Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

இதுதான் என் வீடு!
- மனம் திறக்கும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் நயன்தாரா காலடி எடுத்து வைத்து ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இன்றைக்கும் தமிழ் சினிமாவின் டாபிகல் நாயகி நயன்தான். புலனாய்வு பத்திரிகைகளிலும் போஸ்டர் நியூஸ் போடுகிற அளவுக்கு நயன்தாரா பற்றிய சர்ச்சைகள் மொய்த்தாலும் ஒருபக்கம் உதயநிதி, அடுத்த பக்கம் ஆர்யா, மறுபடியும் சிம்பு என அம்மணியின் மார்க்கெட் இன்றைக்கும் செம பீக்! வெளிப்படையான பேட்டி கொடுத்து நிறைய நாட்கள் ஆனநிலையில் நீண்ட முயற்சிக்கு பிறகு நம்மிடம் பேச சம்மதித்தார் நயன்தாரா. சிறு புன்னகையில் 'ம்' சொல்லி நயன்தாரா பேட்டியைத் தொடங்கினார். ஒரு நடிகையாக மட்டுமின்றி... நல்லது கெட்டதுகளைக் கடந்து நிமிர்ந்திருக்கும் ஒரு பெண்ணாகவும் பிரமிக்கவைக்கும் நயன்தாராவின் பேட்டியிலிருந்து…


‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் பவித்ரா என்கிற பாத்திரமாமே... அதைப் பற்றி சொல்லுங்க


பவித்ரா ஒரு மிடில் கிளாஸ் பேமிலி பொண்ணு. படம் பாக்குறவங்க எல்லாருமே பவித்ராவோடு ஏதாவது ஒரு விஷயத்தில ஒன்றிடுவாங்க. தப்பு சரின்னு யார் என்ன சொன்னாலும் தான் செய்யிறது சரின்னு தன்னோட மனசாட்சிய நம்புற பொண்ணு. மனசுக்கு சரின்னு தோணினால் மற்ற எதையும் சட்டையே பண்ணாம செஞ்சுட்டு போற கேரக்டர். அதனால பவித்ரா கேரக்டரை ரொம்ப ரசிச்சு பண்ணியிருக்கேன்.


‘ஆதவன்' படத்துல சின்ன ரோல்ல பார்த்த உதயநிதி ஸ்டாலினுக்கும் ‘இது கதிர்வேலன் காதல்' ஹீரோ உதயநிதி ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் உணர்றீங்க?


‘ஆதவன்' படத்துல அவரைப் பார்த்தப்போ நடிப்பை ஒரு தொழிலா பண்ணப் போறார்னு நினைக்கல. ஏதோ ஒரு ஆசைக்காக படத்துல தலை காட்டுறார்னு நினைச்சேன். ‘இது கதிர்வேலன் காதல்' படத்தில் கதிர்வேலன் கேரக்டரை உள்வாங்கி சூப்பரா பண்ணியிருக்கார். எனக்கு ஷூட்டிங்ல அவரோட சின்சியாரிட்டி ரொம்ப பிடிக்கும்.


மறுபடியும் உதயநிதி ஸ்டாலினுடன் நண்பேன்டா’ படத்துல நடிக்கிறீங்கன்னு கேள்விப்பட்டோம்…


‘பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்துல ராஜேஷோடு பணியாற்றியவர் ஜெகதீஷ். உதயநிதி, பாலசுப்ரமணியெம், ஜெகதீஷ் இந்த டீம் சேர்ந்து படம் பண்றாங்கன்னு தெரிஞ்சதும் கதையைக் கேட்டேன். என்னோட கேரக்டர் ரொம்ப சூப்பரா இருந்தது. உடனே ஓ.கே. சொல்லிட்டேன்.


காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள்லயே நடிச்சுட்டு இருக்கீங்களே, என்ன காரணம்?


கண்டிப்பா அப்படி இல்ல. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்', ‘நண்பேன்டா' படங்கள் காமெடினு சொல்லலாம். ஆனால் ‘இது கதிர்வேலன் காதல்' முழுக்க காமெடி படம்னு சொல்ல முடியாது. குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி ஒரு ஜனரஞ்சகமான படம். காமெடி, காதல், எமோஷன்ஸ் இப்படி எல்லாமே சேர்ந்த படம்.
எனக்கு காமெடி படங்கள் பண்றது பிடிச்சிருக்கு. அதற்காக காமெடி படங்களே பண்ணிட்டு இருந்தா போராடிச்சிரும். என்னைப் பொறுத்தவரை கதையில நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கா, நம்ம கேரக்டர் பளிச்னு ரீச்சாகுமான்னுதான் பார்ப்பேன்.


‘கஹானி' தமிழ் ரீமேக்கான ‘அனாமிகா' படத்தைப் பத்தி சொல்லுங்க?


‘அனாமிகா' முழுக்க ரீமேக் படம்னு சொல்ல முடியாது. சில மாற்றங்கள் செஞ்சிருக்காங்க. கதையை எல்லாம் மாத்தல. பாத்திரங்கள்ல மாற்றங்கள் பண்ணியிருக்கார். நான் ஒப்பந்தமான உடனே இயக்குநர் என்ன சொல்றாரோ அதைக் கேட்க ஆரம்பிச்சுடுவேன். எப்போதுமே நான் இயக்குநரின் நடிகை.


எல்லா தென்னிந்திய மொழிகள்லயும் நடிச்சாச்சு. எப்போ உங்களை இந்தியில் பார்க்கலாம்?


எனக்கு அதில் விருப்பமில்லை. எனக்கு தென்னிந்திய மொழிப் படங்கள்ல நடிக்கிறது பிடிச்சிருக்கு. ஒரு மொழி மட்டுமல்ல 4 மொழிகளிலும் நடிக்கிறேன். இதுதான் என்னோட இடம், தென்னிந்திய சினிமாவை என்னோட வீடு மாதிரி நினைக்கிறேன். இங்க நடிக்கிறதே எனக்குத் திருப்தியா இருக்கு. இந்தில நடிக்கணும் அப்படிங்குற ஆசை இப்போதைக்கு இல்லை. வந்தா சொல்றேன்.
நீண்ட நாள் கழிச்சு நடிச்ச ‘ராஜா ராணி' படத்துக்காக இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா?
சத்தியமா சொல்றேன், இவ்வளவு அன்பு பாசத்தோட பெரிய வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கல. இந்த கதைல நாம நடிச்சா, நாம திரும்பி நடிக்க வர்றதுக்கு கரெக்டா இருக்கும்னு நான் ‘ராஜா ராணி' படம் பண்ணல. எனக்குக் கதை ரொம்ப பிடிச்சிருந்தது பண்ணினேன். ஆனா, அதுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு ரொம்ப பெரிசு.


10 வருடங்கள்ல நிறைய படங்கள் நடிச்சாச்சு. உங்களோட மனசுக்கு ரொம்ப பிடிச்ச படம் எது?

உங்களோட ட்ரீம் ரோல்தான் என்ன?
எனக்கு ட்ரீம் ரோல் அப்படினு எதுவும் கிடையாது. தொடர்ச்சியா படங்கள் பண்ணிட்டு இருக்கேன். நயன்தாராவுக்கு இந்த ரோல் சரியா இருக்கும்னு நினைச்சு வர்ற படங்கள், கதையைக் கேட்பேன். எனக்குப் பிடிச்சிருந்தா பண்றேன். எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிச்சுதானே பண்றேன். அப்படியிருக்குறப்போ பிடிச்ச படம்னு ஒரு படத்தை மட்டும் சொல்ல முடியாது. தமிழ்ல நான் நடிச்சதுல ‘ராஜா ராணி', ‘யாரடி நீ மோகினி', ‘பில்லா' இப்படி நிறைய படங்கள் பிடிக்கும். இதுவரைக்கும் நாம இந்த மாதிரி ஒரு ரோல்ல நடிக்கணும்னு நான் யோசிச்சதே கிடையாது.


உங்களோட வாழ்க்கையில நிறைய பிரச்சினைகளை சந்திச்சிருக்கீங்க. அதுல இருந்து நீங்க கத்துக்கிட்டது என்ன?

நிறைய கத்துக்கிட்டேன். நம்ம வாழ்க்கையில பிரச்சினை வர்றதே அதுல இருந்து பாடம் கத்துக்கத்தான். சினிமா உலகம் எப்படி பணம், புகழைக் கொடுக்குதோ அதுக்கும் மேல நிறைய பாடங்களைக் கொடுக்கும். அந்த வகையில் நான் நிறைய கத்துக்கிட்டேன்.


வழக்கமான கேள்விதான்... திருமணம் எப்போ?


நான் சமாளிக்கிறதா நினைக்க வேண்டாம். இப்போ நிறைய படங்கள் தொடர்ச்சியா பண்ணிட்டே இருக்கேன். திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவே இல்ல. இந்த நிமிஷம் ரொம்ப நிறைவா என்னோட வேலையை செஞ்சுகிட்டு இருக்கேன். கல்யாணத்துக்காக நான் காத்திருக்கலை. ஆனா, அதேநேரம் கல்யாணத்தைத் தவிர்க்க விரும்புற ஆளும் நான் இல்லை. எல்லாம் நடக்குறப்ப நல்லபடி நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x