Published : 14 Sep 2016 11:17 AM
Last Updated : 14 Sep 2016 11:17 AM

சினிமா எடுத்துப் பார் 75: ரகுவரனின் மாறிய பாதை!

காரைக்குடி இராம.சுப்பையா - விசாலாட்சி பெற்றெடுத்த என் தம்பி எஸ்பி.செல்வமணி இறந்துவிட்டார். சகோதரர்கள் நால்வர். இன்று மூவராகிவிட்டோம். செல்வமணி, பொதுப்பணித் துறையில் சிறந்த முறை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் மனைவி சரோஜா மாநகராட்சிப் பள்ளி களில் தமிழாசிரியராகப் பணியாற்றி நல் லாசிரியர் விருது பெற்று, ஓய்வு பெற்ற வர். செல்வமணி இல்லாமல் சரோஜா இல்லை. சரோஜா இல்லாமல் செல்வ மணி இல்லை என்று ஒற்றுமையாக எடுத் துக்காட்டான தம்பதிகளாக வாழ்ந்து காட்டினர்.

தங்கள் வரவு, செலவு கணக்கைத் தினம் எழுதி வைத்து, வரவுக்கு ஏற்ற செலவு செய்து, அதில் சேமிக்கவும் செய்தார்கள். பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து ஒழுக்கத்துடன் வளர்த்தார்கள். பிள்ளைகள் நல்லவராவதும், கெட்டவ ராவதும் பெற்றோர் கையில் என்பதை நிரூபித்தார்கள்.

சரோஜாவுக்கு ஒரு விபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற, ஒரு மாதமாக மனை விக்கு நர்ஸாக சேவை செய்தார் செல்வமணி. அதன் விளை வாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மனைவி தன் உடல் நலக்குறைவோடு கணவனைக் கவனித்துக்கொண்டார். செல்வமணிக்கு நவீன அறுவை சிகிச்சை. பிள்ளைகள் பணத்தை எண்ணாமல் அள்ளிக் கொடுத் தனர். ஆனாலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சரோஜாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?

திட்டமிட்டு வாழ்ந்த அவர் வாழ்க்கை யைப் பின்பற்றுவதே நமக்கு ஆறுதலை தரும். விழியில் வழியும் நீரைத் துடைத் துக்கொள்கிறேன். வழி தெரிகிறது!

சென்ற வாரம்.. ‘மிஸ்டர் பாரத்’ படத் தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் இரண்டு, மூன்று கார்களை ஜம்ப் செய் வேன் என்று சொன்ன ஃபைட்டர், கடைசி யில் முதல் காரை ஜம்ப் செய்யும்போது அந்த காரின் மேலேயே விழுந்துவிட்டார். ஜீடோ ரத்தினம் மாஸ்டரிடம், ‘‘என்ன மாஸ்டர் நம்ம ஃபைட்டர், மூணு காரை ஜம்ப் பண்றேன்’’ என்று சொன்னாரே என்று கேட்டேன். அதற்கு மாஸ்டர் சிரித் தார். வாய்ச் சொல் வீரர்கள் செயல்வீரர் களாக இருப்பதில்லை. முடிவாக, ஃபைட் டர் விழுந்த அந்த முதல் காரிலேயே சண்டைக் காட்சியை எடுத்து முடித்தோம். படம் நன்றாக அமைந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. ஏவி.எம்-ன் முத்திரை பதித்த வெற்றிப் படங்களில் ‘மிஸ்டர் பாரத்’ படமும் இணைந்தது.

அந்த சமயத்தில் எனக்கு கண்ணில் ‘காட்ராக்ட்’ ஏற்பட்டது. சங்கர நேத்ரா லயா கண் மருத்துவமனையில் காட்டி னேன். அறுவை சிகிச்சை செய்ய வேண் டும் என்று சொன்னார்கள். ஏவி.எம்.சர வணன் சார், ‘‘உலகளவில் சிறந்த கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர் களையே உங்களுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்யச் சொல்கிறேன்’’ என்று சொல்லி முன்னின்று ஏற்பாடு செய்தார். நான் கண்ணொளி பெற்று பல ஆண்டு களாக சிறப்பாக வாழ்ந்து வருகிறேன். டாக்டர் எஸ்.எஸ்.பி அவர்களுடன் சேர்ந்து டாக்டர் டி.எஸ்.சுரேந்தர், லிங்கம் கோபால், தருண் சர்மா, ஜோதி பாலாஜி, ராஜேஸ்வரி எல்லோரும் பார்த்துக்கொள்கின்றனர். நான் சங்கர நேத்ராலயாவின் ‘நண்பனாக’வாழ்ந்து வருகிறேன். எனக்கு ‘சங்கர ரத்னா’ விருது கொடுத்து ‘சங்கர நேத்ராலயா’ டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் குழுவினர் கவுரவித்தார்கள்.

நான் ‘காட்ராக்ட்’அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் ஓய்வில் இருந் தேன். ஏவி.எம்.சரவணன் சார் அவர் களும், குகன் அவர்களும் என்னை நலம் விசாரிக்க வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘சார், நாம் அடுத்தக் கட்டத்துக்கு போகணும்!’’ என்றேன்.

சரவணன் சாருக்கு நான் அப்படி சொன்னது ஆச்சர்யத்தைத் தந்தது.

‘‘முத்துராமன், ஏன்… என்ன திடீர்னு?’’ என்று கேட்டார். இப்போது தொலைக்காட்சியை மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள். பவர்ஃபுல் மீடியமாக மாறி வருகிறது. இந்த நேரத்தில் நாமும் டி.வி-க்கு போனால் நன்றாக இருக்கும். நாம் அடுத்த கட்டமாக தொலைக்காட்சிக்குப் போக வேண்டும்!’’ என்றேன்.

சரவணன் சார் சிரித்துக்கொண்டே ‘‘பண்ணுவோம்’’ என்று சொல்லி, புறப்பட்டார். ‘பண்ணுவோம்’ என்று சொன்னாலே, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். அதுதான் ‘ஏவி.எம்!’

எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய, ‘ஒரு மனிதனின் கதை’ என்ற நாவலை தொலைக்காட்சித் தொடராக எடுக்கத் திட்டமிட்டோம். ‘குடிப்பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மைய மாக கொண்ட கதை அது. அந்தத் தொட ருக்கு யாரை கதாநாயகனாக போடுவது என்று யோசித்தபோது, ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத் திய ரகுவரன் நினைவுக்கு வந்தார். அவரை அணுகியபோது எந்த யோசனை யும் இல்லாமல் உடனே சம்மதித்தார். சம் மதித்தது மட்டுமல்ல; அந்தக் கதாபாத்திர மாகவே வாழ்ந்து காட்டினார். ‘குடித்து விட்டுத்தான் நடிக்கிறாரோ’ என்று மக்கள் கேட்டனர். அந்த அளவு அவரின் நடிப்பில் யதார்த்தம் தெரிந்தது.

தூர்தர்சனின் ‘பொதிகை’ தொலைக் காட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒளிபரப்பான ‘ஒரு மனிதனின் கதை’ மெகா தொடர் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அப்போதெல்லாம் சென்னையைச் சுற்றி 100 கிலோ மீட்டர் தொலைவுக்குத்தான் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பானது. அந்தப் பகுதிகளில் பார்த்த மக்களிடம் இருந்து வந்த விமர்சனங்கள் பெரிய அளவில் உத்வேகத்தைக் கொடுத்தன.

‘என் கணவர் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரைக் கொடுமைப்படுத்துவ தில்லை’, ‘என் கணவர் இந்தத் தொடரை பார்த்த பிறகு குடிப் பழக்கத்தையே விட்டு விட்டார்’ என்று பல மனைவியர்கள் கடிதம் எழுதினார்கள். அதைப் பார்த்த ஏவி.எம்.சரவணன் சார், தமிழகம் முழு வதும் கொண்டு செல்ல அந்தத் தொடரை சினிமாவாக எடுக்க முடிவெடுத்தார்கள். அந்தப் படம்தான் ஏவி.எம்-ன் ‘தியாகு’.

அந்தப் படத்திலும் ‘தியாகு’வாக ரகுவரனே நடித்தார். தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்த ரகுவரன், அந்தக் காலகட்டத்துக்குப் பிறகு நிஜ வாழ்க்கையில் சில விஷயங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

ஒருமுறை என்னிடம், ‘‘முத்துராமன் சார், வீட்டுல வரவர தொந்தரவு அதிக மாகிடுச்சு. ஹோட்டலில் ஒரு தனி ரூம் எடுத்து தங்கப்போறேன்!’’ என்றார். அதுக்கு நான், ‘‘நீங்க தனியா தங்குறது எனக்கு சரியாப் படலை. உங்களை சுத்தி துணை இல்லாம இருந்தா கண்டதை சிந்திக்கத் தோணும். செயல்படத் தோணும். தப்பு நடக்க நிறைய வாய்ப்பு இருக்கு!’’ என்று சொன்னேன். அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பார்த்தால், ‘ரகுவரன் முழுக்க மதுவுக்கு அடிமை யாகிவிட்டார்’ என்ற செய்திதான் என் காதுக்கு வந்தது. அதை கேள்விப்பட்ட தும் மனம் தாங்கிக்கொள்ள முடிய வில்லை.

ஒரு நாள் நானும், ரஜினியும் சோழா ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந் தோம். அவருக்கு அந்த ஹோட்டலில் தயாராகும் புதினா பரோட்டா ரொம்பவும் பிடிக்கும். அப்போது ரஜினிக்கு பக்கத்து இருக்கையில் ஒருவர் வந்து அமர்ந்தார். கொஞ்ச நேரத்துக்கு பிறகு ரஜினி என் னிடம், ‘‘முத்துராமன் சார், என்ன எது வுமே கண்டுக்காம இருக்கீங்க?’’ என்று கேட்டார். அதற்கு நான், ‘‘என்ன ரஜினி… புரியலையே?’’ என்று சொன்னேன். அப் போது ரஜினி, ‘‘ என் பக்கத்துல உட்கார்ந் திருப்பது யாருன்னு பார்த்தீங்களா?’’ என்று கேட்டார். ‘‘தெரியலையே ரஜினி?’’ என்று சொல்லியபடியே ரஜினி சுட்டிக் காட்டியவரை உற்றுப் பார்த்தேன். யார் அவர்?

- இன்னும் படம் பார்ப்போம்...

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x