Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

எவ்வளவு நாள்தான் நல்ல பெண்ணாவே நடிக்கிறது? : த்ரிஷாவின் கனவுகள்

‘உடம்பை இன்னும் ஃபிட்டா வைச்சுகணும், ஜிம்முக்கு போகணும், யோகா க்ளாஸ் போகணும், கோபத்தை குறைக்கணும்.. இப்படி நான் எல்லா வருஷமும் நியூ இயர் ரெஸல்யூஷன் வைச்சுகிறது உண்டு. ஆனா, கண்டிப்பா பண்றது இல்லை..’ தனது புதுவருட புத்தாண்டு உறுதிமொழியோடு தன் டிரேட்மார்க் புன்னகை மாறாமல் சிரிக்கிறார் த்ரிஷா. புத்தாண்டு வாழ்த்துகளுடன் பேசியதில் இருந்து..

மிஸ் சென்னை டூ விளம்பரம் டூ சினிமா.. எப்படி இருக்கிறது இந்தப் பயணம்?

எதிர்பார்க்காதது. ‘எதையும் ப்ளான் பண்ணாம பண்ணக்கூடாது’ன்னு சொல்வாங்க.. (சிரித்து) ஆனா, நான் எதையும் ப்ளான் பண்ணி பண்றதில்லை. எது எது நடக்குதோ அதுக்கு தகுந்தாப்பல என்னை மாத்திக்குவேன். நல்லாத்தான் இருந்தது, நல்லாத்தான் இருக்கு. இனிமேலும் நல்லாத்தான் இருக்கும்.

இவ்வளவு பெரிய இடத்தை நான் அடைஞ்சதுக்கு மிஸ் சென்னை போட்டி பெரிய ப்ளாட்பார்மா இருந்துச்சு. மிஸ் சென்னை போட்டில ஜெயிச்ச உடனே, எல்லாரோட பார்வையும் என் மீது வந்துச்சு. நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. நான் எதையுமே ஒத்துக்கல. நிறைய விளம்பர படங்கள், பேஷன் ஷோக்கள் பண்ணினதுல எனக்கு கேமிரா பயம் போயிருச்சு. அப்புறம் சினிமா வாய்ப்புகள் தமிழ், தெலுங்கு, இந்தி, இப்போ புதுசா கன்னட படங்கள்னு வாய்ப்புகள் கிடைச்சு, நிக்க முடியாம ஓடிக்கிட்டே இருக்கேன்.

தமிழ் திரையுலகில் 12வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு சினிமா கற்றுக்கொடுத்தது என்ன?

(சிரித்துக்கொண்டே) நிறைய கத்துக்கிட்டேன். முக்கியமா பொறுமையைக் கத்துக்கிட்டேன்னு சொல்லலாம். நிறைய மன உளைச்ச லோடு இருக்குற நேரத்தை எல்லாம் எப்படி கடந்தேன் இப்போ நினைக்கும்போது ஆச்சரியமா இருக்கு. எல்லாரும் தூங்குற நேரத்துல திடீர்னு நைர் ஷுட் அப்படினு சொல்லுவாங்க. 2 நாள், 3 நாள்னு தொடர்ச்சியா ஷுட் இருக்கும், வெளிநாட்டுல கடும் குளிர்ல ஷுட் இருக்கும், அனல் வெயில்ல ஷுட் வைப்பாங்க, இப்படி பல சூழ்நிலைகளைக் கடந்து வந்திருக்கேன். நினைச்ச நேரத்திற்கு எங்கேயும் போக முடியாது. என்னால ஷுட் பாதிக்கும். இப்படி நிறைய இழந்தாலும், நிறைய கத்துக்க முடிஞ்சுது. நிறைய புது நண்பர்கள் கிடைச்சாங்க.

’மிஸ் சென்னை’ பட்டம் பெற்றபோது, சினிமா வாய்ப்போடு உங்களைத் தேடி வந்த சுவாரஸ்யமான நிகழ்வு, பரிசு?

‘மிஸ் சென்னை’ பட்டம் வாங்கிட்டு வந்து நைட் தூங்கி எழுந்திருச்சேன். அன்றைக்கு காலைல எங்க வீட்டுக்கு இரண்டு தயாரிப்பாளர்கள் படத்துல நடிக்கிறீங்களா அப்படினு கேட்டு வந்தாங்க. அப்புறமா கெளதம் மேனன் 'மின்னலே' அப்படினு ஒரு படம் பண்றேன். ஹீரோயினா பண்றீங்களானு கேட்டார். அப்போ என்னோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே “ஸ்கூல் தான் படிக்கிறா. அட்லீஸ்ட் ஒரு டிகிரி வாங்கட்டும். அப்புறமா பாத்துக்கலாம்” அப்படினு சொல்லிட்டாங்க. ஏன்னா மிஸ் சென்னை பட்டம் ஜெயிச்சப்போ எனக்கு 16 வயசுதான். அப்புறமாவும் நிறைய வாய்ப்புகள் வந்துச்சு.

தாய்மொழியில் நடிக்கும்போது கிடைக்கும் திருப்தி மற்ற மொழிப் படங்களில் கிடைக்கிறதா?

எல்லா மொழிகளிலும் வாய்ப்பு வரப்ப அதை பயன்படுத்திகறதுல தப்பு ஒண்ணும் இல்ல. கண்டிப்பா தாய்மொழியில நடிக்கிறப்போ கிடைக்கிற சௌகரியம் மற்ற மொழிகளில்ல கிடைக்கிறது இல்ல. ஆனா, நாம எல்லாம் இந்தியர்கள் தானே. இப்போ முதல் முறையா கன்னட படத்துல நடிச்சுட்டு இருக்கேன். இதேமாதிரி எல்லா மொழிகளிலும் நடிக்கும்போது புது மொழியை கத்துக்க முடியுது. நிறைய புதுசுபுதுசா மனிதர்களை பார்க்க முடியுது, பழக முடியுது. என்னை பொருத்தவரை மொழிகளுக்கு அப்பாற்பட்டது தான் நடிப்பு. கமல் சாரை பாருங்க.. எந்த மொழிப் படமா இருந்தாலும் நடிக்கிறார். அந்த மாதிரி தான், நல்ல கதை அமைஞ்சா மட்டும் போதும்.

கமல், சீரஞ்சீவி என ஜோடி சேர்ந்தீர்கள். சிம்பு, ஜீவாவுடனும் நடிக்கிறீர்கள். என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?

என்னை பொருத்தவரை சீனியர், ஜுனியர் அவ்வளவு தான் வித்தியாசம்னு நினைக்கிறேன். கமல், சீரஞ்சீவி கூட நடிக்ககிறப்போ கொஞ்சம் நெர்வஸா இருக்கும். சிம்பு, ஜீவா கூட நடிக்கிறப்போ இருக்காது. அதுவும் கமல் சார் கூட நடிக்கிறப்போ எல்லாம் நிறைய பயந்திருக்கேன். ஏன்னா ரொம்ப பெர் ஃபக்‌ஷன் பார்ப்பார். சினிமாவா பாத்தீங்கன்னா சீனியர், ஜுனியர் ரெண்டு பேருமே ஒரே மாதிரியான உழைப்பைதான் கொடுக்கிறாங்க. மத்த எந்த வித்தியாசமும் எனக்கு தெரியலை.

‘ஜோடி’ படத்தில் நடிக்கும்போது இந்த உயரத்தை எட்டுவோம் என நினைத்தீர்களா?

’ஜோடி’ படத்துல நான் நடிச்சுது ஒரு விபத்து. அந்த டைம்ல ஒரு மாடலிங் அசைன்மெண்ட் அப்படின்னு நினைச்சு பண்ணினது. அப்ப எல்லாம் நாம ஒரு நடிகையா வருவோம்னு நினைச்சது கூட கிடையாது. பெரிய நடிகையா வரும் எண்ணம் இருந்திருந்தா அந்தப் படமே பண்ணியிருக்க மாட்டேன். ஏன்னா ஜாலியா பண்ணலாம்னு நினைச்சு பண்ணினேன். அப்புறம்தான் தோணுச்சு நாம பண்ணியிருக்க கூடாது அப்படின்னு. மற்றபடி அதுவும் ஒரு அனுபவம் தானே.

உங்களின் ட்ரீம் ரோல்?

‘படையப்பா' ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரு வித்தியாசமான ரோலா இருக்கணும். அந்த மாதிரி ரோல்ல நடிக்க கேட்டாங்கன்னா உடனே ஒத்துக்குவேன். ஏன்னா ரொம்ப அமைதியாவோ, பப்லியாவோ, நல்ல பெண்ணாகவே எவ்வளவு நாள்தான் நடிக்கிறது. ஒரு மாற்றத்திற்கு கொஞ்சம் வில்லி மாதிரியான ரோல் நடிச்சுதான் பார்க்கலாம்னு ப்ளான்ல இருக்கேன். பாக்கலாம் என்ன நடக்குதுனு.

உங்கள் காதல் குறித்த இவ்வளவு கிசுகிசுக்கள், இழுத்தடிப்பு அவசியம்தானா? பட்டென்று விஷயத்தை உடைத்து விடலாம் இல்லையா?

உடைக்காதபோதே அப்படி எதுவும் இல்லனுதானே அர்த்தம். நான் ரொம்ப நேர்மையா இருக்குற ஆள். மறைக்கணும் அப்படிங்குற எண்ணம் எல்லாம் இல்ல. இவர்தான் எனக்கு ரைட்டான ஆள், இது தான் சரியான நேரம் அப்படின்னு எனக்கு என்றைக்கு தோணுதோ அப்போ கண்டிப்பா நான் சொல்லுவேன். அது 2014லகூட இருக்கலாம். அத சொல்ல முடியாது இல்லயா...?

உங்க அப்பாவின் மரணம் உங்களை எந்த அளவிற்கு பாதித்தது?

(சிறிய மெளனத்திற்குப் பின்) கண்டிப்பாக பாதிச்சது. ஏன்னா எனக்கு அப்பாவோட நிறைய நிறைவேறாத ஆசைகள் இருக்கு. ஹைதராபாத்துல எங்கப்பா வேலை பாத்துட்டு இருக்குறப்போ, “வா. இன்னிக்கு ஒண்ணா டின்னர் சாப்பிடலாம்”னு நிறைய தடவ கூப்பிட்டு இருக்கார். ஆனா, நான் ஷுட்டிங்ல பிஸியாக இருந்துட்டேன். ஷுட்டிங் முடிச்சுட்டு போய் எப்படா குளிச்சுட்டு தூங்குவோம்னுதான் நினைப்பேன். அப்பொ எல்லாம் அப்பாதானே இன்னொரு நாள் போய் சாப்பிடலாம்னு நினைச்சு ஈஸியா விட்டுட்டேன். இப்போ நினைச்சாக் கூட, நாம அப்பா கூப்பிட்டப்ப போயிருக்கணும்னு தோணும்.

அப்பாதானே.. அப்புறமா போயிக்கலாம்... அப்புறமா பாத்துக்கலாம்னு நிறைய விஷயங்களை விட்டுட்டேன். என்னோட வாழ்க்கைல அந்த அப்புறமா வராமலேயே போயிடுச்சு. ஐ மிஸ் மை ஃபாதர், லாட் (த்ரிஷாவின் கண்கள் மெல்லப் பனிக்கின்றன)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x