Published : 18 May 2016 11:18 AM
Last Updated : 18 May 2016 11:18 AM

சினிமா எடுத்துப் பார் 58: அருளாளர் ஆர்.எம்.வீ.!

நான் படப்பிடிப்பில் உதவிக்காக இருந்த ‘நெகமம்’ கந்தசாமி காட்டில் மாட்டிக் கொண்ட யூனிட் ஆட்களை மீட்டுக் கொண்டு வருவதற்குள் எங்களுக்கு உயிர் போய் உயிர் வந்துவிட்டது. வரும் வழியில் காட்டு எருமை ஜீப்பை துரத்த, அதுக்கு போக்கு காட்டிவிட்டு ‘நெகமம்’ கந்தசாமி மலை இடுக்குகளிலும், பள்ளத் திலும் வண்டியை ஓட்டி வந்திருக்கிறார். ஒருவழியாக எல்லோரும் பத்திரமாக வந்தபிறகுதான் எங்களுக்கு நிம்மதி வந்தது. சினிமா எடுத்துப் பார் என்பதற்கு ஏற்ப, இப்படி படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலும் திரில்லான விஷயங்கள் நடக்கும்.

நாமக்கல் பகுதியில் சில நாட்கள் தங்கி படப்பிடிப்பை நடத்தினோம். வழக்கம்போல யூனிட் ஆட்கள், நான், கேமராமேன் பாபு உள்ளிட்ட எல்லோரும் ஒரு இடத்தில் தங்கிக்கொண்டோம். ரஜினிக்கு, கொஞ்சம் பிரைவஸியாக இருக்கட்டுமே என்று ஊரைவிட்டு கொஞ்சம் தள்ளியிருந்த ஒரு விருந்தினர் மாளிகையில் அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனியே இருக்கும் அவ ருக்கு உதவியாக ஒப்பனைக் கலைஞர் முத்தப்பாவை அனுப்பியிருந்தோம்.

அடுத்த நாள் படப்பிடிப்புக்கான ஆயத்த வேலைகளை முடித்தபோது ஒரு யோசனை. ரஜினி தங்கியுள்ள விடுதிக்குச் சென்று அவரை பார்த்து விட்டு வருவோம் என்று தோன்றியது. என்னோடு மூர்த்தி, நாகப்பன் இருவரும் வந்தார்கள். விடுதிக்குச் சென்று கதவை தட்டினோம். ரஜினி கதவை திறந்தார்.

‘‘எங்கே முத்தப்பா?’’ என்று ரஜினி யிடம் கேட்டோம்.

‘‘உள்ளே வாங்க” என்று அழைத் துச் சென்றார் ரஜினி. முத்தப்பா, பலமான குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த தூக்கத் தில் இருந்தார். ரஜினி எங்களைப் பார்த்து, ‘‘நீங்க என்னை பார்த்துக்க முத்தப்பாவை அனுப்புனீங்க. நான்தான் இப்போ முத்தப்பாவை பார்த்துக் கிறேன்’’ என்று சிரித்தார். மறுநாள் படமாக்கவிருந்த காட்சிகள் பற்றிப் பேசிவிட்டு திரும்பினோம்.

படத்தின் தயாரிப்பாளர் அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அப்போது அமைச்சராக இருந்தார். தீவிர அரசியல் பணியிலும் கவனம் செலுத்தி வந்ததால், தன் மகள் செல்வியின் கணவரும், தனது மாப்பிள்ளையுமான தியாகராஜன் அவர்களை படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக நியமித்திருந்தார்.

தியாகராஜன் அமெரிக்கா சென்று எம்.பி.ஏ பட்டம் பெற்று வந்தவர். நாங்கள் சொல்லும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை கேட்டுக்கொள்வார். வெளிநாட்டு கம்பெனிகளைப் போல அதை குறிப்பெடுத்துக்கொண்டு, அடுத்த நாள் டைப் செய்து கொண்டுவருவார். உதவி இயக்குநர்கள், தயா ரிப்பு நிர்வாகி எல்லோரு டைய கையிலும் ஒவ்வொரு பேப்பரை கொடுப்பார். வேலை முடிய முடிய… டிக் அடித்துக்கொண்டே வருவார். அதுவே எங் களுக்கு பாதி பளுவை குறைத்தது. ஷூட்டிங்கில் எங்களிடம் வேலை வாங்கும் அதேநேரத்தில் அவரும் முழுமையாக தயாரிப்பு நிர்வாக வேலைகளை கற்றுக்கொண்டார்.

அந்த சுறுசுறுப்பு, நிர்வாகத் திறமைதான் இன்றைக்கு அவரது ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ கம்பெனி படத் தயாரிப்பில் முன்னிலையில் நிற்கிறது. தற்போது அஜித், தனுஷ் என்று முன்னணி நடிகர்களை வைத்து மிகப் பெரிய படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். மாமாவுக்கு ஏற்ற மாப்பிள்ளை. வெற்றி மாப்பிள்ளை. பாராட்டுகிறேன்!

‘ராணுவ வீரன்’ பட கிளைமாக்ஸை கதகளி நாட்டியத்தை வைத்து எடுக்கலாம் என்று ஆர்.எம்.வீ அவர்கள் சொன்னார் கள். அந்த நாட்டியத்தில் புகழ்பெற்ற நடராஜன் சகுந்தலா தம்பதிகளை நடனம் ஆட வைத்து அதை ரஜினி, தேவி இருவரையும் பார்க்கச் சொல்லி, பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

சென்னைக்கு அருகே உள்ள திருநீர்மலை கோயிலில் படப்பிடிப்பு. ஆயிரம் பேர் சூழ்ந்து நிற்க திருவிழா ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தோம். அப்போது அங்கே ஆர்.எம்.வீரப்பன் வந்தார்.

மலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘‘முத்துராமன்... மலைக்கு மேல் கோயி லில் படப்பிடிப்பை நடத்துறீங்க.மலை யைச் சுற்றி லைட்டிங் அமைக் கலையா?’’ என்று கேட்டார். ‘‘சார்.. அதுக்கு செலவு அதிகம் ஆகும்’’ என்றேன்.

‘‘என்ன முத்து ராமன்... அங்கும் லைட்டிங் போட் டால்தானே. கோயில் மலை மேல் இருப்பது தெரியும்!’’ என்று சொன்னார். உடனடியாக லைட் டிங் ஏற்பாடு செய்து படப்பிடிப்பை நடத்தி னோம். மலை மேலும் அழகாக ஒளிர்ந்தது. ஆனால், செலவும் அதிக மானது. தரத்துக்காக செலவு செய்யும் தயா ரிப்பாளர் ஆர்.எம்.வீ.

அருளாளர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் நாடக உலகை நன்கு அறிந்தவர். எல்லா நேரத்திலும் நாடகக் கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர். நாடகம்தான் அவருக்கு தாய்வீடு. என்னை அழைத்து, ‘‘முத்து ராமன்... நாடக கலைஞர்களோட ஒரு லிஸ்ட் வரும். அவர்களையும் இந்த திரு விழா காட்சி யில் பயன்படுத்துங்க. அவங் களுக்கு வேஷம் மட்டும்னு இல்லாம, வச னம் பேசுற விதமாவும் பயன்படுத்துங்க. அதுக்கு ஏற்ற மாதிரி சம்பளமும் கொடுக்கலாம்’’ என்றார். தான் வளர்ந்த பிறகும் நாடகக் கலைஞர்களுக்கு உதவியவர், அதனால் உயர்ந்தவர்.

‘ராணுவ வீரன்’ படத்துக்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன். சத்யா மூவீஸின் சமஸ்தான இசை யமைப்பாளர். கதை, திரைக்கதை ஜெகதீசன். வசனம் கிருஷ்ணா. பாடல் களை கவிஞர்கள் வாலி, புலமைபித்தன், முத்துலிங்கம் மூவரும் எழுதினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்தார்கள். இவர்களுக்கு நடிப்பில் ஈடுகொடுத்து நடித்தார், தேவி.

நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் தலைமையில் ஏவி.எம் அவர்களின் முழு ஆதரவோடு நன்கு இயங்கியது சென்னை கம்பன் கழகம். இஸ்மாயில் ஐயா காலத்துக்குப் பிறகு ஆர்.எம்.வீரப்பன் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ‘‘கம்பன் கழக வேலைகளை ஒருங் கிணைக்க சரியான நபர் வேண்டும். அதற்கு எனக்கு முத்து ராமனை கொடுத் தால் நன்றாக இருக்கும்!’’ என்று ஏவி.எம்.சரவ ணன் சாரிடம் ஆர்.எம்.வீ அவர் கள் கேட்க, சரவணன் சார் என்னை ஆர்.எம்.வீ அவர்களிடம் அனுப்பினார்.

நான் ஆர்.எம்.வீ அவர்களை சந்தித்து, ‘‘இது இலக்கியவாதிகள் சூழ்ந்திருக்கும் இடம். இங்கு எனக்கு என்ன வேலை?’’ என்று தயங்கினேன். ஆர்.எம்.வீ, ‘‘அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ இருந்தா எனக்கு உதவியாக இருக்கும்’’ என்று கூறி என்னை செயற்குழு உறுப்பினராக நியமித்துவிட்டார். அதுதான் ஆர்.எம்.வீ.

கடந்த 13 ஆண்டு காலமாக கம்பன் விழாவில் மேடை அலங்காரம் உள்ளிட்ட சில முக்கிய வேலைகளை என்னிடம் ஒப்படைக்கிறார்கள். ஓவியர் பாஸ்கர்தாஸ், பூக்கடை சாரங்கன், அவர் மகன் ரமேஷ், குமாரவேல் போன்றவர்கள் பெரும் உதவியாக இருந்து வருகிறார்கள். கம்பன் விழாவில் மூன்று நாட்கள் மக்கள் நிறைந்திருக்கும்போதே கம்பன் கவிதைகளை ஓவியமாக்கி அரங்கத்தை மாற்றி வித்தியாசப்படுத்துவோம். எப்போதும் நல்லப் பணிகள் செய்கிற நேரத்தை நல்ல நேரமாக கருதுவேன். அதைப் போல், கம்பன் கழகப் பணிகள் செய்யும்போது அதை நல்ல நேரமாக நினைக்கிறேன். இந்த இலக்கிய வட்டத்துக்குள் என்னை சேர்த்துக்கொண்ட ஆர்.எம்.வீ, ஏவி.எம். சரவணன் சார், கம்பன் கழகத்தாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து ஏவி.எம் தயாரிப்பில் ‘போக்கிரி ராஜா’ படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் ஒரிஜினல் ‘சொத்தலுன்னாரு ஜாக்ரத’ என்ற தெலுங்கு படம். அதில் கிருஷ்ணா, தேவி, கவிதா ஆகியோர் நடித்தனர். அந்தப் படத்தை ரஜினியை பார்க்கச் சொன்னோம்.

அவர் ‘அந்தப் படத்தை நான் பார்த் துட்டேன் சார்’’ என்றார். அதற்கு ஏவி.எம்.சரவணன் சார், ‘‘பொதுவா பார்த்திருப்பீங்க. நாம அந்தப் படத்தை தமிழ்ல எடுக்கலாமாங்கிற எண் ணத்தோட பாருங்க’’ என்றார். அதற்கும் ரஜினி ஒப்புக்கொண்டார். இரவு 10 மணிக்கு ஏவி.எம் ஸ்டுடியோவில் உள்ள தியேட்டரில் ரஜினி படம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ரஜினி படம் பார்க்க வரவில்லை. ஏன்?

- இன்னும் படம் பார்ப்போம்….

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x