Published : 29 Apr 2015 11:15 AM
Last Updated : 29 Apr 2015 11:15 AM

சினிமா எடுத்துப் பார் 6- பட நீளம்!

‘சினிமா எடுத்துப் பார்’ தொடரை எழுதத் தொடங்கியதில் இருந்து வாரா வாரம் அலைபேசி அழைப்பு களோடுதான் என் புதன்கிழமை அதிகாலை விடிகிறது. கடந்த புதன்கிழமை அலைபேசியின் முதல் அழைப்பு எடிட்டிங் அசோஸியேஷன் தலைவர் கே.ஆர்.ராமலிங்கத்திடம் இருந்து வந்தது.

‘எடிட்டிங் துறைச் சார்ந்த நிறைய தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த வாரப் பதிவில் எடிட்டர் சங் குண்ணி அதிக படங்கள் பணிபுரிந்தது மலையாள இயக்குநர் ஐ.வி.சசி என்று கூறியிருந்தீர்கள். இயக்குநர் ஜோஷி யிடம் 64 படங்களும், இயக்குநர் சசி குமாரிடம் 80-க்கும் மேற்பட்ட படங்களி லும் பணிபுரிந்தவர் அவர்’ என்றார். எடிட்டர்கள் இந்தத் தொடரின் பதிவு களைக் கூர்ந்து கவனித்துவருவதும், சரியான தகவலோடு அழைத்து பாராட்டியதும் பெருமைக்குரிய விஷயமே!

பீம்சிங் இயக்கிய ‘சகோதரி’ திரைப் படம் முழு வேலைகளும் முடிந்து தயாரானது. எல்லோருடனும் சேர்ந்து மெய்யப்ப செட்டியாரும் படத்தைப் பார்த்தார். முடிந்ததும் ‘ஒரு நாள் டைம் கொடுங்க’ என்று கூறிவிட்டு புறப்பட்டார். அடுத்த நாள், ‘‘ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறதே. படத்தில் எமோஷ்னல் சரியாக வந்திருக்கிறது.

சென்டிமெண்ட் கலந்த அந்த எமோஷ்னல் படத்தை இறுக்கமாக கொண்டுபோகும். இதற்கு சில இடங்களில் நகைச்சுவை இருந்தால் தான் சரியாக இருக்கும். இல்லையென் றால் அழுகை படமாக மாறிவிடும்’’ என்றவர், ‘‘சந்திரபாபுவை வைத்து ஒரு காமெடி டிராக் படத்தின் நடுநடுவே சேர்த்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

நம்மை வைத்துதான் அந்தக் காட்சி களை எடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட சந்திரபாபு, ஒரு பெரிய தொகையை சம்பளமாகக் கேட்டார். அதற்கும் செட்டியார் மறுப்பில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘நான் ஒரு முட்டா ளுங்க...’ பாடல் அந்தப் படத்தில்தான் இடம்பெற்றிருக்கும். ஒரு படம் முடிந்து விட்டது என்று முற்றுப்புள்ளி வைக்கா மல், அதை இன்னும் எப்படி செதுக்கலாம் என்கிற கவனம் மெய்யப்ப செட்டியா ருக்கு எப்போதுமே இருந்தது. அந்தப் படத்தில் எமோஷனலோடு, காமெடியும் சேர்ந்ததால் அது பெரிய வெற்றிப்படமாக ஆனது.

வேலையைப் பங்குப் போட்டுக் கொண்டு தூங்குகிற சூழல் எடிட்டிங் பிரிவில் பணியாற்றிய நாட்களில்தான் பிரதானமாக அமையும். ‘நீ கொஞ்ச நேரம் தூங்குப்பா. நான் கொஞ்ச நேரம் வேலையைக் கவனிக்கிறேன்’ என்று சக எடிட்டிங் பணியாளர்களுக்குள் பிரித்துக் கொண்டு, மாறி மாறி தூங்கச் செல்வதும், வேலை பார்க்கச் செல்வதுமாக இருந்த காலம் அது. அப்படி தூங்கச் செல்லும் போது எடிட்டிங் அறையில் ஃபிலிம் வேஸ்ட் துணி கவர் இருக்கும். அந்தக் கவரை எடுத்து உதறிவிட்டுத் தரையில் விரித்து, ஃபிலிம் கேனை (கேன்) தலைக்கு தலையணையாக வைத்துக்கொண்டு தூங்குவோம்.

இயக்குநரும், இசையமைப்பாளரும் அமர்ந்து எந்த இடத்தில், என்ன மாதிரி இசை வேண்டும் என்று பில்டப் செய்கிற விஷயம் ரீ-ரெக்கார்டிங். படத்தின் வேகத் தையும், உணர்ச்சிகளையும் மேலும் செப்பனிடுகிற வேலை பின்னணி இசை யில்தான் அமையும். ஒரு படம் மக்களை கவர்கிற வாய்ப்பு அதிகம் உள்ள இடம் பின்னணி இசை சரியாக பிரதிபலிக்கிற இடம் என்றே சொல்லலாம். வசனம், எஃபெக்ட், பின்னணி இசை இவற்றை இணைத்து எடுப்பதுதான் படத்தின் முதல் பிரதி. இதில் எல்லாவற்றிலுமே எடிட்டருடைய பங்களிப்பு இருக்கிறது. இது எல்லாவற்றையும் எடிட்டர் சரியாக செய்தால்தான் முதல் பிரதியைச் சரியாக பார்க்க முடியும்.

‘களத்தூர் கண்ணமா’ படத்தை ‘மவூரி அம்மாயி’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்த நேரம். அந்தப் படத்தைப் பற்றி ஆந்திரா முழுக்க நல்ல பேச்சு. ‘ஏம்பா… இந்தப் படத்தை நேரடியாக தெலுங்கில் எடுத்தால் என்ன?’ என்று செட்டியார் கேட்டார். ‘டப்பிங் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது எப்படி சரியாக வரும்?’ என்று சுற்றி நின்றுகொண்டிருந்த எல்லோரும் கூறினோம். ‘நல்ல கதை என்றால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தான் செய் வார்கள். ‘ராமாயணம்’, ‘மகா பாரதம்’ நல்ல கதை என்பதால்தானே, பல தடவை ஈர்ப்போடு ரசிக்கிறோம்’ என்றார்.

நாகேஷ்வர ராவ். ஜமுனா, ரங்கா ராவ் உள்ளிட்ட தெலுங்கு நட்சத் திரங்களை வைத்து ‘மோக நோமு’ என்ற பெயரில் ‘களத்தூர் கண்ணம்மா’ படத் தைத் தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலை கள் தொடங்கி, விறுவிறுவென படமாக் கப்பட்டு முடிந்தது. அப்போது தெலுங்கில் பிரபலமாக இருந்த பத்மநாபம், கீதாஞ் சலி ஜோடியை வைத்து ஒரு பாட்டு எடுத் துச் சேர்த்தால் படம் சூப்பர் ஹிட் ஆகி விடும் என்று, தெலுங்குப் பட விநியோக தஸ்தர்கள் யோசனை சொன்னார்கள். உடனே, செட்டியார் இந்த யோசனையை படத்தின் இயக்குநர் யோகானந்திடம் சொல்லும்படி கூறினார்.

அந்த நாட்களில் காலையில் ஒரு படத்தை ஒரு ஸ்டுடியோவிலும், மதியம் மற்றொரு ஸ்டுடியோவில் வேறொரு படத்தையும் இயக்கிக் கொண்டிருந்த பரபரப்பான இயக்குநர் யோனாந்த். அவர் மூலம் பத்மநாபம், கீதாஞ்சலி இருவரையும் அணுகி, கால்ஷீட் பெற்று காமெடி கலந்த அந்தப் பாட்டு ஒரே நாளில் படமாக்கப்பட்டு, எடிட்டிங் செய்து காட்சி ஆர்டரில் போடப்பட்டது. அதை உடனே, திரையரங்கில் செட்டியார், யோகானந்த், எடிட்டர் விட்டல் ஆகிய மூன்று பேரும் அமர்ந்து பார்த் தார்கள். படம் பார்த்து முடித்ததும், ‘‘இந்தப் பாடல் கிளைமாக்ஸுக்கு முன் னால் வருகிறது. கிளைமாக்ஸ் வேகத்தை இது குறைக்கும். படத்துக்கு இடையே வேறு எந்த இடத்திலும் இணைப்பதற்கும் வாய்ப்பு இல்லை. அப்படியே இந்தப் பாட்டை தூக்கி வெச் சிடுங்க’’ என்றார் செட்டியார். அவ்வளவு செலவு செய்து, குறித்த நேரத்தில் விறுவிறுவென எடுக்கப்பட்ட பாடல், படத்தின் வேகம் கருதி வேண்டாம் என்று அப்படியே தூக்கி வைக்கப்பட்டது.

படம் நீளமாக இருந்தால் கதை வேகம் குறையும். படத்தின் நீளம் குறைவாக இருந்தால்தான் கதை விறுவிறுப்பாக போகும். இப்படியான அனுபவம் எல்லாம் எடிட்டிங் அறையில் சுவாசித்ததில்தான் எனக்குக் கிடைத்தது.

இன்னும் படம் பார்ப்போம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x