைக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கவுண்ட மணி - செந்தில் நகைச்சுவை, ஹாலிவுட் டில் லாரல், ஹார்டி காமெடிபோல சிறந்தது. அப்படிப்பட்ட இரட்டையர்கள், இந்தப் படத்தில் நடித்தது நகைச்சுவைக் காட்சிகளுக்கு மெருகேற்றியது.

படத்தில் கவுண்டமணி, செந்தி லுடன் சேர்ந்து நகைச்சுவை கதாபாத்திரத் தில் லலிதகுமாரி நடித்தார். நல்ல கதா பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர். ‘விஜயபுரி வீரன்’ ஆனந்தனின் மகள். ஆனந்தன் எங்கள் ‘வீரத்திருமகன்’ படத் தின் நாயகன். அதனால் எங்கள் குழுவில் லலிதகுமாரி செல்லப் பெண். இவர் டிஸ்கோ சாந்தியின் சகோதரியும்கூட.

சிவப்பான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று இருக்கும் செந்திலை ஏமாற்றி, கருப்பாக இருக்கும் லலிதகுமாரிக்கு சிவப்பு வர்ணம் பூசி திருமணத்தை முடித்து வைத்துவிடுவார் கவுண்டமணி. மறு நாள் அவரது குட்டு வெளிப்பட்டுவிடும். தன் லட்சியத்தைக் கெடுத்துவிட்டானே என்று கவுண்டமணி கத்துவார். ‘முதலிரவு முடிந்துவிட்டது. அவரோடுதான் வாழ்ந் தாக வேண்டும்’ என்று செந்தில் கூலாக பதில் சொல்வார். செந்தில், கவுண்ட மணி, லலிதகுமாரி மூவரும் நடித்த இந்த நகைச்சுவைக் காட்சி வயிறு புண் ணாகும் அளவுக்கு சிரிக்க வைத்ததோடு, மக்களிடம் பெரிய அளவில் பெயரும் வாங்கிக் கொடுத்தது.

‘மனிதன்’ படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த ரூபிணி, இப்படத்தில் சத்யராஜுக்கு இன்னொரு ஜோடி. இவர் களோடு சோ, மனோரமா, வித்யா, சரண்யா போன்ற சிறந்த நடிகர், நடிகை கள் நடித்தனர். ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினியின் ஜோடியாக பயந்து கொண்டே நடித்த கவுதமி திறமையான கதாநாயகியாக வளர்ந்து சிறந்த கதா நாயகிகள் வரிசையில் இடம்பிடித்தார். இந்தப் படத்தில் அழகிலும், நடிப்பிலும் உயர்ந்து நின்றார்.

படத்துக்கு நடிகர்களும், டெக்னீஷி யன்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்த தால் திட்டமிட்டபடி படத்தை முடித்து, குறிப்பிட்ட நாளில் வெளியிட்டோம். தயாரிப்பாளர் சரவணன் சாருக்கு முழு திருப்தி!

பூரணசந்திர ராவ் பிரபல தயாரிப் பாளர். ‘லஷ்மி புரொடக்‌ஷன்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தெலுங்கில் நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்தவர். இந்தியில் அமிதாப் பச்சன், ரேகா இருவரது நடிப்பில் வெற்றிப் படங்களை எடுத்த பெருமைக்குரியவர்.

ஒருமுறை என்னையும், பஞ்சு அருணா சலத்தையும் அழைத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘யமுடிகி மொகுடு’ படத்தை போட்டுக் காண்பித் தார். படம் முடிந்தது. நான் பஞ்சு அருணாசலத்தைப் பார்த்தேன். பஞ்சு என்னைப் பார்த்தார். எங்களுக்குள் ஒரே குழப்பம். ஏன்?

- இன்னும் படம் பார்ப்போம். | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x