Last Updated : 06 Nov, 2015 11:13 AM

 

Published : 06 Nov 2015 11:13 AM
Last Updated : 06 Nov 2015 11:13 AM

கலை முகம்: ‘அந்த’ நகைச்சுவையை ஆதரிக்க மாட்டேன்! - நடிகை மதுமிதா நேர்காணல்

சுத்தமாகவும் சத்தமாகவும் தமிழ் பேசுவது மதுமிதாவின் தனித் தன்மை. நகைச்சுவை நடிப்பில் வசன உச்சரிப்பு எத்தனை முக்கியமோ உடல்மொழிக்கும் சரிபாதி முக்கியத்துவம் இருக்கிறது என்பதில் மிகுந்த கவனம் கொண்டவர். அவரிடம் உரையாடியதிலிருந்து…

சினிமாவுக்குள் நுழைந்த பின்னணியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்…

அசல் தமிழ்ப் பெண் நான். படித்தது வளர்ந்தது எல்லாமே வண்ணாரப்பேட்டை. டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் வீட்டுச் சூழல் இடம் தரவில்லை. பள்ளிக்காலத்தில் புத்தகங்களை வாசிப்பதென்றால் கொள்ளை பிரியம். செய்தித்தாள்களைச் சத்தம்போட்டு கடகடவென்று வாசிப்பதைப் பார்த்து “நல்லா வாயாடுறே… நடிக்கப் போயேன்” என்றார்கள். அப்படித்தான் நடிப்பைத் தேர்ந்தெடுத்தேன். ராஜ் டிவியில் ஆர்த்தி - கணேஷ்கர் காம்பினேஷனில் ‘சூப்பர் காமெடி’ நிகழ்ச்சியில்தான் நான் அறிமுகமானேன்.

நகைச்சுவை நடிப்பை நான் விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. அதுவாக எனக்கு அமைந்துவிட்டது. நான் நடிக்க வந்தபோது எல்லா சேனல்களிலும் காமெடி ஷோக்கள் ரொம்பவே பிரபலம். எனது நடிப்பைப் பார்த்து இவள் காமெடிக்குச் சரியான ஆள் என்று எல்லோரும் காமெடியில் என்னை முக்கி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் எனக்கு எமோஷனல் கேரக்டர்கள் பண்ண வேண்டும் என்று அவ்வளவு ஆசை. அந்த மாதிரி கேரக்டர்கள் கொடுக்கவே யாரும் முன்வரவில்லை. ஆனால், ஒரு கேரக்டரை மறக்க முடியாது. ‘அத்திப்பூக்கள்’ சீரியலில் ’பானு’ என்ற பயங்கர எமோஷனல் கேரக்டரில் நடித்தேன். “நீயா இந்த மாதிரி ஒரு அழுமூஞ்சி கேரக்டர் பண்றே! அழ வெச்சுட்டியேம்மா” என்று அந்தத் தொடர் ஒளிபரப்பாகிவந்த நேரத்தில் பார்க்கிற ஒவ்வொருத்தரும் பாராட்டினார்கள். அதே வருடம்தான் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் திரையிலும் அறிமுகமானேன்.

அந்தப் படத்தில் ‘ஜாங்கிரி’ என்ற கதாபாத்திரம் வழியே அறிமுகமானீர்கள். பெண்ணை ‘ஜாங்கிரி’ என்ற உணவுப் பொருளின் பெயரால் அழைப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

விரும்புகிறேனா இல்லையா என்பதைவிட அதை வெறுக்கவில்லை என்று சொல்வேன். எந்த விஷேசமாக இருந்தாலும் முதலில் தருவது இனிப்புதானே. எனவே ‘ஜாங்கிரி மதுமிதா’ என்று சொல்வதை நான் அந்த ஆங்கிளில் எடுத்துகிறேன். ஆனால் நான் எதிர்பார்ப்பது அந்த கேரக்டரை முறியடிக்கிற மாதிரி, அதை எல்லோரும் மறக்கிற மாதிரி வேற கேரக்டர் கிடைக்க வேண்டும். ரியல் லைஃப்ல நான் ரொம்பவும் போல்டான பெண். என்னை நெருங்கி அத்தனை சீக்கிரம் யாரும் ஏடாகூடமாக வர்ணித்துவிட முடியாது. முகரை பேந்துடும்.

அதேபோல என்னிடம் நிஜமான அன்பையும் பாசத்தையும் காட்டுகிறவர்களுக்கு ஜாங்கிரி போல நான் இனிப்பானவள்தான். முக்கியமா, பெண்ணை உணவுப் பொருளாகவோ வேறு போகப்பொருளாக பார்ப்பதும் சிந்திப்பதும் அதையே எழுதி சினிமாவிலும் டிவியிலும் காட்சியாகப் படம் பிடிப்பதும் கூடாது என்ற சிந்தனை இயக்குநர்கள் மற்றும் காமெடி நடிகர்களுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

நல்ல தோற்றம், நடிப்புத் திறன் இருந்தும் நீங்கள் கதாநாயகியாக நடிக்க முயற்சிக்கவில்லையே ஏன்?

தொடக்கத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் வராமல் இல்லை. பிரபலமாகிவிட்ட பிறகும் வந்தன. அப்போதும் இப்போதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். நகைச்சுவை நடிப்பு என் மீது முத்திரையாக விழுந்துவிட்டது. மேலும், இன்று படம் பார்க்க வருகிறவர்கள் எல்லோருமே படத்தில் காமெடி இருக்கிறதா என்று பார்த்து வருகிறார்கள். முழுநீள காமெடிப் படங்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்குறாங்க. அந்த அளவுக்கு வேலையில டென்ஷன், குடும்பத்தில் டென்ஷன் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களைச் சிரிக்கவைப்பதன் மூலம் நமக்குக் கிடைக்கிற சந்தோஷத்துக்கு விலையே கிடையாது.

அதுவுமில்லாமல், நான் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்திருந்தால் ஒன்றிரண்டு படங்களோடு என் கேரியர் முடிந்திருக்கும். காரணம் இன்று பெரும்பாலான கதாநாயகிகளின் ஆயுட்காலமே அவ்வளவுதான். 20 ஆண்டுகாலம் கதாநாயகியாக நடித்த சாவித்திரி காலம் இனி வரவே வராது. இந்த இடத்தில் ஒன்றை நான் சொல்லியே ஆக வேண்டும். நான் கதாநாயகியாக நடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். கோவை சரளா அம்மாவுக்கு ‘சதி லீலாவதி’ படத்தில் அமைந்ததைப் போல நடிப்புக்குச் சவால் விடும் கதாநாயகி வேடம் என்றால் சம்பளமேகூட வேண்டாம். அதேபோல எனக்கு வில்லி கேரக்டரோ அல்லது கேரக்டர் ரோல்களோ கொடுத்துப்பாருங்கள். அப்புறம் மதுமிதா யாரென்று தெரியும்.

நகைச்சுவை நடிகை என்ற முத்திரை விழுந்துவிட்டதாகச் சொன்னீர்கள். அதேபோல உங்கள் மீது ஆபாசமான நகைச்சுவையைத் திணிக்கும் போக்கும் இருக்கிறதே?

உண்மைதான். அடல்ட் காமெடியை அறவே ஆதரிக்க மாட்டேன். என் மீது அடல்ட் காமெடி திணிக்கப்படும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. ‘எனக்குத் தொடர்ந்து இதுபோல் கேரக்டர் கொடுக்கிறீர்களே, என்னைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா?’ என்று கூட தைரியமாகக் கேட்டிருக்கிறேன். வளர்ந்துவரும் நிலையில் இருக்கும் நான் ஓரளவுக்குத்தான் போராட முடியும்.

அடல்ட் காமெடியில் நடிக்க வேண்டியிருந்தால் அதன் தன்மையை நீர்த்துப்போக எனது உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவற்றின் மூலம் செய்து அதை மென்மையான காமெடியாக மாற்றிவிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்தில் பேபி கேரக்டரைப் பார்த்த ரசிகர்கள், திரையுலகைச் சேர்ந்த பலரும் “உங்களைத் தவிர அந்த கேரக்டரை யார் செய்திருந்தாலும் அது ‘ஏ’தான்’ என்று பாராட்டினார்கள். அது உண்மையான பாராட்டு.

ஆனால் பல நேரங்களில் விபத்து நடந்துவிடுகிறது. ‘டிமாண்டி காலணி’ படத்தில் ‘பேபி’ என்ற பெண் இன்ஸ்பெக்ட்ராக நடித்தேன். இன்ஸ்பெக்டரிடம் ஒரு வழக்கில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ, என்னிடம் கடன் வாங்கிவிட்டு அதை அடைக்க முடியாமல் எனது வீட்டுக்கு உதவி வேலைகள் செய்துகொடுப்பதுபோல காட்சிகள் இருந்தன. ஆனால், நான் யூனிஃபார்ம் போட்டு நடித்தது; ஹீரோ வழக்கில் சிக்கிக்கொள்வது; போன்ற அனைத்தையும் வெட்டி எறிந்துவிட்டார்கள். பிறகு ‘பேபி’ கேரக்டருக்குத் தவறான முத்திரை தானாக வந்துவிட்டது. இப்படி நடக்கும்போது பிடிமானம் என் கையில் இல்லாமல் போய்விடுகிறது. நான் என்ன செய்ய?

ஆச்சி மனோரமா, கோவை சரளாவுக்குப் பிறகு பெண் நகைச்சுவை நடிகர்கள் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடிக்கவில்லையே ஏன்?

மனோரமா ஆச்சி, கோவை சரளாவுக்குப் பிறகு அடுத்த தலைமுறையில் பெண் நகைச்சுவை நடிகருக்கான இடம் தமிழ் சினிமாவில் இருக்கிறதா என்பதே எனக்குச் சந்தேகம். எத்தனை ஆண் நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் பத்துப் படங்களில் நடித்துவிட்டால் ஹிட் ஆகிவிடுகிறார்கள். அடுத்து ஹீரோ, தயாரிப்பாளர் என்று தங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார்கள். அது தவறில்லை.

ஆனால், அவர்களது நகைச்சுவையில் எங்களுக்குப் போதிய இடம் தருவதில்லை. பெண் நகைச்சுவை நடிகர் ஹீரோவுடன் தோழியாக ஏன் படம் முழுக்க வரக் கூடாது என்று யாரும் நினைப்பதில்லை. இது மாற வேண்டும். இது இயக்குநர், நகைச்சுவை நடிகர்கள் கையில்தான் இருக்கிறது.

தற்போது நடந்துவரும் படங்கள்?

சுந்தர்.சி தயாரிக்கும் ‘ஹலோ நான் பேய் பேசறேன்’ என்ற நகைச்சுவைப் படத்தில் நடிக்கிறேன். இதில் எனது ரோல் காமெடி கிடையாது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ பட இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ‘காஸ்மோரா’ என்ற படத்தில் நடிகர் கார்த்தியின் தங்கையாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x