Last Updated : 27 Jun, 2014 11:11 AM

 

Published : 27 Jun 2014 11:11 AM
Last Updated : 27 Jun 2014 11:11 AM

எண்ணங்கள்: இடைவேளை இல்லாத தமிழ் சினிமா சாத்தியமா?

சமீபத்தில் 91 நிமிடங்களே ஓடும் கிராவிட்டி என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 50 நிமிடங்கள் கடந்ததும் திடீரென இடைவேளை (படத்தில் இல்லாத) விடப்பட்டுப் படத்துடன் ஒன்றியிருந்த அனைவரையும் தொந்தரவு செய்தது. ஆனால் பார்வையாளர்களால் ஒன்றும் செய்ய முடியாது. திரையரங்குகளின் பொருளாதாரம் இடைவேளை இல்லாமல் படத்தை ஓட்டினால் தாங்காது. 91 நிமிடப் படங்களுக்கே இடைவேளை என்ற தடை இல்லாமல் ஓடக்கூடிய வாய்ப்பு இல்லாதபோது, குறைந்தது 125 முதல் 165 நிமிடம் ஓடும் நம் படங்களுக்கு இடைவேளை இல்லாமல் எடுக்க முடியாது.

இடைவேளை இல்லாமல் வரும் ஹாலிவுட் படங்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் இடைவேளை விடும் பழக்கம் உள்ள நம் ஊரில், தமிழ்ப் படங்களுக்குச் சரியான இடத்தில் இடைவேளை விட வேண்டியது அவசியமாகிறது. இந்த இடைவேளை வருவதால்தான் ஒரு படத்தை மொத்தமாகத் தொடர்ந்து பார்த்து அப்படத்தைப் பற்றிய முடிவெடுக்காமல், முதல் பாதி முடிந்தவுடன் ஒரு அபிப்பிராயம், இரண்டாம் பாதி முடிந்தவுடன் இன்னொரு அபிப்பிராயம் மற்றும் மொத்தப் படத்துக்குமான ஒரு அபிப்பிராயம் எனப் பார்வையாளர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வழக்கம் இருந்துவருகிறது

படங்களின் வெற்றி இப்படிப் பிரித்துப் பார்க்கும் ‘மவுத் டாக்’ கருத்துகளுக்கு ஏற்ப, கீழே கண்டுள்ள அட்டவணையில் பார்வையாளர்களின் மதிப்பீடுகள் மாறுவதை நாம் தொடர்ந்து காணமுடியும்.

ஒவ்வொரு படத்துக்கும், இவ்வாறு இரண்டு பாதிகளின் முடிவில் ஒரு எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டு, படத்தைப் பற்றி ஒரு மொத்தக் கருத்தும், அதன் அடிப்படையில் வியாபாரக் கருத்தும் வெளிவந்து படத்தின் வெற்றி தோல்விகள் நிர்ணமாகின்றன.

இந்த அட்டவணையைக் கவனித்தால் ஒன்று புலப்படும். ஒரு படம் முதல் பாதியில் சொதப்பியிருந்தாலும், இரண்டாம் பாதி, பார்வையாளர்களைத் திருப்திபடுத்தினால் அந்தப் படத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

ஆனால் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்திற்கு, முதல் பாதியும், இரண்டாம் பாதியும் நன்றாக அமைவது அவசியமாகிறது. அது முடியாவிட்டால், குறைந்தது இரண்டாம் பாதியாவது சிறப்பாக வந்திருந்தால், அரங்கைவிட்டு வெளியே செல்லும் மக்கள் திருப்தியுடன் செல்வார்கள், படத்தைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களும் ’ ‘மவுத் டாக்’காக வெளிவரும். சில படங்களைக் கடைசி 20 நிமிடம் அல்லது கிளைமாக்ஸ் காட்சிகள்கூடக் காப்பாற்றும். எனவே, எப்படி ஒரு படத்தை முடிக்கிறோம் என்பதைப் பொறுத்தும் படத்தின் தலையெழுத்து மாற வாய்ப்புள்ளது.

வழிகாட்டும் திரைக்கதை

இவ்வாறு, முதல் பாதி இரண்டாம் பாதி என இரண்டு விதமாக ஒரு படத்தை மக்கள் பிரித்துப் பார்த்துக் கருத்து சொல்லும் நம் நாட்டில், உலக வணிக சினிமாவின் பிதாமகன் ஸிட் ஃபீல்ட், ஒரு நல்ல, சுவாரசியமான திரைக்கதைக்கு இருக்க வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்

ஸிட் ஃபீல்டி-ன் திரைக்கதைக் கட்டமைப்பு 120 பக்கங்களுக்குள் அடங்கக்கூடிய, இடைவேளை இல்லாமல் சொல்லப்படும் 90 முதல் 110 நிமிட ஹாலிவுட் படங்களுக்கு ஏதுவானது. நம் படங்கள் இடைவேளையுடன் குறைந்தது 125 முதல் 165 நிமிடங்கள் ஓட வேண்டியவை. சிறப்பான கதையுடன், 4 அல்லது 5 பாடல் காட்சிகளும், 2 முதல் 4 சண்டை காட்சிகளும், போதுமான நகைச்சுவைக் காட்சிகளும், ஒரு ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ தரும் இடைவேளைக் காட்சிகளும் நம் வெகுஜனப் படங்களுக்குத் தேவை. எனவே ஸிட் ஃபீல்ட் வலியுறுத்தும் திரைக்கதை கட்டமைப்பை நமது தேவைக்கு ஏற்பக் கொஞ்சம் மாற்ற வேண்டியது அவசியமாகிறது.

முதல் பாதியில் , கதாபாத்திரங்களைச் சரியாக அறிமுகம் செய்து, கதைக் களத்தை முறைப்படி நிலைநாட்டி, ஒரு போராட்டத்தை முன்வைத்துக் காட்சிகளை நகர்த்திச் சரியான ஒரு எதிர்பார்புடன் இடைவேளை விட வேண்டியது இங்கே அவசியம். இடைவேளைக்குப் பின், அந்தப் போராட் டத்தின் அவசியத்தை உணர்த்தும் காட்சிகளும், அந்தப் போராட்டத்தினால் வரும் விளைவுகளைப் பற்றிய காட்சிகளையும் கொண்டு படத்தை ஒரு சிறப்பான முடிவை நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.

மேலே சொன்ன தேவை களைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படும் ஒரு திரைக்கதையின் கட்டமைப்பு மேலே உள்ள அட்டவணையில் காட்டப்படுவது போல், ஸிட் ஃபீல்ட்-ன் கட்டமைப்பில் இருந்து சிறிது மாறும்.

இது ஸிட் ஃபீல்ட் காட்டும் ஹாலிவுட்டின் மூன்று அங்கச் செயல்பாடுகள் கொண்ட திரைக்கதைகள் நம்மைத் திருப்திப்படுத்தாது. எனவே மேலே சொன்ன 6 செயல்பாடுகளை மனதில் வைத்துக் கதைகளைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

“மக்களுக்குத் தற்போது பத்து நிமிடங்களுக்கு ஒரு திருப்பமும், கிளைமாக்ஸ் போன்ற காட்சிகளும் திரைப்படங்களில் தேவைப்படுகிறது.” இது 1970-களில் ஒரு பேட்டியில், எம்.ஜி.ஆர். சொன்னது. 40 வருடங்களுக்குப் பிறகும், மக்களிடம் இந்த எதிர்பார்ப்பில் எந்த மாற்றமும் இல்லை.

மேலே சொன்ன 6 செயல் பாடுகளை மனதில் வைத்து, திரைக்கதையில் மாற்றங்கள் செய்து, படங்களைச் சிறப்பாக எடுத்தால், இரண்டு பாதியிலும் மக்களை மகிழ்விக்கும், வெற்றி பெரிதாகும்.

படம் உதவி: ஞானம், தொடர்புக்கு: dhananjayang@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x