Published : 13 Apr 2016 10:12 AM
Last Updated : 13 Apr 2016 10:12 AM

சினிமா எடுத்துப் பார் 54: தீப்பந்தத்தால் அடிபடும் ரஜினி!

‘கவிதாலயா’ தயாரித்த ‘நெற்றிக் கண்’ படத்தின் கதையும் கல கலப்பு, அப்பா ரஜினி கதா பாத்திரமும் கலகலப்பு. அதனால் படப் படிப்பு நடந்த செட்டே கலகலப்பு! அந்த அளவுக்கு சுவையாகவும், சுவா ரஸ்யமாகவும் படப்பிடிப்பு நடந்தது.

படத்தின் தயாரிப்பு நிர்வாகி நடராஜன் படப்பிடிப்புக்கு வருவார். எள்ளு என்றால் எண்ணெயையே தருவது மாதிரி எங்களுக்கு என்னெல்லாம் தேவையோ, அதை நாங்கள் கேட்பதற்கு முன்னாலேயே செய்து முடித்திருப்பார். ‘‘செலவைப் பற்றி கவலைப்படாம எடுங்க. ஏவி.எம் நிறுவனத்துக்கு எப்படி படம் எடுப்பீங்களோ? அந்த அளவுக்கு கிராண்டா செலவு பண்ணி எடுங்கன்னு பாலசந்தர் சார் சொல்லி அனுப்பினார்’’ என்பார். பாலசந்தர் சாரும் நடராஜனும் தந்த சுதந்திரம்தான் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க எங்களுக்கு உதவியது.

ஊட்டியில் எடுக்கப்பட்ட பாடல்தான் ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’. மெல்லிசையால் அழகு சேர்ந்திருப்பார் இளையராஜா. கவியரசு கண்ண தாசன் தன் தமிழால் கிரீடம் சூட்டியிருப்பார். படத்தில் மகன் ரஜினி, தனது காதலி மேனகாவுடன் சேர்ந்து பாடி மகிழ்வதைப் பார்க்கும்போது நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். ரஜினி, மேனகா இருவரும் கையில் எழுதி காட்டிக்கொள்வது போல காட்சி. அதன் பின் இருவரும் பாடுகிற அந்தப் பாட்டு.. படப்பிடிப்பின்போது மேனாகவுக்கு ‘‘இந்த எக்ஸ்பிரஷனை இப்படி செய், அப்படி செய்’’ என்று அவரது அம்மா ஆலோசனை கொடுத் துக்கொண்டே இருப்பார். சில நாயகிகளின் அம்மாக்கள் நன்றாக வரவேண்டிய காட்சியை ஏதாவது சொல்லிக்கொடுத்து கெடுத்துவிடு வார்கள். சிலர்தான் நடிப்பை மேலும் மெருகேற்றுவது போல உற்சாகப்படுத்துவார்கள். மேனகாவின் அம்மா உற்சாகப்படுத்துகிற டைப்!

இப்போது மேனகாவினுடைய மகள் கீர்த்தி சுரேஷும் நடிக்க வந்திருக்கிறார். அவருடைய அம்மா மேனகா உற்சாகப்படுத்துகிற அம்மாவாக இருக்கட்டும். வாழ்த்துகள்!

அப்பா ரஜினி பெரிய பிசினஸ்மேன். ஒரு கான்ட்ராக்ட்டில் சரத்பாபுவிடம் கையெ ழுத்து வாங்கி வரச் சொல்லி ஒரு பணியாளரை அனுப்புவார். அவரோ கையெழுத்து வாங்க முடியா மல் திரும்பி வருவார். ‘‘போய் கையெழுத்து வாங்கிட்டு வான்னு அனுப்பினா, இல்லைன்னு வந்து சொல்றதுக்கா உன்னை வேலைக்கு வச்சிருக்கேன்’’ன்னு திட்டிவிட்டு, அவரே கையெழுத்து வாங்க புறப்படுவார். கட் பண்ணினால், சரத்பாபு முன்னால் ஒரு பெண் நடனம் ஆடியபடியே கையெழுத்து வாங்கி விடுவார். இந்த ஏற்பாட்டை செய்ததே அப்பா ரஜினிதான். அவருக்குத்தான் பெண்கள் விஷயத்தில் ராசி உண்டே.

ரஜினியின் மகள் விஜயசாந்தியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருப்பார்கள். மாப்பிள்ளை பையன் சரத்பாபு. அப்பா ரஜினிக்கு உடம்பெல்லாம் நடுங்கும். அந்தச் சூழலை புரிந்து கொண்டு மகன் ரஜினியும், சரிதாவும் பாடும் பாடல், ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு.. மாமனுக்கோ காமன் மனசு’. கதையின் சூழலுக்கு பாட்டெழுது வதில் அரசர் அல்லவா நம் கவியரசர்! அந்தப் பாட்டில் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அப்பா ரஜினி வெளிப்படுத்தும் நடிப்பு கை தட்டி ரசிக்கும்படியாக அமைந்தது.

தமிழ் படங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்ற விஜயசாந்தி ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்தபோது ‘தென்றல்’, தெலுங்குப் படங்களில் விஸ்வரூபமெடுத்தபோது ‘புயல்’. அவருடைய வளர்ச்சியை பார்க்கும்போது எங்களுக்கெல்லாம் பெருமை!

சரத்பாபு, நான் இயக்கிய பல படங்களில் நடித் தவர். எங்கள் குழுவில் ஒருவர். அன்பு, கோபம் என எல்லா பாத்திரங்களுக்கும் பொருத்தமாக நடிக் கும் சிறந்த நடிகர். ‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினி யோடு அவர் நடித்தது வித்தியாசமாக இருந்தது.

‘கவிதாலயா’ நிறுவனம் தொடங்கி தயாரித்த முதல் திரைப்படம் ‘நெற்றிக்கண்’. கே.பாலசந்தர் சாரின் படங்கள், ‘அகர முதல எழுத்தெல் லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்ற திருக்குற ளோடு... திருவள்ளுவர் சிலை திரும்பும் தோற்றத் துடன்தான் ஆரம்பிக்கும். அந்த திருவள்ளுவர் சின் னத்தோடு உருவான கவிதாலயாவின் முதல் படத்தை நான் இயக்கியது எனக்குப் பெருமை.

60 ஆண்டுகளுக்கு முன் தேவகோட்டை ‘தே பிரித்தோ’ உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கும் போது, ஆண்டுவிழாவில் டாக்டர் மு.வரதராசனார் வந்து பேசினார். ‘ஒரு நாளைக்கு ஒரு குறளையாவது படிக்க வேண்டும். கூட்டங்களில் பேசும்போது ஒரு குறளையாவது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதன்படி அன்றே என் நன்றியுரையில் பள்ளியின் லட்சிய குறளான ‘உண்மையைக் கடைபிடி’ என்ற லட்சியத்தை வலியுறுத்தும்,

‘உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்’

என்ற குறளை சொன்னேன். அன்று தொடங்கி கடந்த 60 ஆண்டுகளாக நான் பேசும் கூட்டங்களில் குறள் சொல்லி வருகிறேன். குறளை சொல்லும் நான் குறளை சின்னமாகக் கொண்ட கவிதாலயாவின் இயக்குநரானேன். இது எனக்கு கிடைத்த பெருமையிலும் பெருமை!

நடிகை சரிதா எந்த மாதிரி பாத்திரம் கொடுத் தாலும் அதைப் பக்குவமாக நடித்து பெயர் வாங்கும் அபார திறமை கொண்டவர். எனக்குப் பிடித்த நடிகைகளில் அவரும் ஒருவர். ‘‘நீங்கள் நடிக்கும்போது உங்கள் கன்னத்தில் குழி விழுவது, நடிப்பை மேலும் கூட்டிக் காட்டுகிறது’’ என்பேன். ‘‘போங்க சார்..’’ என்று கூறுவார். கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை செய்யும் திறமை அவரிடம் இருந்தது. அப்படி இல்லையென்றால் பாலசந்தர் சாரின் அத்தனை படங்களில் நடித்திருக்க முடியாது. ‘நெற்றிக்கண்’ கதையின் திருப்பமும் அவர்தான்.

இப்படத்தில் அப்பா ரஜினியின் டிரைவராக கவுண்டமணி வருவார். நகைச்சுவையைத் தாண்டி சீரியஸாகவும் நடித்து மிரட்டியிருப்பார். இன் னொரு உண்மையைச் சொல்லணும்னா, செந்தில் இல்லாமல் சோலோவாக இந்தப் படத்தில் கவுண்டமணி ஸ்கோர் பண்ணினார்.

ஒருநாள் கே.பாலசந்தர் என்னிடம், ‘‘உன்னோட படத்துல வர்ற சண்டை காட்சி வித்தியாசமா இருக்கு. நீ சண்டை காட்சியை ஷூட் பண்ணும் போது நான் பார்க்க வரணும்’’ என்று கேட்டார். ‘‘தாராளமா வாங்க சார். வர்ற புதன்கிழமை குன்றத்தூர்ல நைட் ஷூட்டிங். ரஜினியும், வில்லன்களும் மோதுற காட்சி’’என்றேன்.

பாலசந்தர் சார், ‘‘நான் அங்க வந்து தொந்தரவு எல்லாம் பண்ண மாட்டேன். ஒரு ரசிகனா வந்து வேடிக்கை மட்டும்தான் பார்ப்பேன்’’ என்றார். சொன்ன மாதிரியே பாலசந்தர் சார் ஷூட்டிங் பார்க்க வந்தார். ரஜினியை நான்கு வில்லன்கள் தீப்பந்தத்தோடு அடிக்க நெருங்குவார்கள். ஒரு கட்டத்தில் ரஜினி தனக்குப் பின்னால் இருக்கும் தடுப்பைக் கடந்து போக முடியாத நிலையில் சிக்கிக்கொள்வார். அந்தச் சூழலில் ரஜினியின் முகத்தில் நாலு வில்லன்களும் சேர்ந்து தீப்பந்தத் தால் அடிப்பார்கள். அப்போது ‘‘கட்.. கட்’’ எனப் பின்னால் இருந்து ஒரு குரல். திரும்பி பார்த்தால், பாலசந்தர் சார். ‘ஷூட்டிங்ல தலையிடவே மாட் டேன்னு சொன்னவர், இப்படி கட்… கட் என்று சொல்லி தலையிடுறாரே’ என்று எனக்கு அதிர்ச்சி!

அடுத்து அங்கே என்ன நடந்தது?

- இன்னும் படம் பார்ப்போம்.

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x