Published : 07 Sep 2016 10:08 AM
Last Updated : 07 Sep 2016 10:08 AM

சினிமா எடுத்துப் பார் 74: என்னம்மா கண்ணு சவுக்கியமா?

‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத் துக்காக கமல், ஆவி இரு பாத் திரங்களையும் ‘மிக்சல்’ கேமரா வில் மாஸ்க் செய்து எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தோம். ஜப்பானில் ‘மிக்சல்’ கேமரா கிடைக்கா மலா போய்விடும் என்ற நம்பிக்கையில், அங்கே போய் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கிவிட்டோம். டோக்கியோ வில் ‘மிக்சல்’ கேமரா கிடைக்கவில்லை. விசாரிக்கும்போது, ‘‘இங்கே ‘மிக்சல்’ கேமராவை யாரும் பயன்படுத்துவது இல்லை. அதனால், அதை கண்காட்சி யில் வைத்துவிட்டோம்’’ என்றார்கள்.

அதனால் கமல், ஆவி இரு கதா பாத்திரங்களையும் ஜப்பானில் எங்க ளால் எடுக்க முடியவில்லை. ‘கல்யாண ராமன்’ படத்தில் ஹைலைட் காட்சிகளே கமலுடன் ஆவி இணைந்து வரும் காட்சி கள்தான். அதை எடுக்க முடியாததால் ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் பல காட்சிகள் குறைந்தன. அதன் பலன், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ‘கல்யாணராமன்’ படத்தின் மிகப் பெரிய வெற்றி, ‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தை குறைத்து மதிப்பிட வைத்தது. என்ன காரணம் சொன்னாலும் ‘தோல்வி’யை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். நான் அந்தத் ‘தோல்வி’யை ஏற்றுக் கொண்டேன்.

‘என்னம்மா கண்ணு சவுக்கியமா’ என்று தொடங்கும் காவியக் கவிஞர் வாலி எழுதிய புகழ்பெற்ற பாடல் வரிகள் எல்லோருக்கும் தெரியும். அந்தப் பாட்டு இடம்பெற்ற படம் ஏவி.எம். தயாரித்து, என் இயக்கத்தில் வெளியான ‘மிஸ்டர் பாரத்’. பின்னாளில், அந்தப் பாட்டின் வரி களை என்னுடன் இணை இயக்குநராக பணிபுரிந்த வி.ஏ.துரை, ஒரு படத்துக் குத் தலைப்பாகவே வைத்து படம் தயாரித்தார். அந்த அளவுக்கு வரவேற் பைப் பெற்ற பாடல் வரி அது!

‘மிஸ்டர் பாரத்’ படத்துக்கு கதை சலீம் ஜாவ்டு. திரைக்கதை-வசனம் எழுதும் பொறுப்பை விசு ஏற்றார். அதில் அவரது திறமை மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டது. அப்படத்தில் விசுவும் சிறப்பாக நடித்திருந்தார். படத் தில் ரஜினிக்கு சவாலாக சத்யராஜ் பாடு வது போன்ற அமைப்பில் இடம்பெற்ற ‘என்னம்மா கண்ணு சவுக்கியமா?’ பாட்டு, 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வைஜெயந்தி மாலா, பத்மினி இருவருக் கும் அமைந்த போட்டி நடனத்தைப் போன்றே அமைந்தது.

பாடல் ஒலிப்பதிவின்போதே கருத் தோடு அமைந்த இந்தப் போட்டிப் பாடலை எங்கே எடுக்கலாம் என்ற யோசனை எங்களுக்கு வந்தது. ஏவி.எம்.சரவணன் சார், ‘‘சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானம் இந்தப் பாட் டுக்கு சரியாக இருக்கும். போய் பாருங் கள்’’ என்றார். அவர் சொன்ன மாதிரியே அந்தப் பாட்டுக்கான அழகான சூழல் அங்கே அமைந்திருந்தது. அங்கே அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கி னோம். அந்தப் ‘பச்சைப் புல்’ தரையை உருவாக்கி பாதுகாப்பது எவ்வளவு கஷ்டம். ரேஸ் கிளப்புக்கு பாராட்டுகள்!

ரஜினிகாந்த் எப்போதும் தான் எதை செய்யப் போகிறேன் என்பதை சொல்லவே மாட்டார். நடிக்கும்போது அதை அவருக்குரிய ஸ்டைலில் செய்து விடுவார். அவர் ஸ்டைலுக்கு ஈடாக சத்ய ராஜ் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். தியேட்டரில் ரஜினி, சத்யராஜ் இரு வரது ரசிகர்களும் அவர்களது நடிப்பை பார்த்து மாறி மாறி கைத் தட்டினார்கள். இருவரது ஸ்டைல் நடிப்பும் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றன.

படத்தில் ரஜினிக்கு தாயாக நடிக்கும் பாத்திரத்துக்கு ‘ஊர்வசி’ சாரதா சரியாக இருப்பார் என்று முடிவு செய்தோம். மலையாளப் படங்களில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாகவும், இயற்கையாகவும் இருக்கும். அவர், ‘‘உங்கள் இயக்கத் தில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே காத்திருக்கிறேன், முத்து ராமன் சார்’’ என்று என்னை சந்திக்கும் போது எல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். நடிப்பதைப் போலவே பழகு வதற்கும் அவ்வளவு இனிமையானவர். மற்றவர்களிடம் அன்பு செலுத்துவது எப்படி என்று ‘ஊர்வசி’ சாரதாவிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

அந்தப் படத்தில், அவரை நம்ப வைத்து ஒரு குழந்தைக்குத் தாயாக்கி விட்டு, ஒருவன் ஓடிவிடுவான். அந்தக் குழந்தைதான் ரஜினி! தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை பழி வாங்க வேண்டுமென்று முடிவெடுத்து, சின்ன வயதில் இருந்தே தன் மகன் ரஜினிக்கு வீரத்தை ஊட்டி வளர்ப்பார் சாரதா. இறக்கும்தறுவாயில் ரஜினியிடம், ‘யார் அந்த கயவன் என்பதைச் சொல்லி, அவ னுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும்?’ என்று மகனிடம் இறுதி உறுதி மொழி வாங்கிக்கொண்டு இறந்துவிடு வார். அந்தக் கயவன் பாத்திரம்தான் சத்ய ராஜுக்கு. தந்தை சத்யராஜை மகன் ரஜினி பழி வாங்கத் துடிக்கும் காட்சிகள் உணர்ச்சிமயமாக இருந்ததால் படம் விறுவிறுப்பாக இருந்தது.

’மிஸ்டர் பாரத்’ படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ்

படத்தில் ரஜினிக்கும் சத்யராஜிக்கும் இடையே நடப்பது பழி வாங்கும் கதை என்றால், ரஜினிக்கும், அம்பிகாவுக்கும் இடையே நடப்பது காதல் கதை. அவுட்டோர், அரங்கக் காட்சிகள் என்று இல்லாமல் ஒரு பாட்டை வித்தியாசமாக உருவாக்கத் திட்டமிட்டோம். அந்தப் பாடல் காட்சியை ஃப்ரிஜ்ஜுக்குள் பட மாக்கினோம். பிரிஜ்ஜுக்குள் என்றால் நடிகர்களை சின்னச் சின்ன உருவமாக மாற்றி, தந்திர காட்சியாக எடுக்க வேண் டும். அற்புதமான அந்தத் தந்திர காட்சி களை மக்கள் ஆச்சர்யத்தோடு ரசித்தனர். அதுக்கு ஒளிப்பதிவாளர் காந்த் நிவாஸின் திறமையே முக்கிய காரணம்.

‘ஏழாவது மனிதன்’படத்தில் ரகுவரன் அற்புதமாக நடித்திருந்தும், அதைத் தொடர்ந்து வேறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். ‘‘ரகுவரன் நடிப்பு ‘ஏழாவது மனிதன்’ படத்தில் வித்தியாசமாக இருந்தது. நம்ம படத்தில் நடிக்க அவரிடம் கேளுங்களேன்’’ என்றார் ஏவி.எம்.சரவணன் சார். நாங்கள் ரகு வரனை அணுகியபோது, ‘‘என்னோட ‘ஏழாவது மனிதன்’ கதாபாத்திரத்தை ஞாபகம் வைத்து ஏவி.எம்.சரவணன் சார் கூப்பிடுபோது, உங்க படத்தில் சின்ன கதாபாத்திரமா இருந்தாலும் நான் நடிக்கத் தயார்’’ என்று ஒப்புக்கொண்டார். ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் சாராயக் கடை நடத்தும் பாத்திரத்தில் ரகுவரன் சிறப்பாக நடித்திருந்தார்.

அவர் இடம்பெறும் காட்சிகள் பெரும் பாலும் இரவு 9 மணி படப்பிடிப்பாகவே இருக்கும். ஆனால், 6 மணிக்கே வந்து விடுவார். ‘‘என்ன ரகுவரன், 9 மணிக்குத் தானே உங்களை வரச் சொன்னோம். ஏன் இவ்வளவு சீக்கிரமே வந்துட்டீங்க?’’ என்று கேட்டால், ‘‘பரவாயில்லை சார்! நீங்க எப்படி படப்பிடிப்பு நடந்துறீங் கன்னு பார்க்கலாம்னுதான் முன்னாடியே வந்தேன்’’ என்பார். அவருடைய ‘கற்றுக் கொள்ளும்’ ஆர்வம்தான் அவரை வேக வேகமாக வளர வைத்தது. யாருடைய பாதிப்பும் இல்லாமல், தனக்கென ஒரு தனி நடிப்பை தந்து பெயர் வாங்கினார்.

படத்தின் கிளைமாக்ஸில் ஒரு பாட்டு, ஒரு சண்டை என்று முடிவெடுத்து படமாக்கினோம். சென்னை, விருகம் பாக்கத்தில் உள்ள ஆவிச்சி பள்ளி விளையாட்டுத் திடலில் ரஜினி பாடும், ‘என் தாயின் மீது ஆணை’ பாடலையும், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியையும் எடுக்க ஆரம்பித்தோம். சண்டைக் காட்சியில் ஒரு காரை, இன்னொரு கார் ஜம்ப் செய்து தப்பிப்பதுபோல் ஷாட் எடுக்க ஏற்பாடு செய்தோம். காரை ஜம்ப் செய்ய வந்திருந்த ஃபைட்டர், ‘‘என்ன டைரக்டர் சார், நான் ரெண்டு மூணு காரை ஒரே நேரத்தில் ஜம்ப் செய்ற ஆளு. நீங்கள் ஒரே ஒரு காரை ஜம்ப் செய்ய சொல்றீங்களே?’ என்றார்.

முதலில் ஒரு காரை ஜம்ப் செய்து ஷாட் எடுப்போம் என்று கூறி, அவரை ஒரு காரில் ஜம்ப் செய்ய சொன்னோம். அடுத்து என்ன நடந்தது என்பதை அடுத்து சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்…

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x