Published : 24 Aug 2016 09:45 AM
Last Updated : 24 Aug 2016 09:45 AM

சினிமா எடுத்துப் பார் 72: மெய்ஞானி ரஜினிகாந்த்!

நான் ‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் ஆட்டோ ஜம்ப்பை எடுக்க மூன்று கோணங்களில் கேமராக் களை டி.எஸ்.விநாயகம் வைத்தார். ஸ்டண்ட் மாஸ்டர் ரெடி சொல்ல, ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்து ஒரு மேட்டின் மீது ஓட்டி ஜம்ப் செய்தார். ஆட்டோ உயரத்தில் பறந் தது. நாங்கள் உயிரைக் கையில் பிடித் துக்கொண்டோம். டாக்டர்களும் நர்ஸ் களும் தயார்நிலையில் நின்றார்கள். பறந்த ஆட்டோ கீழே வந்து இறங்கியது. ஓடிப் போய் பார்த்தோம். ஆட்டோ டிரைவருக்கு அடிபடவில்லை. அதற்குக் காரணம் ஆட்டோ இறங்கிய இடத்தில் உயரமாக பல மெத்தைகளைப் போட்டிருந்தோம். அதனால் ஆட்டோ வின் அதிர்வு குறைந்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஃபைட் சேஸ்ஸை செட் அப் செய்யும்போதே நடிகர்கள் அடிபடாமல் பாதுகாப்பாக இருப்பதற்கும் திட்டமிடுதல் வேண்டும். விபத்து நடந்துவிட்டால் விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சண்டையிலும், சேஸ்களிலும் பாது காப்பிலும் சிறந்தவர்கள் ஜூடோ ரத்னமும், பப்புவர்மாவும்.

‘உயர்ந்த உள்ளம்’ படத்தில் வரப் போகும் டைட்டில் கார்டுகளை ஏவி.எம்.சரவணன் சாரிடம் காட்டினேன். படித்துவிட்டு ஓ.கே சொன்னவர், ‘‘முத்து ராமன், இந்தப் படத்தின் முதல் கார்டாக ‘உயர்ந்த உள்ளம்’ எஸ்பி.முத்துராமனின் 50 வது படம்’’ என்று போட வேண்டும் என்றார். அப்படியே போட் டோம். அது ஒரு டைரக்டருக்கு ஒரு தயாரிப்பாளர் கொடுத்த பெருமை. இன்று இது மாதிரியான ‘உறவுகள்’ குறைந்துகொண்டே வருகின்றன.

கமலின் ‘உயர்ந்த உள்ளம்’மக்கள் உள்ளம் கவரும் படமாக அமைந் தது. இப்போது கமலுக்கு உலகப் புகழ்பெற்ற ‘செவாலியர் விருது’ கொடுக்கப்பட்டுள்ளது. அவரைப் பாராட்டுவோம். வாழ்த்துவோம். இந்த விருது அவருக்கு ஊக்கத்தைத் தரட்டும். ‘ஆஸ்கர் விருது’க்கு வழியாக அமையட்டும்.

‘ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை

சான்றோன் எனக்கேட்டத் தாய்’

- என்ற குறளின்படி கமலின் தாயை எண்ணி மகிழ்கிறேன். அண்ணன், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு ‘செவாலியர் விருது’ கிடைத்தபோது மிகப் பெரிய விழா எடுத்ததைப் போல், கமலுக்கு தமிழக அரசும், மத்திய அரசும், இந்தியத் திரை உலகமும் மிகச் சிறப்பான விழா எடுக்க வேண்டும். ஏன் என்றால் அவன் ‘உலக நாயகன்!’

விஞ்ஞானியைப் பற்றி எழுதி னேன். அடுத்து, மெய்ஞானி ரஜினி காந்த். ஒருமுறை ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘ஸ்ரீ ராகவேந் திரர்’ ஆக நடிக்க வேண்டும் என்கிற ஓர் ஆசை உள்ளதைத் தெரிவித்தார். அவரிடம் நான் ‘‘இப்போது வேண்டாம் ரஜினி. கொஞ்ச நாள் ஆகட்டும்’’ என்று கூறினேன். திடீரென்று ஒருநாள், ‘‘எனது நூறாவது படம் வரப் போகிறது. அது ‘ஸ்ரீராகவேந்திரர்’. அதனை கே.பாலசந்தர் சாரின் ‘கவிதாலயா’ பட நிறுவனம் தயாரிக்க நீங்கள் இயக்குகிறீர்கள்’’ என்றார். நான் அசந்து போய் நின்றேன்.

ரஜினி, ‘‘ என்ன… என்ன?’’ என்றார்.

‘‘ரஜினி நீங்கள் ரசிகர்களின் கைதட் டல், விசில்களைப் பெறுகிற வியாபார ரீதியான கதாநாயகன் ஆகிவிட்டீர்கள். நீங்கள் சாதுவாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இந்தப் படத்தில் லாபம் வருமா? நஷ்டம் வருமா? நஷ்டம் வந்தால் நம்ம பாலசந்தர் சார் பாதிக்கப்படுவார். அவர் பாதிக்கலாமா? நான் சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவன். இந்த ஆன்மீகப் படத்தை என்னால் இயக்க முடியுமா? கொஞ் சம் யோசித்துப் பார்’’ என்றேன்.

‘‘அப்படியா!’’ என்று கேட்டுக்கொண்டு போய்விட்டார் ரஜினி. மறுநாள் காலையில் பாலசந்தர் சார் என்னைக் கூப்பிட்டார். ‘‘என்ன.. முத்துராமன் ரஜினியிடம் மூணு கேள்வி கேட்டியாமே. அதற்கு நான் பதில் சொல்றேன்’’ என்றார்.

‘‘ரசிகர்கள் ரஜினியை சாதுவா ஏற்றுக் கொள்வார்களான்னு கேட்டிருக்கிறாய். ரஜினியின் ரசிகர்கள், ரஜினிக்காக தங்கள் உயிரையே கொடுக்கத் தயாராக இருக்காங்க. ரஜினி ராகவேந்திரராக நடிச்சா மெய் மறந்து வரவேற்பாங்க.

‘பாலசந்தருக்கு நஷ்டம் வந்து அவர் பாதிக்கப்படலாமான்னு அடுத்த கேள்வி. எனக்கு லாபம் வந்தாச்சு. ரஜினி நம்ம கம்பெனியில் ஸ்ரீராகவேந்திர ராக நடிப்பதே நமக்கு கிடைத்த புண்ணியம். ரஜினியின் உணர்வுக்கு நாம் மரியாதை கொடுப்போம். ‘நான் சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு ஆன்மிக படத்தை இயக்க என்னால் முடியுமா’ன்னு இன்னொரு கேள்வி கேட்டிருக்கிறாய். நான் சொல்கிறேன். உன்னால் இயக்க முடியும். பலதரப்பட்டப் படங்களை இயக்கி அதில் நீ வெற்றி பெற் றிருக்கிறாய். எந்த ஸ்கிரிப்ட்டையும் கெடுக்கத் தெரியாத டைரக்டர் நீ. ஸ்கிரிப்ட்டை நானும் ஏ.எல்.நாரா யணனும் ரெடி பண்ணிக் கொடுக் கிறோம். நீ டைரக்ட் செய்றே!’’ என்றார் பாலசந்தர்.

பாலசந்தர் சாருக்கு எப்பவும் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுதான். அடுத்த நாளே விளம்பரம் கொடுத்துவிட்டார். என் ‘மனசாட்சி’என்னைப் பார்த்து ‘உன்னால் முடியுமா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தது. அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். புராணப் படங்களின் பிதாமகன் மதிப்புக்குரிய ஏ.பி.நாகராஜன் அவர்கள்தான். அவர் இயக்கிய புராணப் படங்களைப் பார்த்து, அந்த இலக்கணங்களை கற்றுக் கொண்டேன். எந்த வயதிலும் தெரி யாததைத் தெரிந்து கொள்ளலாம்தானே! ஏ.பி.நாகராஜன் படங்கள் எல்லாம் எனக்கு ‘பாடம்’ ஆயிற்று.

ரஜினிகாந்த், அம்பிகா

மந்த்ராலயாவுக்குச் சென்று ஸ்ரீராகவேந்திரரை வணங்கி வந்து, பட வேலைகளைத் தொடங்கினோம். அனைவரும் அசைவம் சாப்பிடாமல் ‘விரதம்’ இருந்தோம். ரஜினி மேக்கப் உடைகளில் ‘ஸ்ரீராகவேந்திரர்’ஆக செட் டுக்குள் வந்தபோது அனைவரும் எழுந்து நின்று வணங்கினோம்.

ஸ்ரீராகவேந்திரர் மனைவியாக நடித் தவர் லெட்சுமி. ஏற்கெனவே ரஜினியும் லட்சுமியும் ‘நெற்றிக்கண்’ படத்தில் கணவன், மனைவியாக தூள் கிளப்பியிருந்தார்கள். ரஜினியும் அமைதியாக, ஆழமாக நடித்தார். ஸ்ரீராகவேந்திரர் பாட அம்பிகா நடன மாடும் ‘போட்டி’ காட்சி ‘சபாஷ்’ வாங்கியது.

சத்யராஜ் ஒரு முஸ்லிம் மன்னன். அவர் அறிமுகத்தை ஒரு மும்பை நடனப் பெண்ணுடன் ஆடுவதுபோல் காட்சி அமைத்திருந்தோம். சத்யராஜ், தனக்கு ஆட வராது. என் கால் உயரம் என்றெல்லாம் அடம்பிடித்தார். நடன இயக்குநர் புலியூர் சரோஜா, ‘‘அமிதாப் பச்சனுக்கும் கால் நீளம்தான் அவர் ஆடவில்லையா?’’ என வாதிட்டு சத்யராஜை ஆட வைத்தார்.

படத்தில் உச்சகட்டம் ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதி அடைவதுதான். ஸ்ரீராக வேந்திரர் உட்கார அவரைச் சுற்றி கற்கள் வைத்து சமாதி கட்டப்படும். அப்பண்ணாச்சாரி ஸ்ரீராகவேந்திரரைப் பார்க்க ஓடி வருவார். அப்பண்ணாச்சாரி கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்தார். இக்காட்சி இளையராஜாவின் இசையோடு இணைந்து உள்ளத்தை உருக்குவதாக அமைந்தது. சமாதி மூடப்படும். சமாதியைப் முட்டி மோதி அப்பண்ணாச்சாரி அழுவார். படம் முடிந் ததும் கே.பாலசந்தர் சாருக்கு போட்டுக் காட்டினேன். ‘வெட்டு’ என்றார்.

- இன்னும் படம் பார்ப்போம்…

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x