Published : 08 Jul 2015 10:51 AM
Last Updated : 08 Jul 2015 10:51 AM

சினிமா எடுத்துப் பார் 16- மனிதநேயமுள்ள மங்கை: மனோரமா!

‘விஜயபுரி வீரன்’ படத்தில் நடித்து, நிஜத்திலும் வீரன் என்று பெயர் எடுத்த ஆனந்தனின் திறமையும், சுறுசுறுப்பும்தான் ‘வீரத்திரு மகன்’ படத்திலும் அவரை வீரன் அவ தாரம் எடுக்க வைத்தது. நடக்கச் சொன் னால் ஓடுவார். அப்படி ஒரு சுறுசுறுப்பு. குத்துச் சண்டை முதல் குதிரைச் சவாரி வரைக்கும் பிரமாதமாக செய்வார். இயக் குநர் திருலோகசந்தருக்கு ஆனந்தனை ரொம்ப பிடித்துப்போய் அவருக்கு இரண்டாவது படமும் கிடைத்தது.

அப்போது சண்டைக் காட்சிகளை சிறப்பாக இயக்குவதில் புகழ்பெற்றிருந் தவர் ஸ்டெண்ட் இயக்குநர் சுவாமிநாதன். ‘வீரத்திருமகன்’ படத்தின் ஸ்டெண்ட் மாஸ்டர் அவர்தான். திரைப்பட ‘பெப்சி’ அமைப்பின் தலைவராக இருந்து சிறந்த ஸ்டெண்ட் மாஸ்டர், இயக்குநர், தயாரிப் பாளர் என்று பெயர் பெற்றிருக்கும் ‘பெப்சி’ விஜயனின் தந்தைதான் சுவாமி நாதன். குத்துச் சண்டையைப் பொறுத்த வரைக்கும் திருலோகசந்தர் ‘பாக்ஸர்’ பட்டம் வென்றவர். சண்டைக் காட்சி களைப் படமாக்கும்போது அவரே முன் னின்று முக்கிய ஆலோசனைகளைக் கூறுவார். நடித்துக் காட்டுவதைப் போல ‘குத்து’ம் கொடுத்துக் காட்டுவார்.

குத்துச் சண்டையைப் படமாக்கும் போது டைமிங் ரொம்ப முக்கியம். டைமிங் கொஞ்சம் மிஸ் ஆனாலும் குத்து முகத் தில் விழுந்துவிடும். ஆனந்தன் சண்டைக் காட்சிகளை சரியாக எதிர்கொள்வார். திவானாக நடித்த ராமதாஸ் டைமிங் மிஸ் ஆகி முகத்தில் குத்து வாங்குவார். அதேபோல குதிரைச் சவாரியிலும் ராம தாஸின் வேகம் குறைவானது. முன்னால் குதிரையில் செல்லும் ராமதாஸை, ஆனந் தன் குதிரையில் துரத்திச் சென்று பிடிக்க வேண்டும்.

ஆனந்தன் வேகமாக செல்வ தால் ராமதாஸுக்கு முன்னால் சென்று விடும் நிலை ஏற்படும். அப்போது ஆனந் தன், ‘ராமதாஸ் குதிரையை விரட்டுங்க, விரட்டுங்க’ என்று கத்திக்கொண்டே பின்னால் போவார். ராமதாஸ் விரட்ட முயற்சிக்க, ராமதாஸ் சேனத்தோடு குதிரையில் இருந்து விழும் நிலை ஏற்பட்டுவிடும். சேஸ் காட்சி காமெடி காட்சிப் போல் ஆகிவிடும். இந்த சேஸை திருலோகசந்தர் எடிட்டிங்கில் சரிசெய்து பரபரப்பாக்குவார்.

படங்களில் முரட்டுத்தனமான நடிகர் என்று பெயர் வாங்கிய அசோகன் சண்டை யிட்டு நடிக்கும் காட்சிகளைப் படமாக் கும்போது பெரும்பாலும் உண்மையா கவே அடித்துவிடுவார். எதிரில் நின்று அவருடன் மோதுபவர் ரொம்பவே ஜாக்கிரதையாக நடிக்க வேண்டும்.

அட்டை கத்தியால்தான் வாள் சண்டை போடுகிறார்கள் என்பதை அந்தக் கால கட்டத்தில் மக்கள் கண்டுபிடித்துவிட்ட னர். அதன் பிறகு நிஜக் கத்தியை வைத்து வாள் சண்டையைப் படமாக்கத் தொடங் கினார்கள். ‘விஜயபுரி வீரன்’ படத்தி லேயே வாள் சண்டையை நேர்த்தியாக எடுத்து பெயர் வாங்கிய இயக்குநர் திருலோகசந்தர், இந்தப் படத்தில் மட்டும் குறைத்து எடுத்துவிடுவாரா என்ன? இப்படி எடுக்கப்பட்ட வாள் சண்டை, குதிரை சேஸ், குத்துச் சண்டை எல்லாவற்றையுமே ஒளிப்பதிவாளர் முத்துச்சாமி மிகத் திறமையுடன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்ப லோட்டிய தமிழன்’ போன்ற படங்களைத் தயாரித்து இயக்கிய பி.ஆர்.பந்துலு வின் மனைவி எம்.வி.ராஜம்மாள், ‘வீரத்திருமகன்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட பி.ஆர்.பந்துலு, தேவகோட்டை ரஸ்தா வில் ஏவி.எம் ஸ்டுடியோ இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எடுக்கப் பட்ட ‘நாம் இருவர்’ படத்தில் சோக பாத்திரத்தில் நடித்தவர்.

அவரை சந்தித்து, ‘5-ம் தேதி படப்பிடிப்பு. நீங்கள் 4-ம் தேதி இரவு தனுஷ்கோடி எக்ஸ்பிரஸில் தேவகோட்டை ரஸ்தா வந்துடுங்க. இந்தாங்க டிரெயின் டிக்கெட்’ என்று டிக்கெட்டை கொடுக்கும்போதே, படத் தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமோ, அந்தப் பாத்திரமாகவே சோகமாக மாறிவிடுவார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் மீண்டும் பழைய பந்துலுவாக அவரைப் பார்க்க முடியும்.

கிட்டத்தட்ட பந்துலுவைப் போலத் தான் அவரது மனைவி எம்.வி.ராஜம் மாளும். ‘வீரத்திருமகன்’ படப்பிடிப்பில் மேக்கப் அறைக்குள் வந்து நடிக்க வேண்டிய காட்சியை விவரமாக கேட்பார். அந்த சீனை கேட்டு முடித்த அடுத்த விநாடியே மேக்கப் அறையிலேயே அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். நாம் வேறு எதைப் பற்றி பேசினாலும் ராஜம்மாள் அந்த கதாபாத்திர பாணியி லேயே பதில் சொல்வார்.

ஆனந்தனின் மகள்களைப் பற்றி சொல்லியாக வேண்டும். நான் இயக்கிய பல படங்களில் நடித்த ’டிஸ்கோ’ சாந்தி யும், லலிதகுமாரியும் ஆனந்தனின் மகள் கள். என் படங்களில் இடம்பெற்ற நடனங்களில் அதிக பாடல்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடனம் ஆடி யவர் டிஸ்கோ சாந்தி. இந்த இரண்டு பேருக்குமே என்னிடம் அவ்வளவு மரியாதை!

‘வீரத்திருமகன்’ படத்தின் ஒரு பாடல் காட்சியைப் படமாக்க தலக்காடு என்ற இடத்துக்குச் சென்றோம். படத்தின் நாயகி சச்சு. படப்பிடிப்புத் தொடங்கியது. சச்சு காதில் மாட்டியிருந்த கொக்கித் தோடு கீழே விழுந்துவிட்டது. மணல் பகுதியில் தேடுவது கஷ்டமாக இருந்தது. மேக்கப் மேன் சூளைமேடு ‘இன்னொரு தோடு இருக்கு?’ என்று ஓடிவந்தார். அதை மாட்டி சில காட்சிகளை எடுத்தோம். அந்தத் தோடும் கீழே விழுந்து மண்ணுக்குள் புதைந்துவிட்டது.

‘இனி அட்டையில் கல்லை ஒட்டி சச்சு காதில் வைத்து தைக்க வேண்டியதுதான்’ என்று கேமரா மேன் சூளைமேடு சொன்னதும் எல்லோரும் பதறிவிட்டோம். ‘ஏம்பா புதுப் பொண்ணு அவங்களை இப்படியா கஷ்டப்படுத்துவது?’ என்று கூறி, கல் மாதிரி இருந்த ஜிகினாவை அட்டையில் ஒட்டி பின்னர் அதை சச்சுவின் காதில் ஒட்டி அந்த கன்டினியூடியை சரிசெய்து படமாக்கினோம். இப்படி சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட பெரிய கவனம் எடுத்துதான் ஷூட்டிங் செய்ய வேண்டியிருந்தது.

மைசூர் பிருந்தாவனம் கார்டனில் இருந்த கோட்டையில் சில காட்சிகளை எடுக்க முடிவு செய்தோம். திடீரென அங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்றார்கள். ‘அந்த இடத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் சென்னையில் எடுத்துக்கொள்ளலாம். படப்பிடிப்புக்கு வர வேண்டிய ஆச்சி மனோரமாவை இங்கு வர வேண்டாம் என்று தந்தி கொடுங்கள். டிரங்காலில் கூப்பிட்டும் செய்தியை சொல்லிடுங்க’ என்று ஏவி.எம். சரவணன் சார் புரொடக்‌ ஷன் மேனேஜரிடம் கூறினார்.

அங்கே எடுக்க வேண்டிய பாடல் காட்சிகளைப் படமாக்கும் வேலையில் இறங்கிவிட் டோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு கால்ஷீட் கொடுத்த சரியான தேதிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவோடு இரவாக காரில் வந்து நின்றார் ஆச்சி மனோரமா. எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. சரவணன் சார் புரொடக்‌ஷன் மேனேஜரை அழைத்து ‘என்னப்பா தந்தி கொடுங்கன்னு சொன்னேனே?’ என்று சத்தம் போட்டார். புரொடக்‌ஷன் மேனேஜரோ ‘வேலை பிஸியில் மறந்துட் டேன்’ என்றார்.

‘ஏதோ மறதியில் தப்பு நடந்து போச்சு. பெரிசு படுத்த வேண்டாம். அவரை வேலையில் இருந்து நீக்கிடா தீங்க. அவர் குடும்பம் கஷ்டப்படும்’ என்று புரொடக்‌ஷன் நிர்வாகிக்காக ஆச்சி மனோரமா, சரவணன் சாரிடம் வேண்டிக்கொண்டார். தான் ஒரு நல்ல நடிகை மட்டுமல்ல; மனித நேயமுள்ள மங்கை என்பதையும் நிரூபித்தார் ஆச்சி.

பெண் அழகா இருந்தா அனைவரும் விரும்புவார்கள். அழகில்லாமல் இருந்தால்? அது பற்றி அடுத்த வாரம்!

- இன்னும் படம் பார்ப்போம்…

முந்தைய அத்தியாயம்: >சினிமா எடுத்துப் பார் 15- நீலப்பட்டாடை கட்டி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x